பாடல் #1466

பாடல் #1466: ஐந்தாம் தந்திரம் – 7. யோகம் (இறைவனை அடைவதற்கு அசையாத மனதுடன் செய்வதே யோகம் ஆகும்)

யோகச் சமையமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே யட்டாங்க யோகமாம்
யோக நிர்வாணமே யுற்ற பரோதையம்
யோக பிடேகமே யொண்சத்தி யுற்றலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

யொகச சமையமெ யொகம பலவுனனல
யொக விசெடமெ யடடாஙக யொகமாம
யொக நிரவாணமெ யுறற பரொதையம
யொக பிடெகமெ யொணசததி யுறறலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

யோக சமையமே யோகம் பல உன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம்
யோக நிர்வாணமே உற்ற பரா உதயம்
யோக அபிடேகமே ஒண் சத்தி உற்றலே.

பதப்பொருள்:

யோக (யோகத்தில்) சமையமே (சமயம் எனப்படுகின்ற சரியை என்பது) யோகம் (யோகத்தில் உள்ள) பல (பல விதமான நெறிமுறைகளை) உன்னல் (உள் வாங்கிக் கொண்டு அதை தவறாமல் கடைபிடித்தல் ஆகும்)
யோக (யோகத்தில்) விசேடமே (விசேடம் எனப்படுகின்ற கிரியை என்பது) அட்ட (எட்டு) அங்க (அங்கங்களைக் கொண்டு இருக்கின்ற) யோகம் (அட்டாங்க யோகம்) ஆம் (ஆகும்)
யோக (யோகத்தில்) நிர்வாணமே (நிர்வாணம் எனப்படுகின்ற யோகம் என்பது) உற்ற (தமக்கு கிடைக்கப் பெற்ற) பரா (அசையாத மனதோடு எண்ணங்கள் அற்ற) உதயம் (நிலை தோன்றுவது ஆகும்)
யோக (யோகத்தில்) அபிடேகமே (அபிடேகம் எனப்படுகின்ற ஞானம் என்பது) ஒண் (தம்மோடு ஒன்றாக கலந்து இருக்கின்ற) சத்தி (இறை சக்தியை) உற்றலே (உணர்வது ஆகும்).

விளக்கம்:

யோகத்தில் சமயம் எனப்படுகின்ற சரியை என்பது யோகத்தில் உள்ள பல விதமான நெறிமுறைகளை உள் வாங்கிக் கொண்டு அதை தவறாமல் கடைபிடித்தல் ஆகும். யோகத்தில் விசேடம் எனப்படுகின்ற கிரியை என்பது எட்டு அங்கங்களைக் கொண்டு இருக்கின்ற அட்டாங்க யோகம் ஆகும். யோகத்தில் நிர்வாணம் எனப்படுகின்ற யோகம் என்பது தமக்கு கிடைக்கப் பெற்ற அசையாத மனதோடு எண்ணங்கள் அற்ற நிலை தோன்றுவது ஆகும். யோகத்தில் அபிடேகம் எனப்படுகின்ற ஞானம் என்பது தம்மோடு ஒன்றாக கலந்து இருக்கின்ற இறை சக்தியை உணர்வது ஆகும்.

Thirumandhiram – Third Thandhiram

Complete Songs with their meanings from Thirumandhiram Third Thandhiram is given as PDF eBook in the following link for download. You can also view the actual book below that in an embedded viewer.

https://www.kvnthirumoolar.com/wp-content/uploads/2020/05/Thirumandhiram-Thandhiram-3.pdf

Thirumandhiram-Thandhiram-3

பாடல் #1451

பாடல் #1451: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

பத்துத் திசைக்கும் பரமொரு தெய்வமுண்
டேத்துக் கிலரில்லை யெனபத மலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பததுத திசைககும பரமொரு தெயவமுண
டெததுக கிலரிலலை யெனபத மலரக
கொததுத திருவடி நீழல சரணெனத
தததும வினைககடல சாராது காணுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பத்து திசைக்கும் பரம் ஒரு தெய்வம் உண்டு
ஏத்துக்கு இலர் இல்லை என பத மலர்க்கு
ஒத்து திரு அடி நீழல் சரண் என
தத்தும் வினை கடல் சாராது காணுமே.

