பாடல் #50

பாடல் #50: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.

விளக்கம்:

இறைவனின் திருவடிகளை என் தலைமேல் சூடிக்கொள்வேன். அவனின் திருவடிகளை என் நெஞ்சத்தில் வைத்துக்கொள்வேன். எம்பெருமான் என்று அவன் புகழ்களைப் பாடுவேன். பலவித மலர்களை அவன் திருவுருவத்தின் மேல் தூவி அவனைப் பணிந்து நின்று அவன் முன்னால் அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டே ஆடுவேன். ஆடியபின் அமரர்களின் தலைவனான இவனே எனக்கு முக்தியளிக்கக்கூடியவன் என்று அவனை நாடி அடைந்தபின் அனைத்தும் அவனே எனும் உண்மை ஞானத்தை அறிந்து அவனோடே கலந்து நிற்பேன்.

உள்விளக்கம்:

இறைவனை அடைந்து முக்திபெற மாபெரும் தவங்கள் யோகங்கள் யாகங்கள் இருந்தாலும் அவனது திருவடியை எண்ணத்தில் எப்போதும் வைத்து அவனைப் புகழ்ந்து பாடி ஆடி பலவித மலர்களைத் தூவி பூஜித்தாலே அவனை நாடி முக்தியை அடையலாம். இதுவே யாம் அறிந்த சிறந்த உபாயம் என்று திருமூலர் அருளுகின்றார்.

பாடல்: பாயிரம் – கடவுள் வணக்கம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
யிந்து விளம்பிறை போலு மெயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தி யில்வைத் தடிபோற்றுகின் றேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஐநது கரததனை யானை முகததனை
யிநது விளமபிறை பொலு மெயிறறனை
நநதி மகனறனை ஞானக கொழுநதினைப
புநதி யிலவைத தடிபொறறுகின றெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஐந்து கரத்து அனை யா அனை முகத்து அனை
இந்து விளம் பிறை போலும் எயிற்று அனை
நந்தி மகன் தனை ஞான கொழுந்தினை
புந்தி இல் வைத்து அடி போற்றுகின்றேனே.

பதப்பொருள்:

ஐந்து (ஐந்து) கரத்து (கரங்களே) அனை (ஐந்து பூதங்களாக உடையவனும்) யா (உலகம்) அனை (போன்ற) முகத்து (திருமுகமே) அனை (உலகமாக உடையவனும்)

இந்து (நிலவின்) இளம் (வளரும்) பிறை (பிறை) போலும் (போன்ற) எயிற்று (கொம்புகளை) அனை (கூர்மையாக உடையவனும்)

நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின்) மகன் (மகனாக) தனை (இறை தன்மையாகவே இருப்பவனை) ஞான (உண்மை ஞானத்தின்) கொழுந்தினை (உச்சமாகவும் இருப்பவனை)

புந்தி (எமது அறிவுக்கு) இல் (உள்ளே) வைத்து (வைத்து) அடி (அவனது திருவடிகளை) போற்றுகின்றேனே (யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்).

விளக்கம்:

ஐந்து கரங்களையே ஐந்து பூதங்களாக (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) கொண்டவனும், உலகத்தையே தனது திருமுகமாக கொண்டவனும், இளப் பிறை நிலாவைப் போன்ற கூர்மையான கொம்புகளை உடையவனும், குருவாக இருக்கின்ற இறைவனின் மகனாக இறை தன்மையாகவே இருப்பவனும், உண்மை ஞானத்தின் உச்சமாகவும் இருப்பவனை எமது அறிவுக்கு உள்ளே வைத்து அவனது திருவடிகளை யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்.

இப்பாடலில் 3 ஆவது அடிக்கான பொருளை நேரடியாக புரிந்து கொள்வது சிறிது கடினம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

திருமூலர் அருளிய திருமந்திரம்

திருமந்திரத்தின் மூலப் பாடல்கள் 3,046 மட்டுமன்றி பிற்சேர்க்கைகளான 62 பாடல்களும் சேர்த்து மொத்தம் 3,108 பாடல்களுக்கு அருமையான இசையில், கம்பீரமான வெண்கலக் குரலில் பாடி அருளிய தெய்வத்திரு. வீர மணிகண்டன் ஐயா அவர்களுக்கு நன்றிகூறி அவர் வழங்கிய “திருமூலர் அருளிய திருமந்திரம்” என்னும் இசைப் பாடல்கள் தொகுப்பை அனைவரும் கேட்டுப் பயன்பெற இங்கே முழுமையாக வழங்குகின்றோம்.

