பாடல் #351

பாடல் #351: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

உறுவ தறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலை பெற்றானே.

விளக்கம்:

இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்த தண்டி மணல்களைச் சேர்த்து ஒரு லிங்கம் செய்து அந்த மணல் லிங்கத்தை பசும்பாலால் வழிபட்டான். பசும்பால் வீணாவதைப் பார்த்துக் கோபப்பட்ட தண்டியின் தந்தை அந்த மணல் லிங்கத்தைக் காலால் எட்டி உதைத்தார். தந்தையின் இந்த செயலால் கோபம் கொண்ட தண்டி பசுவை மேய்க்க வைத்திருந்த கம்பை கையில் எடுக்க அந்தக் கம்பு மழு என்னும் ஆயுதமாக மாறியது. அந்த மழுவால் தன் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டினான். தண்டீசனின் பக்தியைப் பார்த்த சிவபெருமான் தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் சண்டேசுரருக்கு அணிவித்தான்.

உட்கருத்து: லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்த உயிர் உடலில் இருந்து உயிரை பிரிக்கவும் மீண்டும் பிறவாமல் பிறவியை அறுக்கவும் தான் உணர்ந்த இறைவனை பூஜை செய்யும் பொழுது உடல் தனது ஐம்புலன்களால் அதை தடுக்கிறது. குண்டலினி சக்தி என்னும் கம்பால் ஐம்புலன்களை அடிக்க குண்டலினி என்னும் கம்பு மழுவாக மாறி உடலில் இருக்கும் இடகலை பிங்கலை முச்சுக்காற்றை வெட்டி உடலில் இருந்து உயிரை பிரிக்கிறது. உயிரின் பக்தியைப் பார்த்த சிவபெருமான் தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் அந்த உயிருக்கு அணிவித்து தனது அடியவர்களின் தலைவன் என்னும் பதவி அளிப்பார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.