பதப்பொருள்:

பத்து (பத்து விதமான) திசைக்கும் (திசைகளுக்கும்) பரம் (பரம்பொருளாக இருக்கின்ற) ஒரு (ஒரு) தெய்வம் (தெய்வம்) உண்டு (இருக்கின்றது)
ஏத்துக்கு (அந்த தெய்வத்தை எந்த விதத்திலும் போற்றி வணங்குவதற்கு) இலர் (இயலாதவர்கள் என்று) இல்லை (எவரும் இல்லை) என (எனவே) பத (தூய்மையான தாமரை) மலர்க்கு (மலருக்கு)
ஒத்து (இணையாக இருக்கின்ற) திரு (அவனது மேன்மைக்கும் மரியாதைக்கும் உரிய) அடி (திருவடிகளின்) நீழல் (அமைதியையும் குளிர்ச்சியையும் தருகின்ற நிழலே) சரண் (சரணாகதி) என (என்று சரணடைந்தால்)
தத்தும் (மாயையில் சிக்கிக்கொண்டு தத்தளிக்கின்ற) வினை (வினைகளால் சூழ்ந்த) கடல் (கடல் போன்ற இந்த உலக வாழ்க்கையை) சாராது (சார்ந்து இல்லாமல்) காணுமே (அந்த இறை சக்தியை தமக்குள் தரிசிக்கலாம்).

விளக்கம்:

பத்து விதமான திசைகளுக்கும் பரம்பொருளாக இருக்கின்ற ஒரு தெய்வம் இருக்கின்றது. அந்த தெய்வத்தை எந்த விதத்திலும் போற்றி வணங்குவதற்கு இயலாதவர்கள் என்று எவரும் இல்லை (அனைவராலும் இயலும்). ஆகவே தூய்மையான தாமரை மலர் போன்று இருக்கின்ற அவனது மேன்மைக்கும் மரியாதைக்கும் உரிய திருவடிகளின் அமைதியையும் குளிர்ச்சியையும் தருகின்ற நிழலே சரணாகதி என்று சரணடைந்தால் மாயையில் சிக்கிக்கொண்டு தத்தளிக்கின்ற வினைகளால் சூழ்ந்த கடல் போன்ற இந்த உலக வாழ்க்கையை சார்ந்து இல்லாமல் அந்த இறை சக்தியை தமக்குள் தரிசிக்கலாம்.

கருத்து: இறைவனை அடைவதற்கு அருளப்பட்ட சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான வழிமுறைகளில் சரியை செய்வதற்கு ஊனமில்லாத ஆரோக்கியமான உடல் வேண்டும். யோகம் செய்வதற்கு உறுதியான உடலும் மனமும் வேண்டும். ஞானம் மூலம் இறைவனை அடைவதற்கு குருவருளும் திருவருளும் இருக்க வேண்டும். ஆனால் கிரியையை எவரும் எந்த விதத்திலும் செய்ய முடியும்.

பாடல் #1452

பாடல் #1452: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமல ரிட்டு வணங்கினு
மூனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கானுறு கொடி கடிகமழ சநதனம
வானுற மாமல ரிடடு வணஙகினு
மூனினை நீககி யுணரபவரக கலலது
தெனமர பூஙகழல செரவொண ணாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கான் உறு கோடி கடி கமழ் சந்தனம்
வான் உறு மா மலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது
தேன் அமர் பூம் கழல் சேர ஒண்ணாதே.

பதப்பொருள்:

கான் (காட்டில் இருக்கும் மரங்களை) உறு (ஊடுறுவிச் சென்று) கோடி (கோடி காத தூரம் பரவுகின்ற) கடி (நறுமணம்) கமழ் (கமழ்கின்ற) சந்தனம் (சந்தனத்தை பூசி வழிபட்டாலும்)
வான் (வானத்தை) உறு (ஊடுறுவும் அளவிற்கு) மா (மிகப் பெரிய அளவு) மலர் (மலர்களால் கட்டிய மாலையை) இட்டு (சூட்டி) வணங்கினும் (வழிபட்டாலும்)
ஊனினை (தான் எனும் எண்ணத்தையும் உடல் சார்ந்த பற்றுக்களையும்) நீக்கி (நீக்கி விட்டு) உணர்பவர்க்கு (இறைவனை உணர்ந்து வழிபடுபவர்களுக்கு) அல்லது (மட்டும் அல்லது)
தேன் (சுவையான தேனினை / தெகிட்டாத தேனைப் போன்ற பேரின்பத்தை கொண்டு இருப்பதால்) அமர் (வண்டுகள் விரும்பி வந்து அமருகின்ற / அடியவர்கள் வந்து சரணடைகின்ற) பூம் (மென்மையான பூவைப் போன்ற) கழல் (இறைவனின் திருவடிகளை) சேர (சென்று சேரும் பெரும் பேறு) ஒண்ணாதே (வேறு யாருக்கும் கிடைக்காது).

