பாடல் #497

பாடல் #497: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டாரே.

விளக்கம்:

ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து வலிமை மிகுந்த மலங்களை வென்று தாமே சிவமாகி சித்தர்கள் சாயுச்சியம் என்னும் பேரின்பப் பெருவாழ்வு பெற்று அதிலேயே என்றும் திளைத்து இருப்பார்கள். இவர்கள் இறவாத நிலை பெற்றதால் எப்போதும் பிறவி இல்லாத நிலையைப் பெற்று பசு பாசம் ஆகிய இரண்டும் நீங்கி பதியாக இருக்கும் ஒன்பது வகை தத்துவங்களை தமது தவத்தினால் உணர்ந்து அடைந்தார்கள்.

பதி பசு பாசம் விளக்கம்:

பதி என்பது இறைவனின் பேரான்மா. பசு என்பது இறைவனின் பேரான்மாவிலிருந்து பிரிந்து வந்து உலகங்களில் பிறந்த ஜீவ ஆன்மா. பாசம் என்பது பேரான்மாவுடம் ஜீவ ஆன்மா சேராதவாறு பிரித்து ஐந்து வகை மலங்களால் கட்டி இருப்பது. எப்போது பசுவாகிய ஜீவ ஆன்மா தனது பாசமாகிய மலங்களை அறுத்துக் கொண்டு பதியாகிய பரமாத்மாவை சென்று அடைகிறதோ அப்போது அது முக்தியைப் பெற்று இனி பிறவி இல்லாத நிலையை அடைகிறது.

ஒன்பது தத்துவ விளக்கம்:

உலகம் உருவாகுவதற்கும் உலக தொழில்கள் நடைபெறுவதற்கு காரணமாய் இருப்பவை ஒன்பது தத்துவங்களாகும். இந்த ஒன்பது தத்துவங்களையும் சித்தர்கள் தமது தவத்தினால் தமக்குள் கண்டு உணர்பவர்கள்.

  1. சிவம் – அசையா சக்தி
  2. சக்தி – அசையும் சக்தி
  3. ஒலி – சத்தம்
  4. ஒளி – வெளிச்சம்
  5. சதாசிவம் – அருளல்
  6. மகேசுவரன் – மறைத்தல்
  7. உருத்திரன் – அழித்தல்
  8. திருமால் – காத்தல்
  9. பிரம்மன் – படைத்தல்

பாடல் #498

பாடல் #498: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

விஞ்ஞானர் ஆணவங் கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதி ஒன்பான்வே றுயிர்களே.

விளக்கம்:

விஞ்ஞானர் என்பவர் ஆணவம் மலம் மட்டுமே கொண்டு கன்மம், மாயை ஆகிய இரண்டு கேவல நிலைகளுக்கும் மேலே இருப்பவர்கள். இவர்கள் கன்மம், மாயை ஆகியவற்றில் சிக்க மாட்டார்கள். மெய்பிரளய அகலர் என்பவர் ஆணவம், கன்மம் ஆகிய இரண்டு மலம் கொண்டு இருப்பவர்கள். இவர்கள் மாயையில் சிக்க மாட்டார்கள். அஞ்ஞானர் என்பவர் இந்த மூன்று மலங்களும் கொண்ட மற்ற அனைவரும் ஆவார்கள். சித்தர்களைத் தவிர்த்து விஞ்ஞானர், மெய்பிரளய அகலர், அஞ்ஞானர் மொத்தம் ஒன்பது வகையினராக இருக்கின்றனர்.

குறிப்பு

இந்த பாடலில் ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துக்கள் இந்த பாடலிலும் இருந்தாலும் மூவகைச் சீவவர்க்கம் தலைப்பில் உள்ள மூன்று விதமான உயிர்களில் 10 வகையினரில் சித்தர்களை மேன்மையானவர்களாக இந்த பாடல் கூறிப்பிடுகின்றது.

பாடல் #499

பாடல் #499: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய
அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுபோய்
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.

