பாடல் #1842

பாடல் #1842: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஆவிக் கமலத்தினைப் புனத் தின்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடை
தாவிக்கு மந்திரந் தாமறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆவிக கமலததினைப புனத தினபுற
மெவித திரியும விரிசடை நநதியைக
கூவிக கருதிக கொடுபொயச சிவததிடை
தாவிககு மநதிரந தாமறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆவி கமலத்தினை புனத்து இன்பு உற
மேவி திரியும் விரி சடை நந்தியை
கூவி கருதி கொடு போய் சிவத்து இடை
தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே.

பதப்பொருள்:

ஆவி (உயிர்களின் உயிர்ப்பு ஆற்றலாகிய) கமலத்தினை (சகஸ்ரதளத்தின் உச்சியில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரினை) புனத்து (சென்று சேரும்படி மூச்சுக்காற்றை கொண்டு சென்று அடைந்து) இன்பு (பேரின்பம்) உற (உருவாகுவதற்கு)
மேவி (அந்த தாமரை மலரின் மேல் பிரகாசமாக திகழும் ஜோதியாக வீற்றிருந்து) திரியும் (அதிலிருந்து அனைத்திற்கும் பரவுகின்ற ஒளிக் கதிர்களைப் போன்ற) விரி (விரிந்த) சடை (சடையைக் கொண்ட) நந்தியை (குரு நாதனாகிய இறைவனை)
கூவி (தாம் செய்கின்ற பூஜையின் மூலம் போற்றிப் புகழ்ந்து அழைத்தும்) கருதி (இறைவன் மேல் எண்ணங்களை வைத்து) கொடு (அந்த எண்ணங்களை கொண்டு) போய் (போய்) சிவத்து (சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனின்) இடை (இடத்தில்)
தாவிக்கும் (நிலை பெற்று இருக்கும் படி சேர்க்கின்ற) மந்திரம் (மந்திரம் எதுவென்று) தாம் (தாங்கள்) அறியாரே (அறியாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

உயிர்களின் உயிர்ப்பு ஆற்றலாகிய சகஸ்ரதளத்தின் உச்சியில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரினை சென்று சேரும்படி மூச்சுக்காற்றை கொண்டு சென்று அடைந்து, அதன் பயனால் அமிழ்தம் சுரந்து பேரின்பம் உருவாகும் பலனை அனைத்து உயிர்களும் அடைய வேண்டும் என்ற கருணையினால் அந்த தாமரை மலரின் மேல் பிரகாசமாக திகழும் ஜோதியாக வீற்றிருந்து அதிலிருந்து அனைத்திற்கும் பரவுகின்ற ஒளிக் கதிர்களைப் போன்ற விரிந்த சடையைக் கொண்ட குரு நாதனாகிய இறைவன் அமர்ந்து இருக்கின்றான். அந்த இறைவனை தாம் செய்கின்ற பூஜையின் மூலம் போற்றிப் புகழ்ந்து அழைத்தும், இறைவன் மேல் எண்ணங்களை வைத்தும், அந்த எண்ணங்களை கொண்டு போய் சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனுடன் நிலை பெற்று இருக்கும் படி சேர்க்கின்ற மனதின் திறமைக்கு திறவு கோலாக இருப்பது எதுவென்று தாங்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1841

பாடல் #1841: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

சாத்தியும் வைத்துஞ் சயம்புவென் றேத்தியு
மாத்தியை நாளு மிறையை யறிகிலா
ராத்தி மலாகிட்டதற் கழுக்கற்றக் கால்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாததியும வைததுஞ சயமபுவென றெததியு
மாததியை நாளு மிறையை யறிகிலா
ராததி மலாகிடடதற கழுககறறக கால
மாததிககெ செலலும வழியது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும்
ஆத்தியை நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மல் ஆக்கு இட்டு அதற்கு அழுக்கு அற்ற கால்
மா திக்கே செல்லும் வழி அது ஆமே.