தொகுப்பு: திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடியவர்: தெய்வத்திரு. வீர மணிகண்டன்
இசைத்தவர்: தெய்வத்திரு. வீர மணிகண்டன்
வெளியீடு: திருமந்திர தமிழிசை

அனைத்து பாடல்களையும் பதிவிறக்க கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்:

https://kvnthirumoolar.com/media/Thirumandhiram-Musical-Songs.zip

முதல் பாடலிலிருந்து 3,108ஆம் பாடல் வரை அனைத்துப் பாடல்களும்:

அனைத்துப் பாடல்களும் தனித்தனியாக:

  1. பாயிரம் (பாடல்கள் 1 முதல் 112 வரை):

  1. முதலாம் தந்திரம் (பாடல்கள் 113 முதல் 172 வரை):

  1. முதலாம் தந்திரம் (பாடல்கள் 173 முதல் 232 வரை):

  1. முதலாம் தந்திரம் (பாடல்கள் 233 முதல் 336 வரை):

  1. இரண்டாம் தந்திரம் (பாடல்கள் 337 முதல் 396 வரை):

  1. இரண்டாம் தந்திரம் (பாடல்கள் 397 முதல் 456 வரை):

  1. இரண்டாம் தந்திரம் (பாடல்கள் 457 முதல் 548 வரை):

  1. மூன்றாம் தந்திரம் (பாடல்கள் 549 முதல் 608 வரை):

  1. மூன்றாம் தந்திரம் (பாடல்கள் 609 முதல் 668 வரை):

  1. மூன்றாம் தந்திரம் (பாடல்கள் 669 முதல் 728 வரை):

  1. மூன்றாம் தந்திரம் (பாடல்கள் 729 முதல் 788 வரை):

  1. மூன்றாம் தந்திரம் (பாடல்கள் 789 முதல் 848 வரை):

  1. மூன்றாம் தந்திரம் (பாடல்கள் 849 முதல் 883 வரை):

  1. நான்காம் தந்திரம் (பாடல்கள் 884 முதல் 943 வரை):

  1. நான்காம் தந்திரம் (பாடல்கள் 944 முதல் 1003 வரை):

  1. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1004 முதல் 1063 வரை):

  1. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1064 முதல் 1123 வரை):

  1. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1124 முதல் 1183 வரை):

  1. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1184 முதல் 1243 வரை):

  1. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1244 முதல் 1303 வரை):

  1. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1304 முதல் 1363 வரை):

  1. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1364 முதல் 1418 வரை):

  1. ஐந்தாம் தந்திரம் (பாடல்கள் 1419 முதல் 1478 வரை):

  1. ஐந்தாம் தந்திரம் (பாடல்கள் 1479 முதல் 1572 வரை):

  1. ஆறாம் தந்திரம் (பாடல்கள் 1573 முதல் 1632 வரை):

  1. ஆறாம் தந்திரம் (பாடல்கள் 1633 முதல் 1703 வரை):

  1. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 1704 முதல் 1763 வரை):

  1. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 1764 முதல் 1823 வரை):

  1. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 1824 முதல் 1883 வரை):

  1. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 1884 முதல் 1943 வரை):

  1. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 1944 முதல் 2003 வரை):

  1. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 2004 முதல் 2063 வரை):

  1. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 2064 முதல் 2121 வரை):

  1. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2122 முதல் 2181 வரை):

  1. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2182 முதல் 2241 வரை):

  1. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2242 முதல் 2301 வரை):

  1. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2302 முதல் 2361 வரை):

  1. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2362 முதல் 2421 வரை):

  1. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2422 முதல் 2481 வரை):

  1. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2482 முதல் 2541 வரை):