விளக்கம்:

விஞ்ஞானர் தன்னுடைய ஞான கன்மத்தினால் எடுத்த பிறவியிலேயே தன் உள்ளமும் மெய்யான இறைவனும் கூடி ஒன்றாக கலந்து தாமே சிவமாகி இருப்பார்கள்.

மெய்பிரளய அகலர் அஞ்ஞான கன்மத்தினால் ஞானிகளாகப் பிறந்து பாடல் #493 ல் உள்ள குறிப்பின் படி பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்கு காத்திருந்து பிரளய ஊழிக்காலத்தில் சிவத்தோடு கலப்பார்கள்.

அஞ்ஞானர்கள் தன்னுடைய சாதகத்தினாலோ அல்லது மெய்பிரளய அகலர்களாக உள்ள ஞானிகளாலோ உயர்வதற்கு ஏதுவாகிய ஞானம் பெற்று ஒரு நாள் மெய்பிரளய அகலர்களாகவோ விஞ்ஞானர்களாகவோ மாறி சிவத்தோடு கலப்பார்கள்.

அசையா சக்தியாக இருக்கும் இறைவனுடன் கலந்து பேரின்பத்தில் இருக்கும் சிவசாயுச்சியம் என்பது அனைவருக்கும் உறுதியாகக் கிடைக்கும் இது உண்மை.

பாடல் #500

பாடல் #500: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

ஆணவத் துற்ற வவித்தா நனவற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவ மாதி அடைந்தோ ரவரன்றே
சேணுயர் சத்தி சிவதத்துவ மாமே.

விளக்கம்:

ஆணவம் முதலான 5 மலங்களும் இருப்பதினால் கண்ணால் பார்த்தும் அறியாமையால் அதில் உள்ள உண்மை தெரிந்து கொள்ளாதவர்கள் ஒளி ஒலி முதலான அனைத்து இறை தத்துவங்களையும் உணர முடியாது. ஆணவம் முதலான 5 மலங்களும் கடந்தவர்கள் உயர்வான இடத்தில் இருக்கும் சிவசக்தி தத்துவத்தை உணரலாம்

உட்கருத்து:

ஆணவம் என்கிற மலத்தை விட்டு நீங்காத வரை இறைவனை முழுவதுமாக உணர முடியாது. ஐந்து மலங்களையும் இறையருளால் வென்றவர்கள் மட்டுமே ஆதிப்பரம்பொருளாக இருக்கும் சிவம் (அசையா சக்தி) சக்தி (அசையும் சக்தி) எனும் இரண்டு தத்துவங்களையும் உணர முடியும்.

பாடல் #451

பாடல் #451: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றான்அவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவது அறிந்தே.

விளக்கம்:

உயிர்கள் உலகத்தில் பிறவி எடுக்கும் முன்பு அவற்றின் முன் ஜென்மத்தில் அவற்றை விட்டும் பிரிந்து இருந்த இருபத்தைந்து தத்துவங்களை ஒன்றாகச் சேர்த்து ஆதியாக இருக்கும் எமது ஆருயிரான இறைவன் உயிரை உருவாக்குகின்றான். உடலுடன் கூடிய உயிர் இந்த உலகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து அந்தக் கரு உருவாகும் போதே அதற்கு ஏற்றவாறு அந்தக் கர்ப்பப் பையின் உள்ளிருந்தே உடலுடன் கூடிய உயிரை உருவாக்கி அருளுகின்றான் இறைவன்.

இருபத்தைந்து தத்துவங்கள்:

5 பூதங்கள்: நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம். 5 புலன்கள்: கண்களால் பார்த்தல், காதுகளால் கேட்டல், வாயால் சுவைத்தல், மூக்கால் நுகருதல், தோலால் தொடுதல். 5 ஞானேந்திரியங்கள்: ஓசை – கேட்பது, ஊறு – உணர்தல், ஒளி – பார்ப்பது, சுவை – உண்பது, நாற்றம் – முகர்வது. 5 கன்மேந்திரியங்கள்: வாய் – பேச்சு, கைகள் – செயல், கால்கள் – போக்குவரவு, எருவாய் – கழிவு நீக்கம் பகுதி, கருவாய் – இன்பமும் பிறப்பும். 4 அந்தக்கரணங்கள்: மனம் – எண்ணங்கள், புத்தி – அறிவு, சித்தம் – சிந்தனை, அகங்காரம் – நான் எனும் நினைப்பு. 1 புருடன்: ஆன்மா.