பதப்பொருள்:

சாத்தியும் (நறுமணமிக்க மலர்களை அணிவித்தும்) வைத்தும் (அறுசுவை உணவு படைத்தும்) சயம்பு (தானாகவே தோன்றிய மூர்த்தி) என்று (என்று) ஏத்தியும் (போற்றி வணங்கியும்)
ஆத்தியை (அடைவதற்கு மிகப் பெரும் செல்வமாகியவனை) நாளும் (தினம் தோறும் பூஜை செய்தும்) இறையை (இறைவனை) அறிகிலார் (யாரும் அறிந்து கொள்வது இல்லை)
ஆத்தி (உலக பற்றுக்களில் உள்ள ஆசையுடன்) மல் (மன உறுதியோடு போர் புரிந்து) ஆக்கு (அந்த ஆசைகளை பக்தியாக மாற்றி) இட்டு (இறைவன் மேல் எண்ணங்களை வைத்து) அதற்கு (அந்த எண்ணங்களில்) அழுக்கு (எந்தவிதமான மாசும்) அற்ற (இல்லாமல் போகும்) கால் (காலத்தில்)
மா (சென்று அடைவதற்கு மிகப்பெரிய) திக்கே (திசையாகிய முக்திக்கு) செல்லும் (செல்லுகின்ற) வழி (வழியாக) அது (அதுவே) ஆமே (ஆகி விடும்).

விளக்கம்:

நறுமணமிக்க மலர்களை அணிவித்தும், அறுசுவை உணவு படைத்தும், தானாகவே தோன்றிய மூர்த்தி என்றுபோற்றி வணங்கியும், தினம் தோறும் பூஜை செய்தும் அடைவதற்கு மிகப் பெரும் செல்வமாகிய இறைவனை யாரும் அறிந்து கொள்வது இல்லை. அதற்கு காரணம் உலகப் பற்றுக்களில் சிக்கி இறைவன் மேல் முழு பக்தி இல்லாமல் போவதே ஆகும். ஆகவே, உலக பற்றுக்களில் உள்ள ஆசைகளோடு மன உறுதியுடன் போர் புரிந்து அந்த ஆசைகளை பக்தியாக மாற்றி இறைவன் மேல் போகும் படி எண்ணங்களை வைத்து வந்தால் ஓரு காலத்தில் அந்த எண்ணங்களில் எந்தவிதமான மாசும் இல்லாமல் போகும். அப்போது சென்று அடைவதற்கு மிகப்பெரிய திசையாகிய முக்திக்கு செல்லுகின்ற வழியாக அதுவே ஆகி விடும்.

பாடல் #1840

பாடல் #1840: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

வென்று விரைந்து விரைபணி யென்றனர்
நின்று பொருந்த யிறைப்பணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்
கொன்றிடு நித்தலுங் கூறிய தன்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெனறு விரைநது விரைபணி யெனறனர
நினறு பொருநத யிறைபபணி நெரபடத
துனறு சலமலர தூவித தொழுதிடிற
கொனறிடு நிததலுங கூறிய தனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வென்று விரைந்து விரை பணி என்றனர்
நின்று பொருந்த இறை பணி நேர் பட
துன்று சல மலர் தூவி தொழுதிடில்
கொன்று இடும் நித்தலும் கூறியது அன்றே.

பதப்பொருள்:

வென்று (ஐந்து புலன்களினால் ஆசை மயக்கத்தை வென்று) விரைந்து (வாழ்க்கைக்கு உடனடியாக செய்ய வேண்டியது) விரை (நறுமணம் மிக்க தூபத்தை காட்டி) பணி (இறைவனுக்கு தொண்டு செய்வதே) என்றனர் (என்று சான்றோர்கள் சொன்னார்கள்)
நின்று (இறைவன் மேல் கொண்ட பக்தியில் தன்னையே மறந்து நின்று) பொருந்த (மனம் இறைவனோடு பொருந்தி இருக்க) இறை (இறைவனுக்கான) பணி (பூஜைகளை) நேர் (சிறிதும் தவறாமல்) பட (நிகழும் படி)
துன்று (இறைவனோடு பொருந்தி) சல (தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து) மலர் (காலைப் பனி பூத்திருக்கும் நறுமணம் மிக்க மலர்களை) தூவி (தூவி அருச்சனை செய்து) தொழுதிடில் (தொழுது வந்தால்)
கொன்று (இறையருளானது வினைகளை கொன்று) இடும் (நீக்கிவிடும்) நித்தலும் (தினம்தோறும்) கூறியது (என்று சான்றோர்கள் சொன்னது) அன்றே (முன் காலத்தில் ஆகும்).

