பாடல் #1740

பாடல் #1740: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

இருளார்ந்த கண்டமு மேந்து மழுவுஞ்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையு
மருளார்ந்த சிந்தையெம் மாதிப் பிரானைத்
தெருளார்ந் தென்னுள்ளே தெளிந்திருந் தேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இருளாரநத கணடமு மெநது மழுவுஞ
சுருளாரநத செஞசடைச சொதிப பிறையு
மருளாரநத சிநதையெம மாதிப பிரானைத
தெருளாரந தெனனுளளெ தெளிநதிருந தெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருள் ஆர்ந்த செம் சடை சோதி பிறையும்
அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை
தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே.

பதப்பொருள்:

இருள் (ஆலகால விஷத்தை அருந்தியதால் கருமை) ஆர்ந்த (நிறைந்த) கண்டமும் (திருக்கழுத்தும்) ஏந்து (திருக்கரத்தில் ஏந்தி இருக்கின்ற) மழுவும் (பாசங்களை அறுக்கின்ற மழுவும்)
சுருள் (சுருள்) ஆர்ந்த (நிறைந்த) செம் (செம்மையான) சடை (சடையும்) சோதி (அந்த சடையின் மேல் ஜோதியாகப் பிரகாசிக்கும்) பிறையும் (பிறை நிலாவும்)
அருள் (அருள்) ஆர்ந்த (நிறைந்த) சிந்தை (சிந்தையும் கொண்டு விளங்குகின்ற) எம் (எமது) ஆதி (ஆதிப் பரம்பொருளாகிய) பிரானை (இறைவனை)
தெருள் (தெளிவான அறிவினால்) ஆர்ந்து (ஆராய்ந்து) என் (எனக்கு) உள்ளே (உள்ளே) தெளிந்து (தெளிவாக உணர்ந்து) இருந்தேனே (இருக்கின்றேன்).

விளக்கம்:

ஆலகால விஷத்தை அருந்தியதால் கருமை நிறைந்த திருக்கழுத்தும், திருக்கரத்தில் ஏந்தி இருக்கின்ற பாசங்களை அறுக்கின்ற மழுவும், சுருள் நிறைந்த செம்மையான சடையும், அந்த சடையின் மேல் ஜோதியாகப் பிரகாசிக்கும் பிறை நிலாவும் அருள் நிறைந்த சிந்தையும் கொண்டு விளங்குகின்ற எமது ஆதிப் பரம்பொருளாகிய இறைவனை தெளிவான அறிவினால் ஆராய்ந்து எனக்கு உள்ளே தெளிவாக உணர்ந்து இருக்கின்றேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.