பாடல் #561: மூன்றாம் தந்திரம் – 4. ஆதனம் (யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும்)
ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனமுங் கொள்ளலு மாமே.
விளக்கம்:
பத்மாசனத்தில் உள்ளது போல் பாதங்கள் இரண்டையும் தொடையின் மேல் மாற்றி வைத்து கைகள் இரண்டையும் அத்தொடைகளின் இடைவெளியில் நுழைத்துத் தரையில் ஊன்றி முக்கிக் கொண்டு உடம்பின் பாரத்தைக் கைகளில் தாங்கி உடலைத் தூக்கி நிறுத்தி அசையாமல் இருப்பதே குக்குட ஆசனம் செய்யும் முறை ஆகும்.
குக்குட ஆசனத்தின் பலன்கள்:
தியானம் மற்றும் யோக வழிகளில் செல்பவர்களுக்கு ஏற்படும் செரிமானப் பிரச்சினைகளை சரிசெய்து வயிற்றில் ஏற்படும் சூட்டையும் தணிக்க குக்குட ஆசனம் உதவும்.
