பாடல் #1533

பாடல் #1533: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

ஆறு சமையமுங் கண்டவர் கண்டில
ராறு சமையப் பொருளும் பயனில்லைத்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆறு சமையமுங கணடவர கணடில
ராறு சமையப பொருளும பயனிலலைத
தெறுமின தெறித தெளிமின தெளிநதபின
மாறுத லினறி மனைபுக லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆறு சமையமும் கண்டு அவர் கண்டு இலர்
ஆறு சமைய பொருளும் பயன் இல்லை
தேறுமின் தேறி தெளிமின் தெளிந்த பின்
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே.

பதப்பொருள்:

ஆறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) சமையமும் (வழி முறைகளையும்) கண்டு (கண்டு) அவர் (அதன் பொருளை மேம்போக்காக அறிந்து கொண்டவர்கள்) கண்டு (அந்த வழிமுறைகளின் உட் பொருளாக இருக்கின்ற தத்துவங்களை அறிந்து) இலர் (கொள்ள வில்லை)
ஆறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) சமைய (வழி முறைகளும்) பொருளும் (சொல்லுகின்ற உட் பொருளான தத்துவங்களை அறிந்து கொள்ளாத) பயன் (காரணத்தால் அவர்களுக்கு எந்தவிதமான பயனும்) இல்லை (இல்லை)
தேறுமின் (ஆகவே ஆறு விதமான வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்) தேறி (அறிந்த பிறகு) தெளிமின் (அதனை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்) தெளிந்த (அவ்வாறு தெளிவாக உணர்ந்த) பின் (பிறகு)
மாறுதல் (எந்த விதமான மாறுபாடும்) இன்றி (இல்லாமல் உறுதியாக) மனை (வீடு பேறு என்று அறியப்படுகின்ற முக்தியை) புகல் (அடைவது) ஆமே (கைகூடும்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும் கண்டு அதன் பொருளை மேம்போக்காக அறிந்து கொண்டவர்கள் அந்த வழிமுறைகளின் உட் பொருளாக இருக்கின்ற தத்துவங்களை அறிந்து கொள்ள வில்லை. இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளும் சொல்லுகின்ற உட் பொருளான தத்துவங்களை அறிந்து கொள்ளாத காரணத்தால் அவர்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. ஆகவே ஆறு விதமான வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். அறிந்த பிறகு அதனை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு தெளிவாக உணர்ந்த பிறகு எந்த விதமான மாறுபாடும் இல்லாமல் உறுதியாக வீடு பேறு என்று அறியப்படுகின்ற முக்தியை அடைவது கைகூடும்.

குறிப்பு:

ஆறு சமயங்கள் என்பது இறைவனை அடைவதற்கான ஆறு வழி முறைகளாகும். இதனை பாடல் #1530 இல் பார்க்கவும்.

பாடல் #1534

பாடல் #1534: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

சிவமல்ல தில்லை யிறையோ சிவமாந்
தவமல்ல தில்லைத் தலைப்படு வோர்க்கிங்
கவமல்ல தில்லை யறுசமை யங்கள்
தவமல்ல நந்திதாள் சார்ந்துய் யீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவமலல திலலை யிறையொ சிவமாந
தவமலல திலலைத தலைபபடு வொரககிங
கவமலல திலலை யறுசமை யஙகள
தவமலல நநதிதாள சாரநதுய யீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவம் அல்லது இல்லை இறையோ சிவம் ஆம்
தவம் அல்லது இல்லை தலை படுவோர்க்கு இங்கு
அவம் அல்லது இல்லை அறு சமையங்கள்
தவ மல்ல நந்தி தாள் சார்ந்து உய்யீரே.

பதப்பொருள்:

சிவம் (சிவம் என்று அறியப்படுகின்ற பரம்பொருளைத்) அல்லது (தவிர) இல்லை (வேறு பரம்பொருள் எதுவும் இல்லை) இறையோ (இறை என்று அறியப்படுவது) சிவம் (சிவப் பரம்பொருளே) ஆம் (ஆகும்)
தவம் (தவம் என்கின்ற உயர்ந்த நிலையை) அல்லது (தவிர) இல்லை (வேறு உயர்ந்த நிலை எதுவும் இல்லை) தலை (இறைவனை அடைய வேண்டும் என்று உறுதியாக) படுவோர்க்கு (செயல் படுபவர்களுக்கு) இங்கு (இந்த உலகத்தில்)
அவம் (பயனில்லாததைத்) அல்லது (தவிர) இல்லை (வேறு எதுவும் இல்லை) அறு (ஆறு விதமான) சமையங்கள் (வழி முறைகளையும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு)
தவ (தவத்திற்கு) மல்ல (உறுதியாக நிற்கின்ற) நந்தி (குருநாதனாகிய இறைவனின்) தாள் (திருவடியை) சார்ந்து (சரணடைந்து) உய்யீரே (மேன்மை நிலையை அடையாமல் இருக்கின்றீர்களே).

