பாடல் #736: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடின்
வண்டுஇச் சிக்கும் மலர்க்குழல் மாதரார்
கண்டுஇச் சிக்கும்நல்ல காயமு மாமே.
விளக்கம்:
உயிர்களின் உடலுக்குள் மலத்துவாரத்திற்கும் பிறவிக்குறிக்கும் நடுவிலுள்ள மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி பாடல் #734 இல் உள்ளபடி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியின் மேல் சிந்தனையை வைத்துக்கொண்டே சுழுமுனை நாடியின் வழியாக ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களாக மேல் நோக்கி எடுத்து வந்து தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் சேர்த்துவிட்டால் வண்டுகள் தேனை விரும்பி சுற்றும் அழகிய மலர்களை தலையில் அணிந்திருக்கும் பெண்கள் கூட இப்படிப்பட்ட உடல் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் அளவிற்கு சாதகரின் உடல் அழகாகிவிடும்.
கருத்து: மூலாதாரத்திலுள்ள குண்டலினியை எழுப்பி ஆறு சக்கரங்களுக்கும் சக்தியூட்டி ஏழாவதான சகஸ்ரதளத்தில் சேர்ப்பவர்களின் உடல் அழகாகிவிடும்.
