பாடல் #1720

பாடல் #1720: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

துன்றுந் தயிர்நெய் பால்தூய மெழுகுடன்
கன்றிய செப்புக் கனலிரதஞ் சலம்
வன்றிறல் செங்கல் வடிவுடை வில்லம்பொன்
தென்றியங் கொன்றை தெளிசிவ லிங்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

துனறுந தயிரநெய பாலதூய மெழுகுடன
கனறிய செபபுக கனலிரதஞ சலம
வனறிறல செஙகல வடிவுடை விலலமபொன
தெனறியங கொனறை தெளிசிவ லிஙகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

துன்றும் தயிர் நெய் பால் தூய மெழுகு உடன்
கன்றிய செப்பு கனல் இரதம் சலம்
வன் திறல் செங்கல் வடிவு உடை வில்லம் பொன்
தென்றி அம் கொன்றை தெளி சிவ இலிங்கமே.

பதப்பொருள்:

துன்றும் (முறைப்படி பசும் பாலில் செய்த தூய்மையான) தயிர் (தயிரும்) நெய் (நெய்யும்) பால் (பாலும்) தூய (கலப்படமில்லாத) மெழுகு (அரக்கும்) உடன் (இவற்றுடன்)
கன்றிய (முறைப்படி புடம் போட்ட) செப்பு (செம்பும்) கனல் (நெருப்பும்) இரதம் (பழச்சாறும்) சலம் (தூய்மையான அபிஷேக நீரும்)
வன் (வலிமையாக) திறல் (சுடப்பட்டு இறுகிய) செங்கல் (செம்மையான கல்லும்) வடிவு (அழகிய வடிவத்தை) உடை (உடைய) வில்லம் (வில்வ இலையும்) பொன் (தங்கமும்)
தென்றி (மென்மையுடன் தேன் நிறைந்த) அம் (அழகிய) கொன்றை (கொன்றை மலர்களும் வைத்து வழிபடுவது) தெளி (மனதை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு உதவும்) சிவ (சிவபெருமானின்) இலிங்கமே (பரிபூரண இலிங்கம் ஆகும்).

விளக்கம்:

முறைப்படி பசும் பாலில் செய்த தூய்மையான தயிரும், நெய்யும், பாலும், கலப்படமில்லாத அரக்கும், இவற்றுடன் முறைப்படி புடம் போட்ட செம்பும், நெருப்பும் (விளக்கு, யாகம், போன்றவை), பழச்சாறும், தூய்மையான அபிஷேக நீரும், வலிமையாக சுடப்பட்டு இறுகிய செம்மையான கல்லும், அழகிய வடிவத்தை உடைய வில்வ இலையும், தங்கமும், மென்மையுடன் தேன் நிறைந்த அழகிய கொன்றை மலர்களும் வைத்து வழிபடுவது மனதை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு உதவும் சிவபெருமானின் பரிபூரண இலிங்கம் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.