விளக்கம்:

சிவம் என்று அறியப்படுகின்ற பரம்பொருளைத் தவிர வேறு பரம்பொருள் எதுவும் இல்லை. இறை என்று அறியப்படுவது சிவப் பரம்பொருளே ஆகும். இந்த உலகத்தில் இறைவனை அடைய வேண்டும் என்று உறுதியாக செயல் படுபவர்களுக்கு தவம் என்கின்ற உயர்ந்த நிலையை தவிர வேறு உயர்ந்த நிலை எதுவும் இல்லை. ஆனால் ஆறு விதமான வழி முறைகளையும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு இந்த உலகத்தில் பயனில்லாததைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதனால் தவத்திற்கு உறுதியாக நிற்கின்ற குருநாதனாகிய இறைவனின் திருவடியை சரணடைந்து மேன்மை நிலையை அடையாமல் இருக்கின்றீர்களே.

பாடல் #1535

பாடல் #1535: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

அண்ணலை நாடிய வாறு சமையமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முன்னின் றழியு முயன்றில ராதலால்
மண்ணின் றொழியும் வகையறி யார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அணணலை நாடிய வாறு சமையமும
விணணவ ராக மிகவும விருமபியெ
முனனின றழியு முயனறில ராதலால
மணணின றொழியும வகையறி யாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அண்ணலை நாடிய ஆறு சமையமும்
விண்ணவர் ஆக மிகவும் விரும்பியே
முன் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால்
மண் நின்று ஒழியும் வகை அறியார்களே.

பதப்பொருள்:

அண்ணலை (அண்ணலாகிய இறைவனை) நாடிய (தேடி அடைய உதவும்) ஆறு (ஆறு விதமான) சமையமும் (வழி முறைகளும்)
விண்ணவர் (முக்தி அடையவும் தேவர்களாக) ஆக (ஆக வேண்டும்) மிகவும் (என்று மிகவம்) விரும்பியே (விரும்புகின்ற உயிர்களுக்கு வழி காட்டவே உருவாக்கப் பட்டுள்ளன)
முன் (முன்னால் / ஆசைப் படுகின்ற) நின்று (இருக்கின்ற / பொருள்கள்) அழியும் (அனைத்தும் அழிந்து போவதை) முயன்று (அந்த ஆறு வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொண்டு உணர்ந்து தெளிவடைவதற்கான முயற்சியை) இலர் (இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்) ஆதலால் (ஆதலால் வெறும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு)
மண் (இந்த உலகத்தில் / மற்றவர்கள் ஆசைப் படுகின்ற) நின்று (உள்ள அனைத்தும் / பொருள்கள் அனைத்தும்) ஒழியும் (அழிந்து போவதையும் அறிந்து கொண்டு) வகை (அழியாமல் இருக்கின்ற முறையை) அறியார்களே (அறிந்து கொள்ளாமலேயே இவர்கள் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

அண்ணலாகிய இறைவனை தேடி அடைய உதவும் ஆறு விதமான வழி முறைகளும் முக்தி அடையவும் தேவர்களாக ஆக வேண்டும் என்று மிகவம் விரும்புகின்ற உயிர்களுக்கு வழி காட்டவே உருவாக்கப் பட்டுள்ளன. ஆனாலும் அந்த ஆறு வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொண்டு உணர்ந்து தெளிவடைவதற்கான முயற்சியை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால் வெறும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தும் அழிந்து போவதையும் மற்றவர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தும் அழிந்து போவதையும் அறிந்து கொண்டு அழியாமல் இருக்கின்ற முறையை அறிந்து கொள்ளாமலேயே இவர்கள் இருக்கின்றார்கள்.

குறிப்பு:

ஆறு சமயங்கள் என்பது இறைவனை அடைவதற்கான ஆறு வழி முறைகளாகும். இதனை பாடல் #1530 இல் பார்க்கவும்.

