பாடல் #342

பாடல் #342: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

எங்கும் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபால்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித்து ஆழிசெய் தானே.

விளக்கம்:

அனைத்து உயிருக்குள்ளும் எங்கும் எதிலும் இரண்டறக் கலந்திருப்பவனும் அனைத்து உயிர்களும் உய்ய வேதங்களை உலகிற்கு ஓதி அந்த வேதத்திற்கு முதல்வனாயும் இருக்கும் இறைவனை உணராமல் உயிர்கள் வீணாக ஒருவர்மேல் ஒருவர் குரோதம் கொண்டு ஆத்திரத்தில் அறிவிழந்து அடுத்த உயிருக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்பதை உணராமல் அந்த உயிரை அழிக்க பல கெட்ட செயல்களைச் செய்கின்றனர். உயிர்கள் இறைவா காப்பாற்று என்று வேண்டிட குரோதம் என்னும் அசுர குணத்தை உயிர்களிடம் உள்ள சக்திமய சக்கரங்களை கருவியாக பயன்படுத்தி இறைவன் தனது திருவடி மூலம் அழித்தான்.

இந்த பாடலுக்கான புராணம் நிகழ்ந்த இடம் திருவிற்குடி தலமாகும். ஒரு முறை இந்திரன் தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். கோபமடைந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர் சிவன் என்பதை அறிந்த இந்திரன் ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளி பாற்கடலில் விழுந்தது. அதில் ஒரு குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான குழந்தைக்கு ஜலந்தராசூரன் என பெயர் வைக்கப்பட்டது. அவன் பெரியவனானதும் மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும் சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன் தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும் என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு அசுரன் முன் வந்து நின்று தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார் இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும் என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன் என் மனைவியின் கற்பின் திறனால் எனக்கு அழிவு வராது என சவால் விட்டான். இந்த நேரத்தில் திருமாலை அழைத்த சிவன் நீர் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில் மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்நேரத்தில் சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது.

Related image

பாடல் #343

பாடல் #343: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாருமறி யாரே.

விளக்கம்:

கங்கையைத் தன் சிவந்த சடையில் சூடியவனும் எல்லாவற்றிற்கும் முதலாயும் மூலமாயும் இருப்பவனுமாகிய இறைவனை முப்புரம் என்னும் இடத்தை எரித்தவன் என்று கூறுபவர்கள் மூடர்கள். அவர்களுக்கும் முப்புரமாக இருப்பது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்பது புரியவில்லை. அவற்றை இறைவன் அழிக்கிறான் என்பதை உணராமல் மூன்று புரங்களை எரித்ததாக கூறுபவர்களில் எவரும் அந்தப் புரங்கள் எரிந்த விதத்தை அறிந்தவர்கள் இல்லை.

இந்த புராணநிகழ்வு நடந்த இடம் திருவதிகை தலமாகும். தாருகாசுரன் என்கிற அசுரனின் மகன்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகிய மூவரும் மிகச்சிறந்த இறை பக்தர்கள். அவர்கள் மூவரும் பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் செய்து நினைத்த இடத்திற்கு உடனே பறந்து செல்லும் மூன்று கோட்டைகளையும் அவை மூன்றும் ஒன்றாக இருக்கும்போது ஒரேயொரு அம்பினால் மட்டுமே தாங்கள் அழியவேண்டும் என்றும் வரம் பெற்றனர். வரம் கிடைத்ததும் அவர்கள் தேவலோகம் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வந்தனர். அவர்களின் அதிகாரம் தாங்காமல் தேவர்களும் பிரம்மரும் திருமாலும் இறைவனை வேண்ட மனமிறங்கிய இறைவன் அழகிய பைரவ அவதாரம் எடுத்து தேவதச்சன் விஸ்வகர்மாவிடம் ஒரு தேர் செய்யச் சொல்லி சந்திர சூரியரே தேர்ச் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களே தேரில் பூட்டிய குதிரைகளாகவும் பிரம்ம தேவரே தேரை ஓட்டும் சாரதியாகவும், மேரு மலையே வில்லாகவும், வாசுகி நாகமே வில்லைப் பூட்டும் நாணாகவும், அக்கினி அம்பின் முனையாகவும், வாயு அம்பின் வாலாகவும், திருமாலே அம்பாகவும் ஆக்கி எடுத்துக்கொண்டு முப்புரத்தை வந்து சேர்ந்தார். இறை பக்தியில் மிகவும் சிறந்து விளங்கும் அசுரர்களை அழிக்க வேண்டாமென்ற பெருங்கருணையில் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து ஒரு பார்வை பார்க்க மூன்று கோட்டைகளும் உடனே எரிந்து சாம்பலாகி மூவரும் இறைவனின் காலடியில் விழுந்து வணங்க இறைவனும் அவர்களை ஆட்கொண்டு தமது கோயிலின் வாயிற் காவலர்களாகவும் இருவரையும் கோயிலில் செய்யும் குடமுழுக்கை ஏற்பவராக ஒருவரையும் ஏற்றுக்கொண்டார்.

