பாடல் #1834

பாடல் #1834: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
வுள்ளக் கடல்புக்கு வோர்தம்மைப் பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதா
ரள்ளற் கடலு ளழுந்துகின் றாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெளளக கடலுள விரிசடை நநதிககு
வுளளக கடலபுககு வொரதமமைப பூககொணடு
களளக கடலவிடடுக கைதொழ மாடடாதா
ரளளற கடலு ளழுநதுகின றாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வெள்ள கடல் உள் விரி சடை நந்திக்கு
உள்ள கடல் புக்குவோர் தம்மை பூ கொண்டு
கள்ள கடல் விட்டு கை தொழ மாட்டாதார்
அள்ளல் கடல் உள் அழுந்துகின்றாரே.

பதப்பொருள்:

வெள்ள (பெரும் நீர் நிறைந்த) கடல் (கடலைப் போல இருக்கின்ற கங்கை நதியை) உள் (தன்னுள் அடக்கி இருக்கின்ற) விரி (விரிந்த) சடை (சடையைக் கொண்ட) நந்திக்கு (குருநாதனாகிய இறைவனுக்கு)
உள்ள (தமது உள்ளமாகிய) கடல் (கடலில்) புக்குவோர் (தமது பேரன்பினால் இறைவனை தமக்குள் வைக்கும் வல்லமை கொண்ட உண்மை ஞானிகள்) தம்மை (தம்மை) பூ (பூவும் நீரும்) கொண்டு (கொண்டு அருச்சனை செய்து)
கள்ள (மாயையில் சுழலும் வாழ்க்கையாகிய) கடல் (கடலை) விட்டு (விட்டு விட்டு) கை (இரு கைகளையும் கூப்பி) தொழ (தொழுது வணங்க) மாட்டாதார் (மறுக்கின்ற மக்கள்)
அள்ளல் (கர்மங்களை சேர்த்துக் கொண்டே இருக்கின்ற) கடல் (கடலாகிய வாழ்க்கையின்) உள் (உள்ளேயே) அழுந்துகின்றாரே (மூழ்கி தமது பிறவியைத் தொலைத்து விடுகின்றனர்).

விளக்கம்:

கடல் வெள்ளம் போன்ற நீரைக் கொண்ட கங்கையை தமது விரிந்த சடைக்குள் அடக்கி ஒரு சிறு நதியாக தருகின்ற குருநாதராகிய இறைவனை தமது பேரன்பினால் உள்ளமாகிய கடலுக்குள் வைக்கும் வல்லமை கொண்ட உண்மை ஞானிகளை நாடிச் சென்று பூவையும் நீரையும் அர்ப்பணித்து மாயையில் சுழலுகின்ற வாழ்க்கையாகிய கடலை விட்டு விட்டு இரு கைகளையும் கூப்பி வணங்கித் தொழுவதற்கு மறுக்கின்ற மக்கள் மேலும் மேலும் கர்மங்களை சேர்த்துக் கொண்டே இருக்கின்ற வாழ்க்கைக் கடலுக்குள் மூழ்கி பல வித துன்பங்களை அனுபவித்து தமது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.