பாடல் #452

பாடல் #452: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துறை நாடப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.

விளக்கம்:

தியானத்தின் மூலம் உயிர்கள் அறியக்கூடிய ஆறு ஆதார சக்கரங்களில் முதலாவதான மூலாதரத்திற்கு மேல் இருக்கின்ற சுவாதிட்டான சக்கரத்தின் அருகில் மூச்சுக்காற்றின் வெப்பமும் பித்த நீரும் கலந்து இருக்கின்ற கர்ப்பப் பைக்குள் செக்கச் சிவந்த சிறு கால்களோடு தலையையும் சேர்த்து உடலை வைத்திருக்கின்ற கருவை உடலில் இருக்கின்ற வெப்பமும் நீரும் சிதைத்துவிடாத படி பொறுமையோடு உயிருக்கு உயிராய் உடன் இருந்து பாதுகாக்கும் இறைவன் அந்தக் கரு வெளியே போக வழி தேடும் போது அது இன்னமும் வளர்ச்சி பெற்று முழுமையடைந்த பிறகே வெளியே போக வேண்டும் என்று அதற்கான தேவையாக பத்து மாதங்களை காலக் கெடுவாக வைத்து அந்தக் காலக் கெடு முடியும் வரை கருவையும் காத்து அதைத் தாங்கிக் கொண்டு இருக்கின்ற தாய்க்கும் அதன் பாரம் பாதிக்காத படி பாதுகாத்து அருளுகின்றான் இறைவன்.

பாடல் #453

பாடல் #453: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத்து அமைத்தொழிந் தானே.

விளக்கம்:

ஆணும் பெண்ணும் சிற்றின்பத்தில் மகிழ்ந்து கூடுகின்ற போதே அவர்களின் முன் ஜென்ம வினைகளாலும் புதிதாக பிறக்கும் உயிரின் முன் ஜென்ம வினைகளாலும் இவர்களுக்கு இந்த உயிர் பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அந்த உயிரினால் பெற்றவர்களும் பெற்றவர்களால் அந்த உயிரும் அடையும் துன்பத்திற்கு காரணமாக இருக்கும் பாசம் எனும் துயரமாகிய பந்தத்தால் கட்டி வைத்து அந்த உயிர் உலகத்தில் எத்தனைக் காலம் வாழ வேண்டும் என்பதையும் அந்த உயிரின் பண்புகளையும் அந்த உயிரின் வாழ்க்கை முறையையும் முன்பே முடிவு செய்து ஆணும் பெண்ணும் அன்பாக சேர்ந்த போதே அதற்கு ஏற்றவாறு கருவை அமைத்து முடிக்கின்றான் இறைவன்.

பாடல் #454

பாடல் #454: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டாய் ஓடி விழுந்ததே.

விளக்கம்:

இருபத்தைந்து தத்துவங்களும் (பாடல் #451 இல் காண்க) ஒன்றாகச் சேர்ந்து ஆணும் பெண்ணும் சேரும் பொழுது உருவாகும் கருமுட்டை கருவாக மாறி அதுவே ஆண் பெண் என்கிற இரண்டுவித உருவங்களாகவும் மாறுகின்ற உண்மையை பிறவி இல்லாத நிலையை அடைந்த ஞானிகள் கண்டு உணர்ந்திருக்கின்றார்களே தவிர மற்றவர்கள் அறியவில்லை.

பாடல் #455

பாடல் #455: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதலைந்தும் ஈரைந்தோ டேறிப்
பொழிந்து புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.

