பாடல் #1738

பாடல் #1738: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

தத்துவ மாவ தருவஞ் சராசரந்
தத்துவ மாவ துருவஞ் சுகோதைய
தத்துவ மெல்லாஞ் சகலமு மாய்நிற்குந்
தத்துவ மாகுஞ் சதாசிவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தததுவ மாவ தருவஞ சராசரந
தததுவ மாவ துருவஞ சுகொதைய
தததுவ மெலலாஞ சகலமு மாயநிறகுந
தததுவ மாகுஞ சதாசிவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தத்துவம் ஆவது அருவம் சராசரம்
தத்துவம் ஆவது உருவம் சுகோதையம்
தத்துவம் எல்லாம் சகலமும் ஆய் நிற்கும்
தத்துவம் ஆகும் சதா சிவம் தானே.

பதப்பொருள்:

தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) ஆவது (ஆக இருப்பதே) அருவம் (உருவம் இல்லாமல்) சராசரம் (அசையும் பொருள் அசையாத பொருள் என்று அனைத்திலும் இருக்கின்றது)
தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) ஆவது (ஆக இருப்பதே) உருவம் (உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உருவம் கொடுத்து) சுகோதையம் (அவை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது)
தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) எல்லாம் (எல்லாமே) சகலமும் (அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்தும்) ஆய் (ஆக) நிற்கும் (நிற்கின்றது)
தத்துவம் (முப்பத்தாறு தத்துவங்கள்) ஆகும் (ஆக இருப்பதே) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருள்) தானே (தான் ஆகும்).

விளக்கம்:

உருவம் இல்லாமல் அசையும் பொருள் அசையாத பொருள் என்று அனைத்திலும் இருப்பதும், உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உருவம் கொடுத்து அவை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கு ஆதாரமாக இருப்பதும், அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்துமாகவும் இருப்பதே முப்பத்தாறு தத்துவங்களாகும். இந்த முப்பத்தாறு தத்துவங்களாகவும் இருப்பது சதா சிவப் பரம்பொருளே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.