பாடல் #308: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)
புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.
விளக்கம்:
இறைவனை கேள்வி ஞானத்தின் மூலம் உணர்ந்து போற்றிப் புகழ்ந்து இருக்கின்ற அடியவர்களுக்கு எப்போதும் துணையாக இருப்பார் ஆதிகாலத்திலிருந்து இருக்கும் ஈசன். இறைவனை இகழ்ந்து பேசி இருக்கின்ற மற்றவர்களுக்கு மறக்கருணையினால் துன்பத்தைக் கொடுத்து வினை தீர்ப்பான். அப்படிப்பட்ட ஆதியான இறைவனின் பெருமைகளை உள்ளம் மகிழ்ந்து ஓதி உணராமல் இருப்பவர்களுக்கு இறைவன் கல்லால் ஆன பசு போன்றவன். கல்லாலான பசு எப்படி பாலைத் தராதோ அதுபோல அவர்களுக்கு இறைவனது அருளும் எப்போதும் கிடைக்காது.