குறிப்பு: 113, 114, 115, 118, 210, 212, 218 ஆகிய திருமந்திர பாடல்களில் உயிர்களிடம் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை இறைவன் எப்படி அழித்து உயிர்களை காக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த பாடல்களை நமது https://www.kvnthirumoolar.com/topics/thirumanthiram/ வலைதளத்தில் தேடல் பகுதியில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

Related image

பாடல் #344

பாடல் #344: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந்த தன்று கொலையே.

விளக்கம்:

தாருகா வனத்திலிருந்த முனிவர்கள் இறைவனை வணங்காமல் இறைவனின் அருளை விட தங்களின் மந்திர சக்தியே பெரிது தாம் கற்ற மந்திரங்களின் மூலமாக எதையும் அடையலாம் என்ற அகங்காரத்தில் இருந்தனர். இவர்களின் அறியாமையைப் போக்க இறைவன் அழகிய உருவம் கொண்ட பிக்‌ஷாடனராகத் தோன்றி அந்த முனிவர்களின் வீட்டுக்குச் சென்று அங்கு இருந்த முனி பத்தினிகளின் முன்னால் பிச்சை கேட்டு நின்றார். அவரின் அழகில் மயங்கிய முனி பத்தினிகள் அவர் பின்னாலேயே மயக்கத்தில் கூடி வர ஆரம்பித்தனர். தங்களது பத்தினிகள் இப்படி ஒரு ஆடவனின் பின்னால் மயங்கி வருவதைக் கண்டு கோபமுற்ற முனிவர்கள் தமது தவ வலிமையால் மூன்றுவிதமான தீயை வளர்த்து மந்திரங்கள் மூலமாக (ஆகவனீயம் – காட்டுத்தீ, காருகபத்தியம் – வீட்டுத்தீ, தட்சிணாக்கினியம் – ஏட்டுத்தீ) கரிய நிறமுடைய ஒரு பெரிய யானையைத் தோன்றுவித்தனர். யாகத் தீயில் தோன்றிய யானை அவரை அழித்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் அந்தத் தீயிலிருந்து வெளிவந்த யானையைக் காடே அதிரும்படி பிளந்து கொன்று அதன் தோலை தனக்குப் போர்வையாக போர்த்திக்கொண்டு மூன்று வகையாக நெருப்பும் அதில் சொல்லும் மந்திரங்களும் மந்திரத்தின் பலனாக அதிலிருந்து வரும் பலனும் அனைத்தும் யாமே என்று தாருகா வனத்திலிருந்த முனிவர்களுக்கு உணர்த்தினார். இந்த புராணநிகழ்வு நடந்த இடம் திருவழுவூர் தலமாகும்.

உள்விளக்கம்: உயிர்களுக்கு வரும் கோபத்தினால் நான் என்ற அகங்காரம் அதிகரித்து என்ன செய்கின்றோம் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் மதம் பிடித்த யானை போல் இருக்கும் போது உயிர்கள் இறைவனை சரணடைய இறைவன் கோபத்தையும் அகங்காரத்தையும் அழித்து அனைத்தும் யாமே என்று உணர்த்துகிறார்.

Related image

பாடல் #345

பாடல் #345: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

விளக்கம்:

மூலாதாரத்தில் எரிந்து கொண்டு இருக்கும் குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி அங்கே சகஸ்ரரதளத்தில் சேர்த்து அதைத்தாண்டிய பரவெளியில் இருக்கும் இறைவனை உணரும் உயிர்களுக்கு காலனை உதைத்து சாகா வரம் அளிப்பான் இறைவன். இதை உலகத்தவர்க்கு உணர்த்தும் விதமாகவே திருக்கடவூரின் திருத்தலம் இறைவனின் அருளால் நன்றாக அமைந்தது.

