நித்த சங்காரத்தில் உயிர் ஸ்தூல சூட்சும சரீரங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும். வைத்த சங்காரத்தில் மாயையுடன் கனவு நிலையில் உயிர் ஸ்தூல உடலை விட்டு விலகி சூட்சும உடலுடன் தொடர்பு கொண்டிருக்கும். சுத்த சங்காரத்தில் மனம் எந்த எண்ணமும் இல்லாமல் செயல் ஒன்றும் இல்லாது இருக்கும். உய்த்த சங்காரத்தில் சிவன் அருளில் லயித்து இருக்கும். இதுவே உண்மையான சங்காரம் ஆகும்.
உலகத்தில் பிறவி எடுக்க தாய் வயிற்றில் கருவாகப் பிறந்த அனைத்து உயிர்களுமே தங்களின் வினைப் பயனாகிய துன்பங்களையும் சேர்த்துக் கொண்டுதான் பிறக்கின்றன. இறைவனது கருணையினால் அந்த துன்பங்கள் சிறிது நேரமாவது நீங்கித் தம்மை மறந்து உயிர்கள் இருக்கும் தூக்க நிலை தினமும் நிகழும் நித்த சங்காரமாகும். உடலை விட்டு உயிர் பிரிந்து ஆன்மா மட்டுமே இருக்கின்ற நிலை சுத்த சங்காரமாகும் ஸ்தூல உடலும் சூட்சும உடலும் பிரிந்து இருக்கும் கனவு நிலையில் ஆன்மா மாயையிலேயே மூழ்கி கேவலப்பட்டு இருக்கின்ற நிலை வைத்த சங்காரமாகும். வினைகளையெல்லாம் தீர்த்துவிட்ட உயிர் ஸ்தூல உடலை விட்டுப் பிரிந்து சூட்சும உடலும் அழிந்து தனித்தன்மையோடு இருந்த ஆன்மா உண்மைப் பொருளான இறைவனுடனே இரண்டறக் கலந்துவிடும் போது நான் எனும் தனித்தன்மை முற்றிலும் அழிந்து சிவமாக மாறும் நிலை உய்த்த சங்காரமாகும்.
உயிர்கள் தங்களது துன்பங்களை மறந்து நீண்ட நேரத்திற்கு இளைப்பாற வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் நித்த சங்காரம் நிகழ்கிறது. ஆரம்பம் இல்லாத கனவு நிலையில் உலக மாயைகளெல்லாம் மறைந்து எண்ணங்களும் இல்லாமல் உயிர்கள் சிறிது நேரமாவது இளைப்பாற வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் வைத்த சங்காரம் நிகழ்கிறது. இறைவனது திருவருளை மட்டுமே எண்ணிக் கொண்டு மற்ற அனைத்தையும் விட்டு விலகி ஆன்மா திரும்ப வர வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் சுத்த சங்காரம் நிகழ்கிறது. அனைத்து வினைகளையும் கழித்த ஆன்மா இனி தனித்தன்மை இல்லாமல் உண்மைப் பொருளான இறைவனுடனே கலந்துவிட வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் உய்த்த சங்காரம் நிகழ்கிறது. இறைவனது கருணையை மதித்துப் பார்த்தால் இந்த நான்கு சங்காரங்களும் உயிர்களின் நன்மைக்காகவே இறைவன் வைத்திருக்கின்றான்.