  1. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2542 முதல் 2601 வரை):

  1. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2602 முதல் 2648 வரை):

  1. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 2649 முதல் 2708 வரை):

  1. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 2709 முதல் 2768 வரை):

  1. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 2769 முதல் 2828 வரை):

  1. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 2829 முதல் 2888 வரை):

  1. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 2889 முதல் 2948 வரை):

  1. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 2949 முதல் 3008 வரை):

  1. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 3009 முதல் 3047 வரை):

  1. பிற்சேர்க்கை (பாடல்கள் 3048 முதல் 3108 வரை):

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #7

12-9-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: எவ்வழியில் ஆண்டவனை அடைய முயற்சித்தல் வேண்டும்? யோக நிலையா பக்தி நிலையா இல்லையேல் ஞான நிலையா என்பதே கேள்விகள் ஆகின்றது.

எவர் எவர்க்கு எம் மார்க்கம் எளிதாக தோன்றுகிறதோ அதனை ஏற்றுக் கொள்ளலாம். பொதுவாக ஓர் கட்டிடம் என்றால் அதற்கு இரண்டு அல்லது மூன்று வழிகள் காணக்கூடும். எவ்வழியில் செல்கின்ற போதிலும் உள்ளே செல்ல முடியும். இருப்பினும் நமக்கு எளிதாக தொல்லை தராத வழியை நாடிப் பயன் படுத்துவதே நல்ல முறையாகின்றது. அனைவருக்கும் யோக நிலைகள் நலம் தருவதாகக் காணாது. ஏனெனில் உடல்கூறு மனநிலை என்பதெல்லாம் தடையாகக் காணலாம்.

பக்தி மார்க்கத்தில் மந்திரங்கள் ஜெபித்து எளிதாக சிலரால் இறைவனை அடைய இயலுகின்றது. இவ்விதமே இசையும் ஓர் பக்தியின் வழியாகவே யாம் காண்கின்றோம். இறைவனை நன்று துதித்துப் பாடினால் அவன் (இறைவன்) வராது இருக்க மாட்டான் என்பதே எமது கருத்தாகின்றது. இக்கலியுக தன்மையில் பெரும் யோகங்கள் யோக பயிற்சிகள் தவநிலைகள் என்பதெல்லாம் எளிதில் கடை பிடிக்க இயலாது என்கின்றதால் இக்காலத்திற்கு எளியவழி பக்தி மார்க்கமும் நாம கீர்த்தனமும் என்பதேயாகும் என்று இங்கு எடுத்துரைக்கின்றோம். இருப்பினும் திடமும் நம்பிக்கையும் உயர்ந்திருந்தால் யோக நிலையை கை கொள்வதில் தவறாகாது. எளிதான முறையைச் செப்பிவிட்டோம். இவைகளில் தேர்ச்சி செய்வீர்களாக.

ஞானமார்க்கம் என செப்பிக்கொண்டால் பல குழப்பங்கள் நேரிடல் காணக்கூடும். ஏனெனில் பலர் பலவிதத்தில் உபதேசிப்பர். எது சரி எது தவறு என்பதனை தேடிக் கண்டு பயன் அடைவதற்குமுன் இஜ் ஜென்மமும் மூடிவிடும் என்பதே நிலை. இந்நிலையில் யோகம் இல்லையேல் பக்தி மார்க்கங்களில் செல்வதே நலம்தரும் என்றும் செப்பினோமே.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #6

15-8-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஒரே சமயத்தில் ஒரு ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்தல் வேண்டும். இல்லையேல் சாதனை புரிதல் வேண்டும் என்பது விதியா? விதியாயிருந்தால் இது ஏன்?