விளக்கம்:

காட்டில் இருக்கும் மரங்களை ஊடுறுவிச் சென்று கோடி காத தூரம் பரவுகின்ற நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தை பூசி வழிபட்டாலும் வானத்தை ஊடுறுவும் அளவிற்கு மிகப் பெரிய அளவு மலர்களால் கட்டிய மாலையை சூட்டி வழிபட்டாலும், தான் எனும் எண்ணத்தையும் உடல் சார்ந்த பற்றுக்களையும் நீக்கி விட்டு இறைவனை உணர்ந்து வழிபடுபவர்களுக்கு மட்டுமின்றி சுவையான தேனை போன்ற பேரின்பத்தை கொண்டு இருப்பதால் வண்டுகள் போன்ற அடியவர்கள் விரும்பி வந்து சரணடைகின்ற மென்மையான பூவைப் போன்ற இறைவனின் திருவடிகளை சென்று சேரும் பெரும் பேறு வேறு யாருக்கும் கிடைக்காது.

பாடல் #1453

பாடல் #1453: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

கோனக்கன் றாயே குரைகழ லேத்துமின்
ஞானக்கன் றாயே நடுவே யுமிழ்தரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழு
மானைக்கன் றீசனருள் பள்ள மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொனககன றாயெ குரைகழ லெததுமின
ஞானககன றாயெ நடுவெ யுமிழதரும
வானககன றாகிய வானவர கைதொழு
மானைகன றீசனருள பளள மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கோன கன்று ஆயே குரை கழல் ஏத்துமின்
ஞான கன்று ஆயே நடுவே உமிழ் தரும்
வான கன்று ஆகிய வானவர் கை தொழும்
ஆனை கன்று ஈசன் அருள் பள்ளம் ஆமே.

பதப்பொருள்:

கோன (நேர் வழியில் செல்ல முடியாமல் வினைகளால் அலைக்கழிக்கப்பட்டு விதி வழியே செல்லுகின்ற) கன்று (பிள்ளையாக) ஆயே (இருந்தாலும்) குரை (ஒலி பொருந்திய சிலம்புகளை அணிந்திருக்கும்) கழல் (இறைவனின் திருவடிகளை) ஏத்துமின் (போற்றி வணங்கிக் கொண்டே இருங்கள்)
ஞான (அப்படி இருந்தால் அவனது அருளால் ஞானம் பெற்ற) கன்று (பிள்ளையாக) ஆயே (மாறி) நடுவே (தமக்கு நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியில் இருந்து) உமிழ் (அமிழ்தம் சுரக்கும் படி) தரும் (கொடுக்கும் அதை அருந்திக் கொண்டு இருந்தால்)
வான (வானத்தில்) கன்று (இருக்கும் பிள்ளைகள்) ஆகிய (ஆகிய) வானவர் (தேவர்களும்) கை (சென்று கைகூப்பி) தொழும் (தொழுகின்ற)
ஆனை (ஆன்மாவைக் கொண்டு இருக்கின்ற) கன்று (பிள்ளைகளாகிய உயிர்களுக்கு எல்லாம்) ஈசன் (அதிபதியாகிய இறைவனின்) அருள் (திருவருள் மழையை) பள்ளம் (வாங்கிக் கொள்ளுகின்ற பாத்திரமாக) ஆமே (நீங்கள் ஆகிவிடுவீர்கள்).

