பாடல் #1471

பாடல் #1471: ஐந்தாம் தந்திரம் – 8. ஞானம் (இறைவனை அடைவதற்கு எந்த வழியில் சென்றாலும் அதில் ஞானம் இருக்க வேண்டும்)

அறிவு மடக்கமு மன்பி னுடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தோணி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிவு மடககமு மனபி னுடனெ
பிறியா நகரமனனும பெரரு ளாளன
குறியுங குணமுங குரைகழல நீஙகா
நெறியறி வாரககிது நீரததொணி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிவும் அடக்கமும் அன்பின் உடனே
பிறியாத நகர் மன்னும் பேர் அருள் ஆளன்
குறியும் குணமும் குரை கழல் நீங்காத
நெறி அறிவார்க்கு இது நீர் தோணி ஆமே.

பதப்பொருள்:

அறிவும் (உண்மையான அறிவும்) அடக்கமும் (பணிவுடைய எண்ணமும்) அன்பின் (இறைவன் மேல் கொண்ட அன்பும்) உடனே (அதனுடனே)
பிறியாத (அடியவர்களை விட்டு என்றும் பிரியாமல்) நகர் (தில்லை சிற்றம்பலத்தில்) மன்னும் (நிலை பெற்ற திருநடனம் புரிகின்ற) பேர் (மிகப் பெரும்) அருள் (அருளை) ஆளன் (வழங்குவபனாகிய இறைவனை)
குறியும் (அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு) குணமும் (இருக்கின்ற நல்ல குணமும்) குரை (பேரழகு வாய்ந்த) கழல் (அவனின் திருவடிகளை) நீங்காத (எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கின்ற மனதும்)
நெறி (ஆகிய இவை அனைத்தையும் இறைவனை அடைவதற்கான வழியாக) அறிவார்க்கு (அறிந்து கொண்டவர்களுக்கு) இது (இந்த வழிமுறையே) நீர் (பிறவி எனும் பெரும் கடலை கடக்க உதவும்) தோணி (படகாக) ஆமே (இருக்கும்).

விளக்கம்:

உண்மையான அறிவும் பணிவுடைய எண்ணமும் இறைவன் மேல் கொண்ட அன்பும் அதனுடனே அடியவர்களை விட்டு என்றும் பிரியாமல் தில்லை சிற்றம்பலத்தில் நிலை பெற்ற திருநடனம் புரிகின்ற மிகப் பெரும் அருளை வழங்குவபனாகிய இறைவனை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு இருக்கின்ற நல்ல குணமும் பேரழகு வாய்ந்த அவனின் திருவடிகளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கின்ற மனதும் ஆகிய இவை அனைத்தையும் இறைவனை அடைவதற்கான வழியாக அறிந்து கொண்டவர்களுக்கு இந்த வழிமுறையே பிறவி எனும் பெரும் கடலை கடக்க உதவும் படகாக இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.