சேற்றுச் சகதியில் விதைத்த விதை அந்தச் சகதியையே ஆதாரமாகக் கொண்டு அதனிடமிருந்து வெளிப்பட்டு பயிராக மேலெழும்பி வருவதைப் போல அனைத்திற்கும் பழைமையான இறைவனிடமிருந்து அவனையே முதலாகக் கொண்டு அவனிடமிருந்து வெளிப்பட்டு உலகத்தில் கருவாக வந்து பிறக்கின்றது ஆன்மா. விளைந்த பயிர் பயன்படுத்தப்பட்ட பிறகு அழிந்து திரும்பவும் மண்ணோடு மண்ணாகவே ஆகிவிட்டாலும் அது எப்படி முன்பு விதைத்த விதைக்குள் மீண்டும் போய் சேர முடியாதோ அதுபோலவே உலகத்தில் கருவாக வந்து பிறந்த ஆன்மா உலகத்தில் வாழ்ந்து இறந்த பிறகும் திரும்பவும் இறைவனிடமே சென்று சேர்ந்துவிட முடியாது. இதனாலேயே ஆன்மாவுக்குத் தனித்த வாழ்வு என்பது இல்லாத சங்காரச் சுழற்சியில் தள்ளப்பட்டு மீண்டும் பிரம்மனால் கருவாக பிறந்து திருமாலால் காக்கப்பட்டு வளர்ந்து மறுபடியும் சங்காரத்தில் இறந்து கொண்டே இருக்கும். எப்போது மண்ணில் பிறந்த பயிர் மண்ணிலே கலந்து அந்த மண்ணும் ஒரு நாள் மறைந்து போகின்றபோது அந்தப் பயிரின் தடயமே அழிந்து போய்விடுவது போல உலகத்தில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இறக்கும் ஆன்மா எப்போது வினைகளை முடித்துத் தான் என்கிற தடயத்தை (ஆணவ மலம்) முற்றிலும் துறந்து மாயைகளை நீக்கி உண்மையை உணருகின்றதோ அப்போது அது தோன்றிய இறைவனிடமே சென்று அடங்கிவிடும்.
உட்கருத்து: ஆன்மாவைப் பயிராகவும் இறைவனை சகதியாகவும் உருவகிக்கும் திருமூலர் இந்த உவமையின் மூலம் சங்காரத்தின் தத்துவமும் அது ஏன் நிகழ்கிறது என்கிற விளக்கத்தையும் தந்து அருளுகிறார். இறைவனிடமிருந்து முதலில் தோன்றிய ஆன்மா உலகத்தில் பிறவி எடுத்து வினையினால் பிறவிச் சுழலில் சிக்கித் தன் வினைகளையெல்லாம் முடித்துவிட்டு பிறகு இறைவனிடமே வந்து அடங்கிவிடுவதே சங்காரத்தின் தத்துவமும் அதன் பயனுமாகும்.
இறைவனிடமிருந்து தோன்றிய ஆன்மா தனது ஆசைகளை அனுபவித்துத் தீர்த்துக் கொள்ள செய்யும் செயலினால் சேரும் வினைகளைத் தீர்க்க மாயையை வைத்து அந்த வினைகள் தீர உடலையும் ஆன்மாவிற்கு கொடுத்துப் பிறவி எடுக்க வைக்கின்றான். பிறவி எடுத்த ஆன்மா வினைச் சுழலில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது என்கிற கருணையினால் உலகத்திலுள்ள அனைத்திலும் கலந்து இருக்கும் இறைவன் தன்னை அடையும் வழிகள் அறிந்த கலந்து குருவாய் இருக்கும் அடியார்களோடு சேர வைத்து தன்னை எப்போதும் நினைக்கக் கூடிய எண்ணத்தை வைக்கின்றான். இறைவனின் சிந்தனையிலேயே இருப்பதால் மாயை அழிந்து நான் என்கின்ற அகங்காரம் அழிந்து ஆன்மா மீண்டும் தம்மை வந்து அடையும் மெய்யுணர்வு வரச் செய்கிறான் இறைவன்.
உயிரின் உடலில் புகுந்து நிலையாய் நின்ற இறைவன் அவ்வுயிரின் அருள் அறிவு என்னும் வெளிச்சமாகவும் அறியாமை என்னும் இருளாகவும் அவ்வுயிருக்கு கிடைக்கும் புகழ்ச்சியாகவும் இகழ்ச்சியாகவும் அவ்வுயிரின் உடலாகவும் உயிராகவும் ஒன்றி அவ்வுயிரின் அறிவாகவும் நிரந்தரமாக கலந்து அவை வாழும் காலம் வரை அருளுகின்றான்.