விளக்கம்:

நேர் வழியில் செல்ல முடியாமல் வினைகளால் அலைக்கழிக்கப்பட்டு விதி வழியே செல்லுகின்ற பிள்ளைகளாக இருந்தாலும் ஒலி பொருந்திய சிலம்புகளை அணிந்திருக்கும் இறைவனின் திருவடிகளை போற்றி வணங்கிக் கொண்டே இருங்கள். அப்படி வணங்கிக் கொண்டே இருந்தால் அவனது அருளால் ஞானம் பெற்ற பிள்ளைகளாக ஆகி தமக்கு நடுவில் இருக்கும் சுழுமுனை நாடியில் இருந்து அமிழ்தம் சுரக்கும் படி கொடுக்கும். அந்த அமிழ்தத்தை அருந்திக் கொண்டு இருந்தால் வானத்தில் இருக்கும் பிள்ளைகளாகிய தேவர்களும் சென்று கைகூப்பி தொழுகின்ற ஆன்மாவைக் கொண்டு இருக்கின்ற பிள்ளைகளாகிய உயிர்களுக்கு எல்லாம் அதிபதியாகிய இறைவனின் திருவருளை நிரம்புகின்ற பாத்திரமாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

பாடல் #1454

பாடல் #1454: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

இதுபணிந் தெண்டிசை மண்டல மெல்லா
மதுபணி செய்கின்ற வாளது கூறி
னிதுபணி மானிடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இதுபணிந தெணடிசை மணடல மெலலா
மதுபணி செயகினற வாளது கூறி
னிதுபணி மானிடர செயபணி யீசன
பதிபணி செயவது பததிமை காணெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம்
அது பணி செய்கின்ற வாள் அது கூறின்
இது பணி மானிடர் செய் பணி ஈசன்
பதி பணி செய்வது பத்திமை காணே.

பதப்பொருள்:

இது (கிரியை வழிமுறையை கடைபிடிக்கின்றவர்கள் இந்த உடலுக்குள் இருப்பது இறை சக்தியே) பணிந்து (என்பதை அறிந்து கொண்டு அதை பணிந்து வணங்கி) எண் (எட்டு) திசை (திசைகளிலும்) மண்டலம் (இருக்கின்ற மண்டலங்கள்) எல்லாம் (அனைத்திலும்)
அது (அங்கு நிகழ்கின்ற) பணி (அனைத்து விதமான செயல்களையும்) செய்கின்ற (செய்கின்ற) வாள் (ஒளியாக இருக்கின்றதும்) அது (அதுவே என்பதை) கூறின் (எடுத்துச் சொன்னால்)
இது (இந்த உலகத்தில்) பணி (தாம் செய்ய வேண்டிய செயல்கள் என்று) மானிடர் (மனிதர்களால்) செய் (செய்யப் படுகின்ற) பணி (அனைத்து செயல்களும்) ஈசன் (இறைவனே செய்கின்றான் என்பதை அறிந்து கொண்டு)
பதி (அனைத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற இறைவனுக்கே) பணி (தாம் செய்கின்ற அனைத்து செயல்களையும் செய்வதாக எண்ணிக் கொண்டு) செய்வது (அதை அன்போடு செய்வது) பத்திமை (கிரியை வழியில் செல்லுகின்ற பக்தியின் முறைமை) காணே (என்று கண்டு கொள்ளுங்கள்).

விளக்கம்:

கிரியை வழிமுறையை கடைபிடிக்கின்றவர்கள் இந்த உடலுக்குள் இருப்பது இறை சக்தியே என்பதை அறிந்து கொண்டு அதை பணிந்து வணங்கி எட்டு திசைகளிலும் இருக்கின்ற மண்டலங்கள் அனைத்திலும் நிகழ்கின்ற அனைத்து விதமான செயல்களையும் செய்கின்ற ஒளியாக இருக்கின்றதும் அதுவே என்பதை எடுத்துச் சொன்னால், இந்த உலகத்தில் தாம் செய்ய வேண்டிய செயல்கள் என்று மனிதர்களால் செய்யப் படுகின்ற அனைத்து செயல்களும் இறைவனே செய்கின்றான் என்பதை அறிந்து கொண்டு அனைத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற இறைவனுக்கே தாம் செய்கின்ற அனைத்து செயல்களையும் செய்வதாக எண்ணிக் கொண்டு அவற்றை அன்போடு செய்வது கிரியை வழியில் செல்லுகின்ற பக்தியின் முறைமை என்று கண்டு கொள்ளுங்கள்.

பாடல் #1455

பாடல் #1455: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

பத்தன் கிரிகை சரிதை பவில்வுற்றுச்
சுத்த வருளாற் றுரிசற்ற யோகத்தி
லுய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பததன கிரிகை சரிதை பவிலவுறறுச
சுதத வருளாற றுரிசறற யொகததி
லுயதத நெறியுற றுணரகினற ஞானததாற
சிததங குருவரு ளாறசிவ மாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பத்தன் கிரிகை சரிதை பவில் உற்று
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே.