பாடல் #1536

பாடல் #1536: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

சிவகதி யேகெதி மற்றுள்ள தெல்லாம்
பவகதிப் பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னோடு நேரொன்று தோன்றி
லவகதி மூவரு மவ்வகை யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவகதி யெகெதி மறறுளள தெலலாம
பவகதிப பாசப பிறவியொன றுணடு
தவகதி தனனொடு நெரொனறு தொனறி
லவகதி மூவரு மவவகை யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவ கதியே கெதி மற்று உள்ளது எல்லாம்
பவ கதி பாச பிறவி ஒன்று உண்டு
தவ கதி தன்னோடு நேர் ஒன்று தோன்றில்
அவ கதி மூவரும் அவ் வகை ஆமே.

பதப்பொருள்:

சிவ (சிவப் பரம்பொருளை) கதியே (சரணடைவதே) கெதி (முக்திக்கான வழியாகும்) மற்று (சரணாகதியைத் தவிர வேறு விதமாக) உள்ளது (இருக்கின்ற வழி முறைகள்) எல்லாம் (அனைத்தும்)
பவ (உலக வாழ்க்கைக்கான) கதி (வழியாக) பாச (பாசத் தளைகளுடன்) பிறவி (மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்காகவே) ஒன்று (இருக்கின்ற) உண்டு (வழி முறைகளாகும்)
தவ (சரணாகதியாக தவம் செய்கின்ற) கதி (வழி முறையை) தன்னோடு (சாதகர்கள்) நேர் (முக்திக்கு நேரான) ஒன்று (ஒரே வழிமுறையாக எடுத்துக் கொண்டு) தோன்றில் (செய்யாமல் போனால்)
அவ (துன்பமான பிறவிகளுக்கே) கதி (வழியாக இருக்கின்ற) மூவரும் (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும்) அவ் (துன்பமான பிறவி எடுப்பதற்கான) வகை (வழி முறைகளாகவே) ஆமே (இருக்கும்).

விளக்கம்:

சிவப் பரம்பொருளை சரணடைவதே முக்திக்கான வழியாகும். சரணாகதியைத் தவிர வேறு விதமாக இருக்கின்ற வழி முறைகள் அனைத்தும் உலக வாழ்க்கைக்கான வழியாக பாசத் தளைகளுடன் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்காகவே இருக்கின்ற வழி முறைகளாகும். சரணாகதியாக தவம் செய்கின்ற வழி முறையை சாதகர்கள் முக்திக்கு நேரான ஒரே வழிமுறையாக எடுத்துக் கொண்டு செய்யாமல் போனால் துன்பமான பிறவிகளுக்கே வழியாக இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும் துன்பமான பிறவி எடுப்பதற்கான வழி முறைகளாகவே இருக்கும்.

பாடல் #1537

பாடல் #1537: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

நூறு சமைய முளவால் நுகருங்கா
லாறு சமைய மவ்வாறுட் படுவன
கூறு சமையங்கள் கொண்ட நெறிநில்லா
நீறு பரநெறி யில்லாநெறி நின்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நூறு சமைய முளவால நுகருஙகா
லாறு சமைய மவவாறுட படுவன
கூறு சமையஙகள கொணட நெறிநிலலா
நீறு பரநெறி யிலலாநெறி நினறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நூறு சமையம் உள ஆல் நுகரும் கால்
ஆறு சமையம் அவ் ஆறு உள் படுவன
கூறு சமையங்கள் கொண்ட நெறி நில்லா
நீறு பர நெறி இல்லா நெறி நின்றே.

பதப்பொருள்:

நூறு (இறைவனை அடைவதற்காக என்று சொல்லப் படுகின்ற நூற்றுக் கணக்கான) சமையம் (வழி முறைகள்) உள (இருக்கின்றன) ஆல் (ஆதலால்) நுகரும் (அவற்றில் அவரவர்க்கு ஏற்றதை எடுத்துக் கொண்டு கடைபிடிக்கும்) கால் (போது)
ஆறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) சமையம் (வழி முறைகளில்) அவ் (அந்த நூற்றுக் கணக்கான வழி முறைகளும்) ஆறு (இந்த ஆறு வழி முறைகளுக்கு) உள் (உள்ளேயே) படுவன (அடங்கி விடும்)
கூறு (இப்படி ஆறு பிரிவுகளாக இருக்கின்ற) சமையங்கள் (வழி முறைகள் அனைத்தும்) கொண்ட (தாம் எடுத்துக் கொண்ட) நெறி (வழி முறையிலேயே) நில்லா (நின்று விடாமல்)
நீறு (ஒவ்வொரு வழி முறையிலும் பக்குவம் பெற்ற மிகவும் மேன்மையான நிலையாகிய) பர (பரம் பொருளை சென்று அடைகின்ற முக்திக்கான) நெறி (வழி முறை ஒன்று இருக்கின்றது) இல்லா (ஆனால் அதில் நின்று இறைவனை அடையாமல்) நெறி (வெறும் உலக ஆசைகளுக்காக செய்யப் படுகின்ற வழி முறைகளிலேயே) நின்றே (நிற்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்காக என்று சொல்லப் படுகின்ற நூற்றுக் கணக்கான வழி முறைகள் இருக்கின்றன ஆதலால் அவற்றில் அவரவர்க்கு ஏற்றதை எடுத்துக் கொண்டு கடைபிடிக்கும் போது இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளுக்கு உள்ளேயே அந்த நூற்றுக் கணக்கான வழி முறைகளும் அடங்கி விடும். இப்படி ஆறு பிரிவுகளாக இருக்கின்ற வழி முறைகள் அனைத்தும் தாம் எடுத்துக் கொண்ட வழி முறையிலேயே நின்று விடாமல் ஒவ்வொரு வழி முறையிலும் பக்குவம் பெற்ற மிகவும் மேன்மையான நிலையாகிய பரம் பொருளை சென்று அடைகின்ற முக்திக்கான வழி முறை ஒன்று இருக்கின்றது. ஆனால் அதில் நின்று இறைவனை அடையாமல் வெறும் உலக ஆசைகளுக்காக செய்யப் படுகின்ற வழி முறைகளிலேயே நிற்கின்றார்கள்.

பாடல் #1538

பாடல் #1538: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்
குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கததுங கழுதைகள பொலுங கலதிகள
சுதத சிவனெஙகுந தொயவுறறு நிறகினறான
குததந தெரியார குணஙகொணடு கொதாடடார
பிததெறி நாளும பிறநதிறப பாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
சுத்த சிவன் எங்கும் தோய்வு உற்று நிற்கின்றான்
குத்தம் தெரியார் குணம் கொண்டு கோது ஆட்டார்
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே.

பதப்பொருள்:

கத்தும் (காரணமே தெரியாமல் கத்துகின்ற) கழுதைகள் (கழுதைகள்) போலும் (போலவே) கலதிகள் (தீய குணம் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்)
சுத்த (அதனால் தூய்மையான) சிவன் (சிவப் பரம்பொருள்) எங்கும் (எங்கும்) தோய்வு (அவர்களால் அறிய முடியாத படி மாயையால்) உற்று (மறைத்துக் கொண்டு) நிற்கின்றான் (நிற்கின்றான்)
குத்தம் (தம்மிடம் இருக்கின்ற தீய குணங்களை) தெரியார் (அறிந்து கொள்ளாமல்) குணம் (நல்ல குணங்களை) கொண்டு (மேற் கொண்டு / கடை பிடித்து) கோது (தீய குணங்களை) ஆட்டார் (நீக்கிக் கொள்ளாதவர்கள்)
பித்து (தீய குணத்திலேயே மூழ்கி அதனால் பித்து) ஏறி (அதிகமாகி) நாளும் (தினந்தோறும் வாழ் நாளை வீணடித்து) பிறந்து (மீண்டும் மீண்டும் பிறந்து) இறப்பாரே (இறக்கின்ற பிறவி சுழலிலேயே சிக்கிக் கொண்டு இருப்பார்கள்).

விளக்கம்:

காரணமே தெரியாமல் கத்துகின்ற கழுதைகள் போலவே தீய குணம் உள்ளவர்கள் இருக்கின்றார்கள். அதனால் எங்கும் இருக்கின்ற தூய்மையான சிவப் பரம்பொருள் அவர்களால் அறிய முடியாத படி தம்மை மாயையால் மறைத்துக் கொண்டு நிற்கின்றான். தம்மிடம் இருக்கின்ற தீய குணங்களை அறிந்து கொள்ளாமல் நல்ல குணங்களை கடை பிடித்து தீய குணங்களை நீக்கிக் கொள்ளாதவர்கள் தீய குணத்திலேயே மூழ்கி அதனால் பித்து அதிகமாகி தினந்தோறும் வாழ் நாளை வீணடித்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கின்ற பிறவி சுழலிலேயே சிக்கிக் கொண்டு இருப்பார்கள்.