இந்த பாடலுக்கான புராணம் நிகழ்ந்த இடம் திருக்கடவூர் தலமாகும். மிருகண்டு முனிவரும் அவருடைய மனைவியான மருத்துவவதி தேவியாரும் தங்களுக்கு குழந்தை பாக்கியம் தரும்படி இறைவனை வேண்ட குறைந்த ஆயுட்கொண்ட அறிவாளியான குழந்தை வேண்டுமா அல்லது அதிக ஆயுட்கொண்ட முட்டாளான குழந்தை வேண்டுமா என்று இறைவன் கேட்க அறிவாளியான குழந்தையே வேண்டும் என்று கேட்டு மார்க்கண்டேயன் எனும் குழந்தையைப் பெற்றுக் கொண்டனர். மார்க்கண்டேயர் பிறந்ததிலிருந்து ஆயுள் அதிகரிக்க இறைவனே சரணடைய வேண்டும் என்று போதித்து வந்தனர். அதனால் மிகச்சிறந்த இறை பக்தனான மார்க்கண்டேயர் எப்போதும் இறை பூஜையிலேயே வாழ்க்கையைக் கழித்து வந்தார். அவரது ஆயுட்காலம் முடியும்போது அவரை மேலுலகம் அழைத்துச்செல்ல எமதருமரும் எந்தப் பூஜையில் இருந்தாலும் அவரது ஆயுள் முடிந்தால் அழைத்துச் செல்லவேண்டியது தமது கடமை என்று எண்ணி அவரை அழைத்துச் செல்ல பாசக் கயிற்றை வீசுகிறார். சிவபூஜையில் இருந்த மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைக் கட்டி அணைத்திருக்கும்போது பாசக்கயிறு அவரோடு சிவலிங்கத்தின் மீதும் விழ அதிலிருந்து இறைவன் வெளிவந்து எமது பூஜையில் இருக்கும் அடியவர் எவரையும் கொண்டு செல்லும் உரிமை உமக்கு இல்லை என்று கூறி எமதருமரை காலால் எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு, மார்க்கண்டேயருக்கும் என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக இருக்கும் வரமளித்தார்.

உட்கருத்து: தியானத்தில் இருந்து மூச்சுக்காற்றை உள்ளிழுத்து அடக்கி அதன் மூலம் மூலாதாரத்தில் எரிந்து கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று ஏழாவதான சக்கரமான சகஸ்ரரதளத்தில் சேர்த்து அங்கு இருக்கும் இறைவனை உணர்ந்து விட்டால் மரண பயம் இன்றி சிரஞ்சீவியாக இறைவனிடம் பேரானந்தத்திலேயே இருக்கலாம்.

பாடல் #346

பாடல் #346: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்தே.

விளக்கம்:

உலக நன்மைக்காக இன்னொரு உயிரை உருவாக்க தனது துணையுடன் சேரும் உயிர்கள் இறைவனை அடைய தடையாய் இருக்கும் காமம் என்னும் நோயில் சிக்காமல் இருக்க இறைவனை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒரு நிலைப்பட்ட மனமுடன் இறைவனை வேண்ட இறைவன் காமம் என்னும் நோயிலிருந்து உயிரை காப்பாற்றி உலக நன்மைக்காக இன்னொரு உடலுடன் கூடிய உயிரை உருவாக்க மட்டுமே இறை எண்ணத்துடன் தன்னுடைய துணையுடன் சேரும் உயிருக்கு அருந்தவ யோகத்தை அருளுவார்.

இந்த புராண நிகழ்வு நடந்த இடம் திருக்கொறுக்கை தலமாகும். சிவபெருமான் தியானத்தில் இருக்கும்போது உலக நன்மைக்காக அவர் தியானத்தை கலைக்க வேண்டும் என்று இந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மன்மதன் இறைவனின் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அப்போதும் இறைவன் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனைப் பார்க்க அந்த நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பில் மன்மதன் எரிந்து சாம்பலானான். பிறகு மன்மதனின் மனைவியான ரதி தேவி இறைவனை வேண்டிக்கொள்ள உருவமில்லாத அருவமாக மன்மதனை மறுபடியும் உயிர்ப்பித்துக் கொடுத்தார்.

பாடல் #350

பாடல் #350: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்காத அருள்செய்தான் நின்மலன் தானே.

விளக்கம்:

இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த இலங்கையின் அரசன் ராவணன் ஒரு முறை அவரைப் பார்க்க எண்ணி கையிலாய மலைக்கு வந்தான். அவன் மானிடனாக இருப்பதால் உள்ளே விட முடியாது என்று வாயிற் காவலர்கள் தடுத்துவிட இறைவனைக் காண முடியவில்லையே என்ற கோபத்தில் தனது இருபது தோள்களால் கையிலாய மலையை தூக்கி இலங்கைக்கு எடுத்துச் செல்ல முயன்றான். ராவணனை நிகரில்லாத பேராற்றலை உடைய இறைவன் தமது திருவடியின் பெருவிரலால் சிறிது அழுத்தம் கொடுக்க அதன் அழுத்தத்தால் தாங்க முடியாத பெரும் வேதனையை அடைந்த இராவணன் கோபம் நீங்கி இறைவா எம்மைக் காப்பாற்று என்று உரக்க அழைத்தான். ஒரு மாசும் இல்லாத இறைவனும் அவனின் உண்மையான பக்தியை மெச்சி அவன் முன்னே தோன்றி அவனுக்கு என்றும் நீங்காத திருவருளை வழங்கி அருளினார்.