பதப்பொருள்:

பத்தன் (பக்தியின் முறைமையை கடைபிடிக்கின்ற பக்தன்) கிரிகை (கிரியையும்) சரிதை (சரியையும்) பவில் (முறைப்படி கற்று அதனை கடைபிடிப்பதையே) உற்று (குறிக்கோளாகக் கொண்டு செய்யும் போது)
சுத்த (இறைவனின் தூய்மையான) அருளால் (அருளால்) துரிசு (ஒரு குற்றமும்) அற்ற (இல்லாத) யோகத்தில் (யோகம் கிடைக்கப் பெற்று)
உய்த்த (தமக்கு கிடைத்த மேன்மையான) நெறி (வழியை) உற்று (குறிக்கோளாகக் கொண்டு செய்யும் போது) உணர்கின்ற (அதன் பயனால் தமக்குள் உணர்கின்ற) ஞானத்தால் (உண்மை ஞானத்தின் வழியாக)
சித்தம் (சித்தம் தெளிவு பெற்று) குரு (குருவாக இருக்கின்ற இறைவனின்) அருளால் (அருளால்) சிவம் (தமது சித்தம் சிவமாகவே) ஆகுமே (ஆகி விடும்).

விளக்கம்:

பாடல் #1454 இல் உள்ளபடி பக்தியின் முறையை கடைபிடிக்கின்ற பக்தன் கிரியையும் சரியையும் முறைப்படி கற்று அதனை கடைபிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செய்யும் போது இறைவனின் தூய்மையான அருளால் யோகம் கிடைக்கப் பெறும். அப்படி தமக்கு கிடைத்த மேன்மையான யோக வழியை குறிக்கோளாகக் கொண்டு ஒரு குற்றமும் இல்லாமல் செய்யும் போது அதன் பயனால் தமக்குள் உண்மை ஞானத்தை உணரலாம். அப்படி உணர்ந்த உண்மை ஞானத்தின் வழியாக சித்தம் தெளிவு பெற்று குருவாக இருக்கின்ற இறைவனின் அருளால் அவர் தமது சித்தம் சிவமாகவே ஆகி விடும்.

பாடல் #1456

பாடல் #1456: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)

அன்பி னுருகுவ னாளும் பணிசெய்வன்
செம்பொன் செய்மேனிக் கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கரு
ளென்பினுட் சோதியி லிங்கு நின்றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அனபி னுருகுவ னாளும பணிசெயவன
செமபொன செயமெனிக கமலத திருவடி
முனபுநின றாஙகெ மொழிவ தெனககரு
ளெனபினுட சொதியி லிஙகு நினறானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அன்பின் உருகுவன் நாளும் பணி செய்வன்
செம் பொன் செய் மேனி கமலத் திருவடி
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள்
என்பின் உள் சோதியில் இங்கு நின்றானே.

பதப்பொருள்:

அன்பின் (இறைவன் மேல் கொண்ட உண்மையான அன்பினால்) உருகுவன் (உருகுபவனும்) நாளும் (தினந்தோறும்) பணி (செய்கின்ற அனைத்து விதமான செயல்களையும்) செய்வன் (இறைவனுக்காக செய்வதாகவே நினைத்துக் கொண்டு செய்பவனும்)
செம் (தூய்மையான பசும்) பொன் (பொன்னால்) செய் (செய்யப்பட்டது) மேனி (போல பிரகாசிக்கின்ற திருமேனியையும்) கமலத் (செந்தாமரை மலர் போன்ற) திருவடி (திருவடிகளையும் கொண்டு தமக்குள் இருக்கும் சோதி வடிவான இறைவனாகவே)
முன்பு (தமக்கு முன்பு) நின்று (நின்று) ஆங்கே (அங்கு இருக்கின்ற அனைவரையும் பார்ப்பவனும்) மொழிவது (அவர்கள் சொல்லுகின்ற அனைத்துமே) எனக்கு (தமக்கு இறைவன்) அருள் (கொடுத்த அருளாக எடுத்துக் கொள்கின்றவனும் ஆகிய பக்தனின்)
என்பின் (எலும்புகளால் மூடியிருக்கும் உடலுக்கு) உள் (உள்ளே) சோதியில் (தங்கம் போல பிரகாசிக்கின்ற சோதியாக) இங்கு (பக்தன் இருக்கின்ற இடத்திலேயே) நின்றானே (நிற்கின்றான் இறைவன்).

