பாடல் #55

பாடல் #55: பாயிரம் – 2. வேதச் சிறப்பு

ஆறங்க மாய்வரு மாமறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வார்இல்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

விளக்கம்:

ஆறு அங்கங்களாக விளங்கும் மாபெரும் வேதங்களை (சிட்சை, கற்பம், வியாபகரணம், சந்தோபிசிதம், சோதிடம், நிருத்தம்) ஓதி அருளிய இறைவனை தனது உடம்பினுள்ளே ஒரு அங்கமாக வைத்து அவனின் தன்மைகளை உணர்பவர்கள் யாரும் இல்லை. அவனைத் தமது உடலிலிருந்து வெளியே இருக்கும் ஒரு அங்கமாக எண்ணிக்கொண்டு பலவித செயல்களைச் செய்கின்றனர். அப்படிச் செய்து கிடைத்த பயன்களையே உயர்வாகக் கருதி அதையே பெருக்கிக் கொண்டு இறைவனை உணராமலேயே வாழ்கின்றார்கள்.

வேதத்தின் ஆறு அங்கங்கள்:

  1. சிட்சை – வேதத்தின் எழுத்து மற்றும் ஒலி முதலியவற்றைப் பற்றிச் சொல்வது.
  2. வியாகரணம் – சொற்களின் இலக்கணத்தை ஆராய்வது.
  3. சந்தம் – செய்யுள் இலக்கணம் பற்றிச் சொல்வது.
  4. சோதிடம் – கோள் நிலைகளை வைத்து காலத்தை ஆராய்வது.
  5. நிருக்தம் – வேதச் சொற்களுக்கு பொருள் கூறுவது.
  6. கல்பம் – வேதத்தின் செயல் முறைகளை உரைப்பது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.