பாடல் #1539

பாடல் #1539: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

மயங்கு கின்றாரு மதைத் தெளிந்தாரு
முயங்கி யிருவினை மூழை முகப்பா
யியங்கிப் பெறுவாரே லீறதுக் காட்டிப்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மயஙகு கினறாரு மதைத தெளிநதாரு
முயஙகி யிருவினை மூழை முகபபா
யியஙகிப பெறுவாரெ லீறதுக காடடிப
பயஙகெட டவரககொர பரநெறி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மயங்கு கின்றாரும் அதை தெளிந்தாரும்
முயங்கி இரு வினை மூழை முகப்பு ஆய்
இயங்கி பெறுவாரேல் ஈறு அது காட்டி
பயம் கெட்டு அவர்க்கு ஓர் பர நெறி ஆமே.

பதப்பொருள்:

மயங்கு (மாயையிலேயே மயங்கி) கின்றாரும் (இருக்கின்றவர்களும்) அதை (இறைவனை அடையும் வழி முறைகளை கடைபிடித்து அதனால் மாயை நீங்கி) தெளிந்தாரும் (தெளிவு பெற்றவர்களும்)
முயங்கி (தம்மால் இயன்ற வரை முயற்சி செய்து) இரு (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) வினை (வினைகளையும் அறுப்பதற்கு) மூழை (சுழு முனை நாடியின் துளைக்கு) முகப்பு (உச்சியில்) ஆய் (காரணமாக இருக்கின்ற சகஸ்ரதளத்தில்)
இயங்கி (தமது மூச்சுக்காற்றை இயக்குவதன் மூலம் குண்டலினி சக்தியை கொண்டு சென்று சேர்த்து) பெறுவாரேல் (அமிழ்தத்தை பெற முடிந்தால்) ஈறு (முக்தியை) அது (அதுவே) காட்டி (காண்பித்து)
பயம் (இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான பயமும்) கெட்டு (அழிந்து போய்) அவர்க்கு (அவர்களுக்கு) ஓர் (ஒரே) பர (பரம் பொருளுடன் சேருவதாகிய) நெறி (முக்திக்கு வழியாக) ஆமே (அதுவே இருக்கும்).

விளக்கம்:

மாயையிலேயே மயங்கி இருக்கின்றவர்களும், இறைவனை அடையும் வழி முறைகளை கடைபிடித்து அதனால் மாயை நீங்கி தெளிவு பெற்றவர்களும், தம்மால் இயன்ற வரை முயற்சி செய்து நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் அறுப்பதற்கு காரணமாக சுழு முனை நாடியின் துளைக்கு உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் தமது மூச்சுக்காற்றை இயக்குவதன் மூலம் குண்டலினி சக்தியை கொண்டு சென்று சேர்த்து அமிழ்தத்தை பெற முடிந்தால் முக்தியை அதுவே காண்பித்து, இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான பயமும் அழிந்து போய் அவர்களுக்கு ஒரே பரம் பொருளுடன் சேருவதாகிய முக்திக்கு வழியாக அதுவே இருக்கும்.

பாடல் #1540

பாடல் #1540: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

சேய னணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் றுளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானிட ராமவர்
காய மிளைக்குங் கருத்தறியார் களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

செய னணியன பிணியிலன பெரநநதி
தூயன றுளககற நொககவல லாரகடகு
மாயன மயககிய மானிட ராமவர
காய மிளைககுங கருததறியார களெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி
தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு
மாயன் மயக்கிய மானிடராம் அவர்
காயம் இளைக்கும் கருத்து அறியார்களே.