இது ஓர் சிறப்பான வினாவாகிறது. உடல் சூட்சுமம் ஸ்தூலம் பின்பு ஆன்மா என பிரித்துப் பார்த்தால் எளிதாகும். ஸ்தூல உடலுக்கு நாம் உணவு அளிக்கின்றோம். குறிப்பிட்ட காலங்களில் அமர்ந்து உண்ணுகின்றோம். உண்ணும் காலம் நெருங்க வயிற்றினில் பசிக்கின்றது. உண்டபின் பசி மறைகின்றது. இதற்கு காரணம் நாட (தேட) அச்சமயத்தில் உடலுக்கு உணவு வேண்டும் என பழக்கம் ஏற்படுகின்றது. இவ்விதமே ஒரே சமயத்தில் ஓர் ஸ்தலம்தனில் அமர்ந்து தியானம் செய்திட சூட்சும உடலுக்கும் ஆன்மாவிற்கும் உணவு அளிப்பது போல் ஆகின்றது. இவ்விதமே பழகிட குறித்த காலங்களில் அமர்ந்தே ஆகுதல் வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும் என்பது மட்டும் அல்லாது பழகிட்ட ஸ்தலத்தில் அமர்ந்திட்ட போதே மனம் ஒரு நிலைப்பாடு காணும். சதா தியானம் ஜபம் செய்கின்றவர்க்கு இது அவசியமில்லை. அவ்விதம் தியானம் செய்கின்றவர் குறைவே. இது கலியுகத் தன்மை பொதுவாக ஆன்மீக முன்னேற்றம் நாடுவோர் ஒரு ஸ்தலம் தேர்ந்து எடுத்து குறித்த சமயங்களில் தியானம் கூட நன்மைகள் ஏற்படும் என அறிவுரை அளித்தோம்.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் # 5

பெற்றவர்கள் செய்திடும் குற்றங்களுக்குப் பின்பு அவர்கள் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது உண்மையான நிலையா என ஒருவர் வினாவக் கண்டோம்.

இதற்கு யாம் எளிதாக விடை அளித்திட இயலும். இக்காலத்தில் பெற்றவன் ஒருவன் கள்வனாக மாறி களவு செய்ததற்காக மகனை தண்டிக்க இயலாது. இவ்விதமே கர்ம நிலையும் அவரவர் கர்மங்கள் அவரவர் அனுபவித்துக் கழித்தல் வேண்டும் என்பதே விதி. இருப்பினும் கூட்டுக் குடும்பங்கள் என்கின்ற நிலையில் சில பிரச்சினைகள் உருவாகின்றது. உதாரணமாக பெற்றவர்கள் நோயுற்றவர்கள் எனக் கண்டு கொண்டால் இதன் விளைவாக மக்களும் சிறிது பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் என்னவென்றால் பந்தமே என்றும் இங்கு எடுத்துரைப்போமே. தனியாக அவதிப்படுவதில்லை. ஆனால் பந்தம் கொள்ள பாசம் கொள்ள சிறு வேதனைகள் உருவாகின்றது. இதுவும் தன்னுடைய கர்மங்கள் தீர்த்திடவே இத்தகைய பெற்றோரின் குடும்பத்தில் வந்து பிறக்கின்றான் என்பதே விதியாகின்றது. இதேபோல நல்ல பெற்றோர்கள் தீய புத்திரனை பெற்று அவதிப்படுகின்றனர் இதுவும் அதே காரணமாம். பெற்றவர்களின் கர்மங்களை தீர்க்க அத்தகைய மகன் அக்குடும்பத்தில் பிறக்கின்றான். இருப்பினும் பெற்றவர்களின் தீய கர்மத்தால் புத்திரர்கள் பிற்காலத்தில் அவதிப்படுவார்கள் என கூறுவது தவறாகும். அவரவர் கர்மங்கள் அவரவர் தீர்த்தல் வேண்டும் என்றும் விளக்கிட்டோமே.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் # 4

22-6-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: இந்து மதத் தெய்வங்களுக்கு மட்டும் ஏன் எட்டு கரங்கள் பத்து கரங்கள்? அக் கரங்களில் ஆயுதம் எதற்கு? என்ற வினா பொதுவாக கேட்கின்றோம்.