உட்கருத்து: உயிர்கள் பாடல் #347 ல் உள்ளபடி லிங்க தத்துவத்தையும் லிங்கத்தையும் தனக்குள் உணரும் போது மனிதனின் குணங்கள் பத்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் கன்மேந்திரியம் ஐந்தும் அவற்றால் ஏற்படங்கூடிய உலகப்பற்றுகள் இறைவனை அடையவிடாமல் தடுக்கும் போது இறைவா காப்பாற்று என்று உயிர்கள் வேண்டிட அவர்களுக்கு திருவடி தீட்சை வழங்கி அவர்களின் குணங்கள் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களை நீங்கி மீண்டும் வராமல் அருள் செய்வான்.

குணங்கள் உயிரை மனதால் பாதிப்பது குணங்களுக்கான விளக்கம்:

  1. காமம்-சிற்றின்பம்
  2. குரோதம்-கோபம்
  3. உலோபம்-பேராசை,கருமித்தனம்
  4. மோகம்-மாயை யால் நிகழும் மயக்க உணர்ச்சி,
  5. மதம்-கொள்கை,செருக்கு,வெறி,மதுபானக் களிப்பு,பெருமை
  6. மாச்சரியம்-பொறாமை,பகைமை
  7. டம்பம்-ஆடம்பரம்
  8. தர்ப்பம்-ஆசைகள், கர்வம்
  9. அசூயை-பொறாமை
  10. ஈரிசை-பிறர் துன்பம் கண்டு மகிழ்வது.

ஞானேந்திரிய கர்மங்கள் என்பது ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி இவற்றால் உயிரை பாதிப்பது,

கன்மேந்திரியம் என்றால் செயல் மனித உடல் செய்யும் ஐந்து வகையான செயல்கள் இந்த ஐந்து வகையான செயல்கள் தொடர்ந்து செயல்படுவதால் ஆத்மா உடலோடு கலந்து இருக்கிறது.

Image result for lingam

பாடல் #351

பாடல் #351: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

உறுவ தறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலை பெற்றானே.

விளக்கம்:

இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்த தண்டி மணல்களைச் சேர்த்து ஒரு லிங்கம் செய்து அந்த மணல் லிங்கத்தை பசும்பாலால் வழிபட்டான். பசும்பால் வீணாவதைப் பார்த்துக் கோபப்பட்ட தண்டியின் தந்தை அந்த மணல் லிங்கத்தைக் காலால் எட்டி உதைத்தார். தந்தையின் இந்த செயலால் கோபம் கொண்ட தண்டி பசுவை மேய்க்க வைத்திருந்த கம்பை கையில் எடுக்க அந்தக் கம்பு மழு என்னும் ஆயுதமாக மாறியது. அந்த மழுவால் தன் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டினான். தண்டீசனின் பக்தியைப் பார்த்த சிவபெருமான் தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் சண்டேசுரருக்கு அணிவித்தான்.

உட்கருத்து: லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்த உயிர் உடலில் இருந்து உயிரை பிரிக்கவும் மீண்டும் பிறவாமல் பிறவியை அறுக்கவும் தான் உணர்ந்த இறைவனை பூஜை செய்யும் பொழுது உடல் தனது ஐம்புலன்களால் அதை தடுக்கிறது. குண்டலினி சக்தி என்னும் கம்பால் ஐம்புலன்களை அடிக்க குண்டலினி என்னும் கம்பு மழுவாக மாறி உடலில் இருக்கும் இடகலை பிங்கலை முச்சுக்காற்றை வெட்டி உடலில் இருந்து உயிரை பிரிக்கிறது. உயிரின் பக்தியைப் பார்த்த சிவபெருமான் தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் அந்த உயிருக்கு அணிவித்து தனது அடியவர்களின் தலைவன் என்னும் பதவி அளிப்பார்.

பாடல் #352

பாடல் #352: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடுஇல் புகழோன் எழுகவென் றானே.

