பாடல் #1742

பாடல் #1742: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

நாணுநல் லீசானம் நடுவுச்சி தானாகுந்
தாணுவின் றன்முகந் தற்புருட மாகுங்
காணு மகோர மிருதையங் குய்யமாம்
வாணுறு வாமமாஞ் சத்திநற் பாதமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாணுநல லீசானம நடுவுசசி தானாகுந
தாணுவின றனமுகந தறபுருட மாகுங
காணு மகொர மிருதையங குயயமாம
வாணுறு வாமமாஞ சததிநற பாதமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாணு நல் ஈசானம் நடு உச்சி தான் ஆகும்
தாணுவின் தன் முகம் தற்புருடம் ஆகும்
காணும் அகோரம் இருதையம் குய்யம் ஆம்
வாண் உறு வாமம் ஆம் சத்தி நல் பாதமே.

பதப்பொருள்:

நாணு (அறிவு வடிவமாக) நல் (நன்மையைக் கொடுக்கின்ற) ஈசானம் (இறைவனின் ஈசான முகமானது) நடு (நடுவில்) உச்சி (உச்சியாக இருக்கின்ற) தான் (இறைவியின் தலை உச்சி) ஆகும் (ஆகும்)
தாணுவின் (முக்தியாகிய நிலை பேற்றை கொடுக்கின்ற) தன் (இறைவியின்) முகம் (திருமுகமே) தற்புருடம் (இறைவனது தற்புருடமாகிய திருமுகம்) ஆகும் (ஆகும்)
காணும் (கண்களால் அருளைக் கொடுக்கின்ற) அகோரம் (இறைவனின் அகோர முகமானது) இருதையம் (இறைவியின் இருதயமாகும்) குய்யம் (இறைவியின் கீழ்) ஆம் (பகுதியாக இருப்பது)
வாண் (அமிழ்தம் பெற்று) உறு (மேல் நிலையைக் கொடுக்கின்ற) வாமம் (இறைவனின் வாமதேவ முகம்) ஆம் (ஆகும்) சத்தி (இறைவனின் சத்தியோசாத முகமானது) நல் (நன்மையைக் கொடுக்கின்ற) பாதமே (இறைவியின் திருவடிகளாகும்).

விளக்கம்:

இறைவனின் ஐந்து திருமுகங்களோடு பாடல் #1741 இல் உள்ளபடி இறைவி சென்று சேரும்போது அறிவு வடிவமாக இருக்கின்ற இறைவனின் ஈசான முகம் இறைவியின் தலை உச்சியாகவும், முக்தியாகிய நிலை பேற்றைக் கொடுக்கின்ற இறைவனது தற்புருட முகம் இறைவியின் திருமுகமாகவும், கண்களால் அருளைக் கொடுக்கின்ற இறைவனின் அகோர முகம் இறைவியின் இருதயமாகவும், அமிழ்தம் பெற்று மேல் நிலையைக் கொடுக்கின்ற இறைவனின் வாமதேவ முகம் இறைவியின் கீழ் பகுதியாகவும், நன்மையைக் கொடுக்கின்ற இறைவனின் சத்தியோசாத முகம் இறைவியின் திருவடிகளாகவும் விளங்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.