விளக்கம்:

ஐந்து புலன்களின் வழியே செல்லும் ஆசைகளில் சிக்கிச் சுழலாமல் அதை மன உறுதியால் வென்று மனித வாழ்க்கையில் உடனடியாக செய்ய வேண்டியது இறைவனுக்கு தூப தீபங்கள் காட்டி வழிபடுவதே என்று சான்றோர்கள் சொல்லுவார்கள். அவர்கள் சொல்லியபடி இறைவன் மேல் கொண்ட பக்தியில் தன்னையே மறந்து இறைவனோடு தம் மனமும் பொருந்தி இருக்கும் படி நின்று தூய்மையான நீரால் அபிஷகம் செய்தும் காலைப் பனி பூத்திருக்கும் நறுமணம் மிக்க மலர்களால் அருச்சனை செய்தும் தினந்தோறும் இறைவனை தொழுது வந்தால் இறைவனது திருவருளானது அடியவர்களின் வினைகளை அழித்து நீக்கிவிடும். இதை முன் காலத்திலேயே சான்றோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

பாடல் #1839

பாடல் #1839: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

உழைக்கு முன்னே நெடுநீர் மலரேந்திப்
பிழைப்பின்றி யீசன் பெருந்தவம் பேணி
யிழைக்கொண்ட பாதத் தினமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உழைககு முனனெ நெடுநீர மலரெநதிப
பிழைபபினறி யீசன பெருநதவம பெணி
யிழைககொணட பாதத தினமலர தூவி
மழைககொணடல பொலவெ மனனிநில லீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உழைக்கும் முன்னே நெடு நீர் மலர் ஏந்தி
பிழைப்பு இன்றி ஈசன் பெரும் தவம் பேணி
இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி
மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே.

பதப்பொருள்:

உழைக்கும் (காலையில் எழுந்த பிறகு தங்களின் தொழில் செய்வதற்கு) முன்னே (முன்பு) நெடு (அவசரமின்றி நிதானமாக) நீர் (தூய்மையான நீரையும்) மலர் (நறுமணமிக்க மலர்களையும்) ஏந்தி (இரு கைகளில் ஏந்திக் கொண்டு)
பிழைப்பு (எந்தவிதமான குற்றமும்) இன்றி (இல்லாமல்) ஈசன் (இறைவனை சிரத்தையோடு பூசை செய்கின்ற) பெரும் (மிகப்பெரும்) தவம் (தவத்தை) பேணி (ஒரு நாளும் தவறாமல் கடைபிடித்து)
இழை (அழகிய சிலம்புகளை) கொண்ட (அணிந்து கொண்டு இருக்கின்ற) பாதத்து (இறைவனின் திருவடிகளுக்கு) இன (ஒரே வகையான) மலர் (நறுமலர்களை) தூவி (தூவி அருச்சனை செய்து)
மழை (மழை பொழிகின்ற) கொண்டல் (கருத்த மேகத்தை) போலவே (போலவே தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து) மன்னி (நிலையாக) நில்லீரே (நில்லுங்கள்).

விளக்கம்:

காலையில் எழுந்த பிறகு தங்களின் தொழில் செய்வதற்கு முன்பு அவசரமின்றி நிதானமாக தூய்மையான நீரையும் நறுமணமிக்க மலர்களையும் இரு கைகளில் ஏந்திக் கொண்டு, எந்தவிதமான குற்றமும் இல்லாமல் இறைவனை சிரத்தையோடு பூசை செய்கின்ற மிகப்பெரும் தவத்தை ஒரு நாளும் தவறாமல் கடைபிடித்து, அழகிய சிலம்புகளை அணிந்து கொண்டு இருக்கின்ற இறைவனின் திருவடிகளுக்கு ஒரே வகையான நறுமலர்களை தூவி அருச்சனை செய்து, மழை பொழிகின்ற கருத்த மேகத்தை போலவே தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து நிலையாக நில்லுங்கள்.

உட் கருத்து:

இறைவனுடைய திருவடிகளில் எப்போதும் இழைந்து (உராய்ந்து) கொண்டே இருக்கின்ற அழகிய சிலம்புகளைப் போலவே அடியவர்கள் தங்களின் மனதிற்குள் இறைவனின் திருவடிகளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பது ஒரு மிகப் பெரிய தவம் ஆகும். அந்த தவத்தை சிரத்தையோடு இடைவிடாது கடை பிடித்தால் கருமையான மேகங்களுக்குள் மழை நீர் மறைந்து இருப்பது போலவே அடியவரது எண்ணத்திற்குள் இறைவனின் திருவருளானது எப்போதும் நிறைந்து நிற்கும்.