சிந்தித்தால் இதற்கு விடை எளிதாக கிட்டும் என்றும் இங்கு விளக்கிடுவோம். எட்டு திக்குகளும் காக்க வல்லவர்களாக இருப்பதால் எட்டு கரங்கள் அவர்களை சுற்றி இருக்கின்றன என்றும் ஒவ்வொரு கரங்களிலும் ஓர் ஆயுதம் காப்பை (பாதுகாப்பு) குறிக்கின்றது என்றும் இங்கு செப்பிட்டோமே. மற்ற இரண்டு கரங்கள் இருந்தால் அது நன்றாகப் பார்த்தால் மேலும் கீழும் இருக்கும். அது காக்க வல்லதாம் என்றும் இங்கு எடுத்துரைப்போமே. அது பொதுவாக அபயம் என்றும் கொடுத்தல் வாங்கல் என்றும் செப்புவார்கள். உண்மையான நிலை மேலும் கீழும் காக்குதல் என்பதேயாகும்.

இரண்டாவது கேள்வி: முக்கியத்துவம் காணும் ஒரு கேள்வியானது பெரும் அளவில் பெரிதான விநாயகர் சிறு எலி மேல் ஏன் அமர்ந்து கொள்கின்றார் என்பதேயாகின்றது.

இதற்கு விடை ஒன்று அகங்காரம்தனை சிறிதாக்கி அதற்கு மேல் அமர்ந்து நாமும் அதேபோல் செய்தல் வேண்டும் என முதல் தெய்வம் சுட்டிக் காட்டுகின்றார். ஆதியில் இதை செய்தால் ஒழிய ஞானத்தில் முன்னேற்றம் காணாது என எடுத்துரைக்கின்றார். இரண்டாவது யோக நெறியில் சிந்திக்க அஷ்டமா சித்திகள் கை கொண்டால் பெரிய உருவமும் சிறு உருவத்தின் மேல் லேசாக அமர இயலும் என்றும் ஓங்காரம் அதாவது பிராணமும் ஓங்காரமும் இணைந்து உள் அடக்க எதையும் சாதிக்க இயலும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். இதனை அனைவரும் நன்கு சிந்தித்து மேலும் இரண்டு விளக்கங்கள் கண்டு பிடிப்பீர்களாக.

மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #3

25-5-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இக்காலம் வரை ஜபம் தியானம் நற்பணிகள் திருப்பணிகள் அனைத்தும் செய்தும் யாம் இருக்கும் இடத்தில் இருக்கின்றோம் என்று சிலர் எண்ணுகின்றனர் இவர்களுக்கு யாம் ஒன்று செப்புவோம்.

அன்பர்களே யாமும் நீங்களும் ஓர் பாதையில் செல்கின்றோம். சிறிது முன் யாமும் பின்பு நீங்களும் என்பதே வித்தியாசம் என்றும் செப்பிட்டோமே. இறை பாதை நாடுவோர்கள் அனைவருக்கும் நல்முக்தி உண்டு என்றும் செப்பிட்டோமே. எப்பொழுது என்பதுதான் விதி. உதாரணமாக பயிரிட்டு செடி வளர அதனை இழுப்பதால் மேலும் வளர்வதில்லை அழிந்து போகும். இதை மனதில் நிறுத்தி காலங்கள் இதற்கு ஒதுக்கிட்டு தியான முறைகள் கர்ம யோக முறைகள் என்பதெல்லாம் செய்து வர அனைத்தும் கைகூடும் என்றும் செப்பிட்டோமே.

அவசரம் ஆன்மிகத்திற்கு ஆகாத ஓர் அவஸ்தை என்றும் இங்கு உங்களுக்கு எடுத்துரைத்தோம். ரோமாபுரி ஓர் நாளில் கட்டவில்லை என்று முன் செப்பியுள்ளோம். ஓர் கட்டிடத்திற்கு இந்நிலை என்றால் ஆன்மாவின் வளர்ச்சி, ஆன்மாவை முழுமையாக இறைவனிடம் சேர்க்க, எத்தனை காலங்கள், ஜன்மங்கள் எடுத்தல் வேண்டும் என்று சிந்தித்தால் போதும். நல் கர்மாக்கள் பலனால் இன்று நீங்கள் அனைவரும் இறை பாதையை நோக்கி அதில் ஏறி நடந்து கொண்டு இருக்கின்றீர்கள், இதுவே ஒரு பெரிய சாதனையாகும் என்று எடுத்துரைத்தோமே.

