பாடல் #1734

பாடல் #1734: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

சமையத் தெழுந்த வவத்தை யீரைந்துள
சமையத் தெழுந்த விராசி யீராறுள
சமையத் தெழுந்த சதிர் ரீரெட்டுள
சமையத் தெழுந்த சதாசிவன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சமையத தெழுநத வவததை யீரைநதுள
சமையத தெழுநத விராசி யீராறுள
சமையத தெழுநத சதிர ரீரெடடுள
சமையத தெழுநத சதாசிவன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சமயத்து எழுந்த அவத்தை ஈர் ஐந்து உள
சமயத்து எழுந்த இராசி ஈர் ஆறு உள
சமயத்து எழுந்த சதிர் ஈர் எட்டு உள
சமயத்து எழுந்த சதா சிவம் தானே.

பதப்பொருள்:

சமயத்து (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களில்) எழுந்த (எழுந்தது) அவத்தை (ஆன்மாக்கள் அனுபவிக்க வேண்டியதாகிய) ஈர் (மேலாலவத்தை கீழாலவத்தை ஆகிய இரண்டிலும்) ஐந்து (ஐந்து ஐந்தாக மொத்தம் பத்து) உள (உள்ளது)
சமயத்து (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களில்) எழுந்த (எழுந்தது) இராசி (இராசிகள்) ஈர் (இரண்டும்) ஆறு (ஆறும் பெருக்கி மொத்தம் 12) உள (உள்ளது)
சமயத்து (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களில்) எழுந்த (எழுந்தது) சதிர் (இறையருளால் கிடைக்கின்ற பேறுகள்) ஈர் (இரண்டும்) எட்டு (எட்டும் பெருக்கி மொத்தம் 16) உள (உள்ளது)
சமயத்து (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களில்) எழுந்த (எழுந்த இவை அனைத்தும்) சதா (சதா) சிவம் (சிவப் பரம்பொருள்) தானே (தான் ஆகும்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழிகளாகிய சமயங்களிருந்து எழுவது ஆன்மாக்கள் அனுபவிக்க வேண்டியதாகிய ஐந்து விதமான மேலாலவத்தைகளும், ஐந்து விதமான கீழாலவத்தைகளும், 12 இராசிகளும், இறையருளால் கிடைக்கக் கூடிய 16 விதமான பேறுகளும் உள்ளது. இந்த சமயங்கள் அனைத்தும் சதா சிவப் பரம்பொருளே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.