பாடல் #1837: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்
றார்த்தெம தீசனருட் சேவடி யென்றன்
மூர்த்தியை மூவா முதலுரு வாய்நின்ற
தீர்த்தனை யாருந் திதித்துண ராரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஏததுவர மாமலர தூவித தொழுதுநின
றாரததெம தீசனருட செவடி யெனறன
மூரததியை மூவா முதலுரு வாயநினற
தீரததனை யாருந திதிததுண ராரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று
ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன்
மூர்த்தியை மூவா முதல் உரு ஆய் நின்ற
தீர்த்தனை யாரும் திதித்து உணராரே.
பதப்பொருள்:
ஏத்துவர் (இறைவனை போற்றி துதித்து) மா (நறுமணம் மிக்க) மலர் (மலர்களை) தூவி (தூவி) தொழுது (அருச்சனை செய்து) நின்று (கை கூப்பி நின்று)
ஆர்த்து (பெரும் கூச்சலிட்டு) எமது (எமது பெருமானாகிய) ஈசன் (இறைவனின்) அருள் (திருவருள் வேண்டி) சேவடி (அவனின் சிவந்த திருவடியை வணங்குவார்கள்) என்றன் (எமது)
மூர்த்தியை (தலைவனாகிய இறைவனை) மூவா (முதுமை என்பதே இல்லாதவனை) முதல் (அனைத்திற்கும் முதலான ஆதியின்) உரு (வடிவம்) ஆய் (ஆகவே) நின்ற (நின்று அருள்கின்றவனை)
தீர்த்தனை (பரிசுத்தமான புண்ணியனை) யாரும் (எவரும்) திதித்து (தமது ஆசைகளையும் புலன்களையும் அடக்கி ஒழுக்கத்தை கடைபிடித்து) உணராரே (உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்).
விளக்கம்:
இறைவனின் திருவருளை வேண்டி போற்றி துதித்து, நறுமணம் மிக்க மலர்களை தூவி அருச்சனை செய்து, கை கூப்பி நின்று, திருநாமத்தை சொல்லி பெரும் கூச்சலிட்டு இறைவனின் சிவந்த திருவடிகளை வணங்குகின்றார்கள். ஆனால் எமது தலைவனும், அனைத்திற்கும் முதல்வனும், முதுமை என்பதே இல்லாதவனும், அனைத்திற்கும் முதலான ஆதியின் வடிவமாகவும் இருக்கின்ற பரிசுத்தமான புண்ணியனாகிய இறைவனை தமது ஆசைகளையும் புலன்களையும் அடக்கி ஒழுக்கத்தை கடைபிடித்து உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.
