பாடல் #1735

பாடல் #1735: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

நடுவு கிழக்குத் தெற்குத்தர மேற்கு
நடுவு படிகநற் குங்கும வன்ன
மடைவுள வஞ்சனஞ் செவ்வரத் தம்பா
லடியற் கருளிய முகமிவை யைந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நடுவு கிழககுத தெறகுததர மெறகு
நடுவு படிகநற குஙகும வனன
மடைவுள வஞசனஞ செவவரத தமபா
லடியற கருளிய முகமிவை யைநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நடுவு கிழக்கு தெற்கு உத்தர மேற்கு
நடுவு படிக நல் குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ் அரத்தம் பால்
அடியற்கு அருளிய முகம் இவை ஐந்தே.

பதப்பொருள்:

நடுவு (நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசானம் முகம்) கிழக்கு (கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருடம் முகம்) தெற்கு (தெற்கு நோக்கி இருக்கின்ற அகோரம் முகம்) உத்தர (வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவம் முகம்) மேற்கு (மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாதம் முகம் ஆகிய ஐந்து முகங்களில்)
நடுவு (ஈசானம் முகம்) படிக (படிக நிறத்திலும்) நல் (தற்புருடம் முகம் நல்ல) குங்கும (குங்கும) வன்னம் (நிறத்திலும்)
அடைவு (தெற்கு நோக்கி) உள (இருக்கின்ற அகோரம் முகம்) அஞ்சனம் (கருப்பு நிறத்திலும்) செவ் (வாமதேவம் முகம் செம்மையான) அரத்தம் (அரத்தம் பூவைப் பொன்ற சிகப்பு நிறத்திலும்) பால் (சத்தியோசாதம் முகம் பாலைப் போன்ற வெண்மையான நிறத்திலும் இருக்கின்றதே)
அடியற்கு (தம்மை வணங்கும் அடியவர்களுக்காக) அருளிய (இறைவன் அருளிய) முகம் (திருமுகங்கள்) இவை (இவை) ஐந்தே (ஐந்தும் ஆகும்).

விளக்கம்:

தம்மை வணங்கும் அடியவர்களுக்காக இறைவன் அருளிய திருமுகங்கள் ஐந்தாகும். இவை முறையே நடுவில் மேல் நோக்கி இருக்கின்ற ஈசானம் முகம், கிழக்கு நோக்கி இருக்கின்ற தற்புருடம் முகம், தெற்கு நோக்கி இருக்கின்ற அகோரம் முகம், வடக்கு நோக்கி இருக்கின்ற வாமதேவம் முகம், மேற்கு நோக்கி இருக்கின்ற சத்தியோசாதம் முகம் ஆகும். ஈசானம் முகம் படிக நிறத்திலும், தற்புருடம் முகம் நல்ல குங்கும நிறத்திலும், அகோரம் முகம் கருப்பு நிறத்திலும், வாமதேவம் முகம் செம்மையான அரத்தம் பூவைப் பொன்ற சிகப்பு நிறத்திலும், சத்தியோசாதம் முகம் பாலைப் போன்ற வெண்மையான நிறத்திலும் இருக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.