பாடல் #619: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்தமி லாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.
விளக்கம்;
சக்தியாகிய ஒளியையும் சிவமாகிய ஒலியையும் புருவமத்தியில் ஒருமுகப்படுத்தி ஆழ்ந்து இருந்தால் அட்டாங்க யோகத்தின் இறுதியான சமாதி கைகூடும். அவ்வாறு சமாதி நிலையை அடைந்துவிட்டால் அழிவில்லாத அறிவின் உண்மைப் பொருளான சிவம் அழகிய ஜோதியாய் தமக்குள்ளேயே தோன்றிடும்.