விளக்கம்:

இறைவன் மேல் கொண்ட உண்மையான அன்பினால் உருகுபவனும் தினந்தோறும் தாம் செய்கின்ற அனைத்து விதமான செயல்களையும் இறைவனுக்காகவே செய்வதாகவே நினைத்துக் கொண்டு செய்பவனும் தூய்மையான பசும் பொன்னால் செய்யப்பட்டது போல பிரகாசிக்கின்ற திருமேனியையும் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளையும் கொண்டு தமக்குள் இருக்கும் சோதி வடிவான இறைவனாகவே தமக்கு முன்பு நிற்கின்றவர்கள் அனைவரையும் பார்ப்பவனும் அவர்கள் சொல்லுகின்ற அனைத்துமே தமக்கு இறைவன் கொடுத்த அருளாக எடுத்துக் கொள்கின்றவனும் ஆகிய பக்தனின் எலும்புகளால் மூடியிருக்கும் உடலுக்கு உள்ளே தங்கம் போல பிரகாசிக்கின்ற சோதியாக பக்தன் இருக்கின்ற இடத்திலேயே நிற்கின்றான் இறைவன்.

பாடல் #1443

சரியை முன்னுரை:

இந்த உலகத்திலேயே இறைவனை பற்றி முழுவதுமாக ஆராய்ந்து அறிந்து கொண்டு அவனை அடைந்து சிவமாகவே ஆவதற்கு இறைவனால் அருளப்பட்ட வழிமுறையான சுத்த சைவத்தில் இருப்பது 1. சுத்த சைவம் 2. அசுத்த சைவம் 3.மார்க்க சைவம் 4.கடும் சுத்த சைவம் ஆகிய நான்கு வழி முறைகள் ஆகும். இந்த நான்கு வழிமுறைகளையும் கடைபிடிப்பதற்கு இருப்பது சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு சாதக முறைகள் ஆகும்.

பாடல் #1443: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

நேர்ந்திடு மூலச் சரியை நெறியிதென்
றாய்ந்திடுங் காலங்கி கஞ்சன் மலையின்மா
னோர்ந்திடுங் கந்துருக் கேண்மின்கள் பூதலந்
தேர்ந்திடுஞ் சுத்த சைவத்துயி ராவதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெரநதிடு மூலச சரிதை நெறியிதென
றாயநதிடுங காலஙகி கஞசன மலையினமா
னொரநதிடுங கநதுருக கெணமினகள பூதலந
தெரநதிடுஞ சுதத சைவததுயி ராவதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நேர்ந்திடும் மூல சரியை நெறி இது என்று
ஆய்ந்திடும் கால் அங்கி கஞ்சன் மலையின் மான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலம்
தேர்ந்திடும் சுத்த சைவத்து உயிர் ஆவதே.

பதப்பொருள்:

நேர்ந்திடும் (இறைவனை சென்று அடைவதற்கு) மூல (மூலமாக இருக்கின்ற) சரியை (சரியை எனும்) நெறி (வழிமுறை) இது (இதுவே) என்று (என்று)
ஆய்ந்திடும் (ஆராய்ந்து அறிந்து கொண்ட) கால் (காலத்தை வென்று) அங்கி (அதை அங்கியாக அணிந்து கொண்டு) கஞ்சன் (வெண்கலம் போன்ற உறுதியான) மலையின் (மலை எனும் பொருளில் பெயர் கொண்ட கஞ்ச மலைக்கு) மான் (பெருமை சேர்த்த காலாங்கி நாதரும்)
ஓர்ந்திடும் (இதையே ஆராய்ந்து தெளிவாக உணர்ந்து கொண்ட) கந்துரு (கந்துரு நாதரும்) கேண்மின்கள் (ஆராய்ந்து உணர்ந்து கொண்ட வழிமுறையை நீங்களும் கேளுங்கள்) பூதலம் (இந்த பூமியிலேயே)
தேர்ந்திடும் (இறைவனை அடைவதற்கான வழி என்று ஆராய்ந்து உணர்ந்து கொண்டு அதில் தேர்ச்சி பெறும்) சுத்த (சுத்த) சைவத்து (சைவம் எனும் வழிமுறைக்கு) உயிர் (உயிர் ஆதாரமாக) ஆவதே (இருப்பதே சரியை எனும் வழிமுறை ஆகும்).