அச்சப்படுவதற்கோ, வேதனைப்படுவதற்கோ இங்கு எந்நிலையும் இல்லை. ரோகங்களும் கர்ம நிலைகள் மாறிட முழுமையாக நீங்கும் என்று எடுத்துரைத்தோமே. சிறு வேதனைகள் உண்டாகுதல் வேண்டும் என்கின்ற விதி உண்டு. அவ்விதம் இல்லையேல், கர்ம கழிப்புகள் இல்லை என்பதையும் உணர்தல் வேண்டும். ஏனெனில், உடலால் செய்த கர்ம வினைகள் உடலால் அநுபவித்து தீர்த்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு. இதுவே நடைபெறுகின்றது. இருப்பினும், அனைத்தும் எம்பிரான் திருவடியில் சமர்ப்பித்து செயல்பட முடிவு நன்மையே என்று செப்புகின்றோம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #2

கேள்வி: நல்ல காரியங்கள் துவங்கும் போது சுபமுகூர்த்தங்களில் துவங்க வேண்டுமா?

பொதுவாக சுபகாரியங்கள் சுபநேரங்களில் நடத்துவது வழக்கமாகி விட்டது. இதனைப் பின் தொடர்வது தவறாகாது. அக்காலங்களில் பொதுவாக குளிகனின் காலங்களில் (குளிகன் சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம்) சுபகாரியங்கள் தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும் இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. நாகனின் (இராகு) காலங்களில் தீயகாரியங்களும் சுபமற்ற காரியங்களும் செய்து கொண்டு இருந்தனர். இக்காலத்தில் அது மாறி நற்காலங்களுக்கு என சில முகூர்த்தங்களும் தீயவைகளுக்கு என சிலதும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எவ்விதம் இருந்த போதிலும் உறுதியாக தம் கர்மங்களை தொடர்ந்து ஓயாது செய்து கொண்டிருப்பவனுக்கு அனைத்தும் நலம் தரும் காலமாகும். இவர்களுக்கு எப்பொழுதும் நல்ல காலமே. ஏனெனில் அவர்கள் உழைப்பினை தெய்வமாகக் கண்டு கொண்டனர். ஓர் சுபகாரியம் நடத்தும் முன் சுபமுகூர்த்தமோ சுபகாலமோ முக்கியத்துவம் காண்பதில்லை. செய்கின்றவரின் மன நிலையைப் பார்த்தல் வேண்டும். எக்காரியத்திற்கு சுபகாரியம் நடைபெறுகிறது. அது சுயநலம் உள்ள காரியங்களா பொதுநலம் உள்ள காரியங்களா என்கின்ற மன நிலையைப் பார்த்துக் கொண்டால் அனைத்தும் நலமே. இருப்பினும் சம்பிரதாயம் என்கின்ற ஒன்றுக்குக் கட்டுப்பட்டு சுபகாரியங்கள் சுபமுகூர்த்தங்களில் செய்வது தவறாகாது.

சுபமுகூர்த்தங்களில் செய்யும் காரியங்கள் எப்பொழுதும் நலம் தருமா?

அவ்விதம் இருக்க வேண்டும் என்பதில்லை. இங்கு முன் கூறியபடி செல்பவனின் மன நிலையே முக்கியத்துவம் காண்கின்றது. நல்ல எண்ணங்களுடன் செய்த அனைத்தும் நல்ல முடிவுகளைத் தரும் என்பது இறைவன் வகுத்த நீதியாகும். இவ்விதம் இருக்க சுபகாரியங்களுக்குச் சமயங்களில் முகூர்த்தம் பார்த்தல் வேண்டும் என்பது தவறாகும். சம்பிரதாயம் என்பன ஒட்டி நல்காரியங்கள் நல்காலங்களில் செய்வது நன்று என்பதை மட்டும் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் உழைப்பை நாடுகின்றவனுக்கு இத்தகைய நேரங்கள் இல்லை. இறைவனை நம்புகிறவனுக்கு எக்காலமும் நலம் தரும் காலமாகும்.