பாடல் #623: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)
மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.
விளக்கம்:
தியான நிலையில் பஞ்ச பூதங்களான ஐந்து மண்டலங்கள், அவைகள் இருக்கும் பன்னிரண்டு இடங்கள் ஆறு ஆதாரச் சக்கரங்களில் உள்ள அட்சரங்களை இடமாகக் கொண்ட நாற்பத்தெட்டு தேவதைகள் அனைத்தும் காணலாம். அவைகள் அனைத்திற்கும் நடுவில் ஓடும் இறைவன் மேல் மனதை ஒருமுகப்படுத்தினால் சமாதி அடையலாம்.
ஐந்து மண்டலங்கள்: 1. பிருத்வி மண்டலம் – நிலம் 2. அப்பு மண்டலம் – நீர் 3. ஆகாய மண்டலம் – வானம் 4. வாயு மண்டலம் – காற்று 5. தேயு மண்டலம் – நெருப்பு
பன்னிரண்டு இடங்கள்: 1. மூலாதாரம் 2. சுவாதிஷ்டானம் 3. மணிப்பூரகம் 4. அநாகதம் 5. விசுத்தி 6. அண்ணம் (வாயின் உட்புற மேல்பகுதி) 7. ஆக்ஞா 8. சகஸ்ரதளம் 9. சிரசுக்கு மேலிடம் 10. துவாதசாந்தம் ஆகிய சித்தாந்த சரவெளிகளும் (அறிவிற்கு உட்பட்ட இடம்), அதற்கு மேலுள்ள பரவெளியிலுள்ள இரண்டு ஆதாரங்களான தியானபிந்துவும் ஆகும்.