விளக்கம்:

இறைவனை சென்று அடைவதற்கு மூலமாக இருக்கின்ற சரியை எனும் வழிமுறை இதுவே என்று ஆராய்ந்து அறிந்து கொண்ட காலத்தை வென்று அதை அங்கியாக அணிந்து கொண்டு வெண்கலம் போன்ற உறுதியான மலை எனும் பொருளில் பெயர் கொண்ட கஞ்ச மலைக்கு பெருமை சேர்த்த காலாங்கி நாதரும் இதையே ஆராய்ந்து தெளிவாக உணர்ந்து கொண்ட கந்துரு நாதரும் ஆராய்ந்து உணர்ந்து கொண்ட வழிமுறையை நீங்களும் கேளுங்கள். இந்த பூமியிலேயே இறைவனை அடைவதற்கான வழி என்று ஆராய்ந்து உணர்ந்து கொண்டு அதில் தேர்ச்சி பெறும் சுத்த சைவம் எனும் வழிமுறைக்கு உயிர் ஆதாரமாக இருப்பதே சரியை எனும் வழிமுறை ஆகும்.

பாடல் #1444

பாடல் #1444: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

உயிர்க்குயி ராய்நிற்ற லொண்ஞான பூசை
யுயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை
யுயிர்பெறு மாவா கனம்புறப் பூசை
செயற்கிடை நேசஞ் சிவபூசை தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உயிரககுயி ராயநிறற லொணஞான பூசை
யுயிரககொளி நொககல மகாயொக பூசை
யுயிரபபெறு மாவா கனமபுறப பூசை
செயறகிடை நெசஞ சிவபூசை தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை
உயிர் பெறும் ஆவாகனம் புற பூசை
செயற்கு இடை நேசம் சிவ பூசை தானே.

பதப்பொருள்:

உயிர்க்கு (உயிர்களுக்குள்) உயிராய் (ஆன்மாவாக இறைவன்) நிற்றல் (நிற்கின்ற விதத்தை) ஒண் (தமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்) ஞான (ஆத்ம விசாரமாகிய / நான் யார் என்று அறிந்து கொள்வதாகிய ஞான) பூசை (பூசையாகும்)
உயிர்க்கு (உயிர்களுக்குள்) ஒளி (ஒளியாக இருக்கும் இறைவனை) நோக்கல் (தமக்குள்ளே தரிசித்தல்) மகா (மாபெரும்) யோக (சாதனையாகிய யோக) பூசை (பூசையாகும்)
உயிர் (உருவச் சிலைகள் இறை சக்தியை) பெறும் (பெறும்படி) ஆவாகனம் (மந்திரங்கள் சொல்லி கிரியைகள் செய்து சக்தியூட்டி) புற (அந்த சிலைகளுக்கு அபிஷேகமும் ஆராதனையும் செய்வது வெளிப்புற) பூசை (பூசையாகும்)
செயற்கு (எந்தவிதமான பூசைகளை செய்தாலும்) இடை (அந்த பூசைக்கான செயல்களை) நேசம் (இறைவன் மேல் கொண்ட பேரன்போடு செய்வது) சிவ (மானசீகமாகிய சிவ) பூசை (பூசை) தானே (ஆகும்).

விளக்கம்:

உயிர்களுக்குள் ஆன்மாவாக இறைவன் நிற்கின்ற விதத்தை தமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் ஆத்ம விசாரமாகிய (நான் யார் என்று அறிந்து கொள்வது) ஞான பூசையாகும். உயிர்களுக்குள் ஒளியாக இருக்கும் இறைவனை தமக்குள்ளே தரிசித்தல் மாபெரும் சாதனையாகிய யோக பூசையாகும். உருவச் சிலைகள் இறை சக்தியை பெறும்படி மந்திரங்கள் சொல்லி கிரியைகள் செய்து சக்தியூட்டி அந்த சிலைகளுக்கு அபிஷேகமும் ஆராதனையும் செய்வது வெளிப்புற பூசையாகும். எந்தவிதமான பூசைகளை செய்தாலும் அந்த பூசைக்கான செயல்களை இறைவன் மேல் கொண்ட பேரன்போடு செய்வது மானசீகமாகிய சிவ பூசையாகும். இந்த நான்கு விதமான பூசைகளே சரியை ஆகும்.