பாடல் #412: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)
தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
தானே உலகினில் தலைவனு மாமே.
விளக்கம்:
உலகத்தை படைத்து அதனைக்காக்க இறைவன் ஒருவனே பத்து திசைகளாகவும் (எட்டுத் திசைகள், மேல், கீழ்) அவற்றைக் காத்து நிற்கும் தேவர்களாகவும் அனைத்து உயிர்களின் ஸ்தூல உடலாகவும் சூட்சும உயிராகவும் அவை இரண்டும் உணர்த்தும் இருபத்து நான்கு வகை தத்துவங்களாகவும் காணுகின்ற கடல் போன்ற நீர் நிலைகளாகவும் மலை போன்ற நிலப் பரப்புகளாகவும் அனைத்திற்கும் முதலாகவும் உலகத்திலுள்ள அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான்.
உலகத்தை படைத்து அதனைக்காக்க அனைத்து உயிர்களின் உடலாகவும் சூட்சுமத்தில் உயிராகவும் அவை பிறந்து வாழும் அனைத்து உலகங்களாகவும் அந்த உலகங்களில் உயிர் தோன்ற வழி செய்யும் கடல்களாகவும் அவை வாழ வழி செய்யும் மழை நீரைப் பொழியும் கருத்த மேகங்களைக் கொண்ட வானமாகவும் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் வெற்றிட ஆகாயமாகவும் அனைத்தும் தானே ஆகவும் உண்மையான அடியவர்கள் தேடி அடையும் முக்தியாகவும் இறைவன் ஒருவனே நிற்கின்றான்.
உட்கருத்து: உயிர்கள் அடைவதற்குரிய பெருவழியான முக்தியை அருளிய இறைவன் உலகப்பொருட்களில் அதுவாகவே இருக்கின்றான்.
உயிர்கள் தேடிப் பார்க்கக்கூடிய எட்டுத் திசைகளிலும் பிறவி எடுத்திருக்கும் பல ஆன்மாக்கள் கூடி நிற்கின்ற உடல்களின் உயிராகவும் அப்படிக் கூடுகின்ற காரணமான வினைப் பயனாகவும் இருக்கின்றவன் மாபெரும் குருவான இறைவன். அவனே உயிர்களின் உள்ளத்துக்குள் மன சாட்சியாய் நின்று அவற்றின் வினைப் பயனுக்கு ஏற்ப அவை அனுபவிக்கும் இன்பம் துன்பமாகவும் விருப்பு வெறுப்பாகவும் இருக்கும் முறையையும் அவனது கருணையினால் யான் அறிந்தேன்.
உட்கருத்து: பாடல் #406 இந்த பாடல் போலவே இருந்தாலும் அதில் பிறப்பைக் கூறிய திருமூலர் இதில் காப்பதைக் கூறியிருக்கின்றார். இதை ஒரு வார்த்தையையும் ஒரு எழுத்தையும் மாற்றி உணர்த்தி நிற்கின்றார் திருமூலர்.
இறைவன் ஒருவனே ஆதி காலத்தில் இருந்தே மாபெரும் தனிச்சுடர் கொண்ட பேரொளியாய் நிற்கின்றான். அழிக்கின்ற காலத்தில் சூராவளிப் புயலாக இருக்கின்றான். உயிர்களை வாழ்விக்கின்ற காலத்தில் குளிர்ச்சியுடைய மழையாய் வருகின்றான். காலத்திற்கு ஏற்ப உருவம் கொண்டு உயிர்களைக் காப்பாற்றும் திருமாலின் தன்மையாகவும் அவனே இருக்கின்றான்.