பதப்பொருள்:

சேயன் (நிலையான மனமில்லாதவர்களுக்கு தூரத்தில் இருந்து அருளுபவனும்) அணியன் (நிலையான மனமுடையவர்களுக்கு அருகிலே இருப்பவனும்) பிணி (இந்த இரு நிலையில் இருப்பவர்களின் மேலும் பற்று) இலன் (இல்லாதவனும்) பேர் (பெயரில்) நந்தி (நந்தி என்று அழைக்கப் படும் இறையே குரு என்ற நிலையில் இருப்பவனும்)
தூயன் (தூய்மையானவனும்) துளக்கு (ஆகிய இறைவனை அசைவு) அற (இல்லாத மனதுடன்) நோக்க (தமக்குள்ளேயே பார்க்க) வல்லார்கட்கு (முடிந்தவர்களுக்கு அவ்வாறெல்லாம் இருப்பான்)
மாயன் (அவ்வாறு பார்க்க முடியாதவர்களுக்கு மாயனாக இருந்து) மயக்கிய (மாயையில் மயக்கிய) மானிடராம் (மனிதர்களாகிய) அவர் (மற்றவர்கள் அனைவரும்)
காயம் (தம்முடைய உடலின் மேல் இருக்கின்ற) இளைக்கும் (பற்றை குறைத்து உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அறிந்து கொள்ளுகின்ற) கருத்து (முறையை) அறியார்களே (அறியாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

நிலையான மனமில்லாதவர்களுக்கு தூரத்தில் இருந்து அருளுபவனும் நிலையான மனமுடையவர்களுக்கு அருகிலே இருப்பவனும் இந்த இரு நிலையில் இருப்பவர்களின் மேலும் பற்று இல்லாதவனும் பெயரில் நந்தி என்று அழைக்கப் படும் இறையே குரு என்ற நிலையில் இருப்பவனும் தூய்மையானவனும் ஆகிய இறைவனை அசைவு இல்லாத மனதுடன் தமக்குள்ளேயே பார்க்க முடிந்தவர்களுக்கு அவ்வாறெல்லாம் இருக்கின்றான் இறைவன். அவ்வாறு பார்க்க முடியாமல் இருக்கின்ற மனிதர்களாகிய மற்றவர்கள் அனைவருக்கும் அவன் மாயனாகவே இருந்து மாயையில் மயக்கி வைத்திருப்பதால் அவர்கள் அனைவரும் தம்முடைய உடலின் மேல் இருக்கின்ற பற்றை குறைத்து உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அறிந்து கொள்ளுகின்ற முறையை அறியாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1541

பாடல் #1541: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

வழியிரண் டுக்குமோர் வித்தது வான
கழியது பார்மிசை வாழ்த லுறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவறி வார்நெறி நாடகில் லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வழியிரண டுககுமொர விததது வான
கழியது பாரமிசை வாழத லுறுதல
சுழியறி வாளனறன சொலவழி முனனின
றழிவறி வாரநெறி நாடகில லாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன
கழி அது பார் மிசை வாழ்தல் உறுதல்
சுழி அறிவாளன் தன் சொல் வழி முன் நின்று
அழிவு அறிவார் நெறி நாட கில்லாரே.

பதப்பொருள்:

வழி (இறைவனை அடையும் முக்திக்கு வழி என்று யோக மார்க்கமும் ஞான மார்க்கமும் அறிந்து செல்பவர்களுக்கும் இறைவனை அடைவதற்கான வழி எது என்று அறியாமலேயே பக்தி மார்க்கத்திலும் கர்ம மார்க்கத்திலும் செல்பவர்கள்) இரண்டுக்கும் (ஆகிய இரண்டு வழியில் செல்பவர்களுக்கும்) ஓர் (ஒரே) வித்து (மூல விதையாக) அது (அவர்களுக்குள்) ஆன (இருப்பதாகிய)
கழி (சுழுமுனை நாடி) அது (எனும் நடு நாடியின் மூலம் குண்டலினி சக்தியை ஏற்றி சென்று) பார் (இந்த உலகத்தின்) மிசை (மேல்) வாழ்தல் (வாழ்வதும்) உறுதல் (கர்மங்களை அனுபவிப்பதும் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு)
சுழி (சுழுமுனை நாடியின் உச்சித் துளையில் வீற்றிருக்கும்) அறிவாளன் (அனைத்தும் அறிந்தவனாகிய) தன் (இறைவனே குருவாக இருந்து) சொல் (சொல்லி அருளுகின்ற) வழி (வழியை) முன் (முயற்சி செய்து) நின்று (விட்டுவிடாமல் கடைபிடித்து)
அழிவு (அதன் மூலம் கர்மங்கள் அனைத்தும் அழிந்து போவதை) அறிவார் (அறிந்து கொண்டவர்களின்) நெறி (வழி முறையை) நாட (தேடி அடைவதற்கு) கில்லாரே (முயற்சி செய்யாமலேயே ஆசைகளின் வழியே சென்று கொண்டு இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடையும் முக்திக்கு வழி என்று யோக மார்க்கமும் ஞான மார்க்கமும் அறிந்து செல்பவர்களுக்கும் இறைவனை அடைவதற்கான வழி எது என்று அறியாமலேயே பக்தி மார்க்கத்திலும் கர்ம மார்க்கத்திலும் செல்பவர்கள் ஆகிய இரண்டு வழியில் செல்பவர்களுக்கும் ஒரே மூல விதையாக அவர்களுக்குள் இருப்பதாகிய சுழுமுனை நாடி எனும் நடு நாடியின் மூலம் குண்டலினி சக்தியை ஏற்றி சென்று இந்த உலகத்தின் மேல் வாழ்வதும் கர்மங்களை அனுபவிப்பதும் ஆகிய இரண்டிலிருந்தும் விடுதலை பெறுவதற்கு சுழுமுனை நாடியின் உச்சித் துளையில் வீற்றிருக்கும் அனைத்தும் அறிந்தவனாகிய இறைவனே குருவாக இருந்து சொல்லி அருளுகின்ற வழியை முயற்சி செய்து விட்டுவிடாமல் கடைபிடித்து அதன் மூலம் கர்மங்கள் அனைத்தும் அழிந்து போவதை அறிந்து கொண்டவர்களின் வழி முறையை தேடி அடைவதற்கு முயற்சி செய்யாமலேயே ஆசைகளின் வழியே சென்று கொண்டு இருக்கின்றார்கள்.