விளக்கம்:

தேவர்கள் எல்லாம் தமக்குத் துன்பம் நேரும் போதெல்லாம் வாடிய முகத்துடன் மனம் வருந்தி இறைவனை விரும்பிச்சென்று இறைவா நமசிவாய என்று திருவடி பணிந்து கும்பிட ஈடு இணையில்லாத புகழை உடைய இறைவன் அவர்கள் மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி அவர்களின் துயரங்களைத் தீர்த்தான்.

உட்கருத்து: தனக்குள் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தை உணர்ந்த உயிர்களுக்கு படைக்கும் பிரம்மாவின் தொழிலையும் காக்கும் திருமாலின் தொழிலையும் அளித்து அந்த உயிருக்கு தேவர்கள் என்னும் தகுதியை அளிக்கும் இறைவன் (இதனை திருமந்திர பாடல் எண் #349 மூலம் அறியலாம்) அவர்கள் உணர்ந்த லிங்க தத்துவத்தை இறைவா நமசிவாய என்று வழிபட ஈடு இணையில்லாத புகழை உடைய இறைவன் அவர்கள் மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி அவர்களின் உடலில் இருந்து உயிரை பிரித்து பிறவா நிலையை அந்த உயிருக்கு அளிப்பார். லிங்க வடிவின் தத்துவமும் இறைவனும் ஒன்றே என்பதை இப்பாடலின் மூலம் உணரலாம்.

Image result for lingam

Gurunathar’s Message Moola star #8

Gurunathar’s Divine Message – Moolam Pooja ~ 09-10-2005

I would like to say something. Roughly during the past two weeks several people have debated on a particular question, namely, “why do the words of the Guru fail at times?”

Firstly, when you acknowledge and accept someone has your Guru, you automatically relinquish the right to question his words. Before you accept the fact mentally perhaps it is natural to have doubts; but once you have accepted a person as your Guru, you must have none. This is the rule.
Secondly, if you have accepted your Guru’s words as God’s words: I mean the Guru who is in communion with God, he does not say anything without reason. It is natural that some people get upset when things do not turn out the way that his or her Guru stated. Later they realize why he said, what he said and the full meaning of what he said will sink in.
There is something else I would like to stay here. When you go to your Guru seeking guidance, you must not expect him to say what you want to hear and bless you according to your expectation. He will tell you what you need to be told and bless you likewise. There is nothing wrong with this. As an example, if a child’s stomach is upset, his mother will not give him spicy food. Similarly, if the time is not right the Guru will not give his blessings in the form of results. It has nothing to do with liking or disliking a person. I would like to emphasis that this is the correct action.
What kind of question do you ask a Guru? The rule is when you have tried your best to clear your doubts with your own intelligence and have failed to do so, only then do you approach your Guru. This is because human kind, as the crown of God’s creation has been endowed with intelligence. If you feel lost even after using your thinking ability, then if you seek your Guru’s grace, you will get the necessary clarifications.

{Translation of Gurunathar’s Divine message given to and read by Guruji Shri.K.V.Narayanan}

பாடல் #361

பாடல் #361: இரண்டாம் தந்திரம் – 4. தக்கன் வேள்வி (இறை அருளோடு செய்யும் வேள்வியின் தத்துவம்)

தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே.

விளக்கம்:

இறையருள் இல்லாத தக்கன் செய்த வேள்வியில் கலந்து கொண்டு பின்பு இறைவனின் கோபத்திற்குள்ளாகி இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு அனைத்தும் இறைவனே என்று புரிந்துகொண்ட தேவர்கள் இப்படி ஒரு பிழை செய்துவிட்டோமே என்று கலங்கி இருக்கும் போது தேவர்களே நீங்கள் கலங்க வேண்டாம். இறைவன் மேல் உண்மையான அன்பு வைத்தவர்கள் அனைவருமே சென்று சேருமிடம் அவரது திருவடிகளே. தக்கனது வேள்வியை அழித்தது அவனது அறியாமையை நீக்கி அவனை ஆட்கொள்ள வேண்டும் என்ற கருணையினால்தான். தூய்மையான வாக்கை உடைய இறைவன் எது செய்தாலும் அது உயிர்களின் நன்மைக்கே ஆகும்.

உட்கருத்து: உயிர்கள் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றையும் ஒன்றாக வைத்து இறைவனை வேண்டி இறையருளோடு பல செயல்களைச் செய்தாலும் சில சமயங்களில் அவை தோல்வியடைவதைக் கண்டு மனம் கலங்க வேண்டாம். அவை தோல்வியடைவதும் உயிர்கள் மீது இருக்கும் இறைவனது மாபெரும் கருணையினால்தான். அதற்கும் பின்னால் இறைவன் அடியவருக்கு வழங்கும் அருள் இருக்கும்.

Image result for சதாசிவ மூர்த்தி