பாடல் #627: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)
மூலத்து மேலது முற்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.
விளக்கம்:
மூலாதாரத்திற்கு மேலுள்ள சுவாதிஷ்டானத்தில் கும்பக முறைப்படி அடக்கி வைத்த மூச்சுக்காற்றை அதற்கு மேலுள்ள மணிப்பூரகத்தில் கலந்து பின்பு சுழுமுனை வழியே மேலே ஏற்றிச் சென்று புருவ மத்தியிலிருக்கும் ஆக்ஞா சக்கரத்துடன் சேர்த்தால் அங்கே நெற்றிக்கு நேரில் அண்டவெளி அழகிய வடிவங்களாக காட்சியளிக்கும். அந்தக் காட்சியுடன் மனதை ஒன்றி இருப்பது சமாதி நிலை ஆகும்.

சுழுமுனை என்பதும் ஆக்கினை சக்கரம் என்பதும் ஒரே இடம் என்கிறார்கள். எது சரி
சுழுமுனை என்பது வேறு ஆக்கினை சக்கரம் என்பது வேறு.சுழுமுனை என்பது மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரை உள்ள ஏழு சக்கரங்களுக்கும் உள்ள பாதை சுழுமுனை எனப்படும். ஆக்கினை என்பது 6 ஆவது சக்கரமாகும்.