விளக்கம்:

ஆணும் பெண்ணும் சேர்ந்த போது இருபத்தைந்து தத்துவங்களில் (பாடல் #451 இல் காண்க) ஐந்து புலன்களைத் தவிர்த்து ஆணிடமிருந்து ஐந்து ஞானேந்திரியங்களும் ஐந்து கன்மேந்திரியங்களும் சேர்ந்து பெண்ணின் கருப்பைக்குள் பனிக்குட நீரில் உருவான கருமுட்டைக்குள் ஐந்து பூதங்களும் நான்கு அந்தக் கரணங்களும் சேர்த்து கருவாகி அதன்பின் உருவம் பெறும் போது ஐந்து புலன்களும் சேர்ந்து விட மீதி இருக்கும் புருடன் மட்டும் அந்தக் கருவுடம்பின் நெற்றி உச்சியின் உள்ளே சென்று ஒளிந்து கொண்டது.

உட்கருத்து: கரு உற்பத்தியில் இருபத்தைந்து தத்துவங்களும் அடங்கியிருக்கும் முறையில் முதலில் ஆணிடமிருந்து ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் சேர்ந்து பிறகு பெண்ணின் கருப்பைக்குள் செல்லும் போது ஐந்து பூதங்களும் அந்தக் கரணங்களும் சேர்ந்து கருவிலிருந்து குழந்தையாகும் போது ஐந்து புலன்களும் சேர்ந்து அந்தக் குழந்தை பிறக்கும் போது ஆன்மா புருவ மத்தியில் சென்று மாயையால் தன்னை மறைத்துக் கொள்கின்றது. மற்ற இருபத்து நான்கு தத்துவங்களையும் உயிர்கள் அறியவும் உணரவும் முடியும். கருவில் ஐந்து புலன்கள் கிடையாது உடல் முழுமையடைந்து பிறந்த பின்பே ஐந்து புலன்களும் தன் வேலைகளை செய்யும்.

பாடல் #456

பாடல் #456: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவும்
கூவியே அவிழுங் குறிக்கொண்ட போதே.

விளக்கம்:

பூக்களின் மகரந்தத்தில் கலந்த காற்று உலகத்தில் பூவின் நறுமணத்தை பரப்பி காற்றிலேயே தங்க வைத்து அந்தக் காற்றை மற்ற உயிர்கள் சுவாசிக்கும் போது பூவின் நறுமணத்தை நுகரச் செய்வது போல தாயின் கருப்பைக்குள் இருக்கும் கருவிற்குள் புகுந்து இருக்கும் உயிரில் கலந்து இருக்கும் தனஞ்சயன் என்கிற காற்று அது குறிப்பிட்ட காலத்தில் குழந்தையாகப் பிறந்து முதன் முதலில் கூவி அழும் போது வெளிவந்து குழந்தையை முதன்முதலில் சுவாசிக்கச் செய்கிறது.

அறிவியல் விளக்கம்:

கருப்பைக்குள் இருக்கும் சிசு சுவாசிப்பது இல்லை. அதற்கு நுரையீரல்கள் உருவானாலும் அந்த நுரையீரல்களுக்குள் அமிலம் கலந்த நீரே நிரம்பியிருக்கும். கரு வளர்வதற்குத் தேவையான காற்றுக்களையும் சத்துக்களையும் தாயின் தொப்புள் கொடியின் மூலம்தான் எடுத்துக் கொள்கிறது. தொப்புள் கொடியில் இரண்டு நரம்புகள் இருக்கின்றது. அதில் முதலாவது நரம்பின் வழியே வரும் இரத்தத்தில் தாயின் மூச்சுக் காற்றும் தாய் சாப்பிட்ட உணவிலிருந்த சத்துக்களும் குழந்தைக்கு கிடைக்கின்றன. குழந்தை வெளிவிடும் நச்சுக் காற்றும் மற்ற கழிவுகளும் அமில நீரோடு சேர்ந்து இரண்டாவது நரம்பின் வழியே தாயிடம் வந்து தாயின் உடல் கழிவுகளோடும் மூச்சோடும் கலந்து வெளியேறுகின்றது. ஆகவே குழந்தையின் உடலில் காற்று இருந்தாலும் அது பிறந்த பிறகு வாய்விட்டு கூவி அழும்போதுதான் மூச்சுக்காற்றை முதன் முதலில் சுவாசிக்கின்றது. இதற்குக் காரணமாக இருப்பது தனஞ்சயன் எனும் காற்றாகும்.