பாடல் #659: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)
ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே.
விளக்கம்:
மூலாதாரத்தில் உள்ள குண்டலினி அக்கினியை எழுப்பிச் சுழுமுனை நாடி வழியே தலை உச்சிக்கு இழுத்து பிராணாயம முறைப்படி சூரியகலை (வலது நாசி), சந்திரகலை (இடது நாசி) வழியாக உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றால் தாங்கி ஏழு உலகங்களிலும் வியாபித்து இருக்கும் ஆற்றலை அடையலாம். இம்முறையை சிவனது அருள்வழியில் செல்பவர்களுக்கு யாம் கூறினோம்.
கருத்து: ஏழு உலகங்களிலும் வியாபித்து இருக்கும் ஆற்றலை அடையும் வழியை சிவ வழியில் செல்வோர்க்கு கூறுகிறார்.