பாடல் #1542

பாடல் #1542: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

மாதவர்க் கெல்லா மாதேவர் பிரானென்பர்
நாதம தாகி யறியப் படுநந்தி
பேதஞ் செய்யாதே பிரானென்று கைதொழி
லாதியு மன்னெறி யாகிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மாதவரக கெலலா மாதெவர பிரானெனபர
நாதம தாகி யறியப படுநநதி
பெதஞ செயயாதெ பிரானெனறு கைதொழி
லாதியு மனனெறி யாகிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மா தவர்க்கு எல்லாம் மா தேவர் பிரான் என்பர்
நாதம் அது ஆகி அறியப்படும் நந்தி
பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில்
ஆதியும் அந் நெறி ஆகி நின்றானே.

பதப்பொருள்:

மா (மாபெரும்) தவர்க்கு (தவங்களை செய்தவர்கள்) எல்லாம் (அனைவரும்) மா (மாபெரும்) தேவர் (தேவர்களுக்கெல்லாம்) பிரான் (தலைவன்) என்பர் (என்று தமக்குள் உணர்ந்த இறைவனை கூறுவார்கள்)
நாதம் (அந்த இறைவனை சாதகர்கள் தமக்குள் நாத) அது (வடிவமாக) ஆகி (ஆகி) அறியப்படும் (அறியப்படுகின்ற) நந்தி (நந்தி எனும் பெயரால் குருநாதனாக இருந்து வழி காட்டும் போது)
பேதம் (அவனை வேறு யாராகவும் பிரித்து) செய்யாதே (எண்ணிப் பார்க்காமல்) பிரான் (எமது தலைவன் இவனே) என்று (என்று எண்ணிக் கொண்டு) கை (தம்மால் இயன்ற வழியில்) தொழில் (அவனை அடைவதற்கு முயற்சி செய்தால்)
ஆதியும் (ஆதிப் பரம் பொருளாக இருக்கின்ற அந்த இறைவனும்) அந் (தாங்கள் முயன்ற அந்த) நெறி (வழியாகவே) ஆகி (ஆகி) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்:

மாபெரும் தவங்களை செய்தவர்கள் அனைவரும் மாபெரும் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று தமக்குள் உணர்ந்த இறைவனை கூறுவார்கள். அந்த இறைவனை சாதகர்கள் தமக்குள் நாத வடிவமாக ஆகி அறியப்படுகின்ற நந்தி எனும் பெயரால் குருநாதனாக இருந்து வழி காட்டும் போது அவனை வேறு யாராகவும் பிரித்து எண்ணிப் பார்க்காமல் எமது தலைவன் இவனே என்று எண்ணிக் கொண்டு தம்மால் இயன்ற வழியில் அவனை அடைவதற்கு முயற்சி செய்தால் ஆதிப் பரம் பொருளாக இருக்கின்ற அந்த இறைவனும் தாங்கள் முயன்ற அந்த வழியாகவே ஆகி நிற்கின்றான்.