பாடல் #96

பாடல் #96: பாயிரம் – 6. அவையடக்கம்

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேட கில்லேனே.

விளக்கம்:

இறைவனைத் துதித்து பாடல்களை இசைத்துப் பாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை ஆனந்தக் கூத்தாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை உண்மையான அன்போடு நாடிச் சென்று அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவன் எங்கே இருக்கின்றான் என்று தேடி அலைந்து அவனைத் தமக்குள்ளே கண்டு அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். அப்படிப்பட்ட எம்மை ஆட்கொண்டு அவனை முழுவதும் அறியவைத்தது எம்பெருமான் சதாசிவமூர்த்தியின் பேரருளே.

பாடல் #97

பாடல் #97: பாயிரம் – 6. அவையடக்கம்

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே.

விளக்கம்:

என்றும் நிலைத்திருக்கும் வேதங்களைச் சொல்லுவதால் மட்டும் உணர முடியாதவனும் இனிமையான இசையோடு பாடுகின்ற அடியவர்களின் இசையினுள்ளே எழுந்தருளுகின்றவனும் படைப்புத் தொழிலைச் செய்யவேண்டி இறைவன் படைத்த பிரம்மனும் தியானிக்கும் சதாசிவமூர்த்தியை அவனது அருள்கொண்டே அவனை உணர முடியும்.

பாடல் #98

பாடல் #98: பாயிரம் – 6. அவையடக்கம்

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக் கிருந்த முனிவரும் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயனறி யாரே.

விளக்கம்:

இறைவனை உணர்ந்து முக்தி பெறவேண்டும் என்று மலை உச்சிகளிலும் குகைகளிலும் தவமிருக்கும் முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் சதாசிவமூர்த்தியை உணரக்கூடிய பேரறிவு ஞானத்தை இறைவனே கூறியருளினாலும் இறைவனும் தாமும் ஒன்றானவர்களே என்கிற உணர்வு இல்லாமல் இறைவனையும் தம்மையும் வேறு வேறாகக் எண்ணிக்கொண்டு அவ்விறைவனின் மேல் பக்திகொண்டு போற்றிப்பாடுபவர்கள் இறைவன் வழங்கிய பேரறிவு ஞானத்தின் பயனை அவர்கள் பெறாமலே இருக்கின்றார்கள்.

பாடல் #73

பாடல் #73: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரனடி நாடொறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

விளக்கம்:

குருநாதராக வந்த இறைவனின் இணையில்லாத திருவடிகளை என் தலை மேல் வைத்துக்கொண்டு அவர் அருளிய அனைத்தையும் எனது புத்திக்குள் புகுந்து நிற்கும்படி நினைவில் நிறுத்திக்கொண்டு சூரியன் மறைவில் தோன்றும் இளம்பிறைச் சந்திரனை தனது திருமுடியில் அணிந்துகொண்டிருக்கும் அரன் என்று அழைக்கப்படும் அந்த இறைவனின் பெருமைகளைப் போற்றி அவன் திருவடிகளை தியானித்துக் கொண்டு நாள்தோறும் அவன் அருளிய ஆகமங்களை சொல்கின்றேன்.

பாடல் #74

பாடல் #74: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பிலி கோடி யுகம்இருந் தேனே.

விளக்கம்:

சிவபெருமானாலேயே சொல்லப்பட்டதால் சிவாகமம் என்ற பேர் பெற்று பெருமை வாய்ந்த ஆகமங்களை அப்பெருமானே குருநாதராக இருந்து சொல்ல அவரின் திருவடிகளை வணங்கி பெற்றுக்கொண்ட பின் ஒரு குறையும் இல்லாத தில்லை அம்பலத்தில் ஆடிய இறைவனின் திரு நடனத்தைக் கண்டு களித்து அந்த ஒப்பில்லாத இறைவனின் நினைப்பிலேயே ஒரு கோடி யுகங்கள் இருந்தேன்.

பாடல் #75

பாடல் #75: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

இருந்தவக் காரணம் கேளிந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

விளக்கம்:

யாம் தவத்தில் இருக்க முடிந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள் இந்திரனே அனைத்து விதமான செல்வங்களையும் கொண்டிருக்கும் உலகங்கள் அனைத்திற்கும் தலைவனானவனும் எளிதில் செய்ய முடியாத அரிய தவம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் இறைவனின் திருவடிகளை தொழுதபோது எம் பக்தியைக் கண்டு கருணை கொண்டு என்னுடனே இறைவனும் வந்து இருந்ததால் தான் என்னால் ஒரு கோடி யுகம் இருக்க முடிந்தது.

பாடல் #76

பாடல் #76: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுட னேயுணர்ந் தோமே.

விளக்கம்:

பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசுவரன், ஈசன் ஆகிய ஐந்து தெய்வங்களின் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்யும் இறைவனாகிய சதாசிவமூர்த்தி அருளிய ஆகமத் தத்துவங்களையும் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழ் மொழிகளையும் நான்மறையாகிய வேதங்களையும் அளவின்றி யாம் பெற்றுக் கொண்டு அவற்றிலேயே மனம் திளைத்து கொண்டிருக்கும் காலங்களின் மேல் மனதைச் செலுத்தாமல் இருந்தபோது இனியும் சென்று கொண்டிருக்கும் காலங்களை உதாசீனப்படுத்தாமல் உடனே காலத்தின் தேவையை உணர்ந்து இவற்றை மற்றவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதை என்னுடன் இருந்த இறைவன் உணர்த்தினான்.

பாடல் #77

பாடல் #77: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

விளக்கம்:

எமது சீடனாகிய மாலாங்கனே இறைவனோடு இருந்த யான் இந்த உலகத்திற்கு வந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள். நீல நிற மேனியைக்கொண்டு இறைவனின் திருமேனியில் சரிபாகமாக இருக்கும் சக்தி தேவியும் ஆதிமூலமாகிய இறைவனும் சேர்ந்து உயிர்கள் உய்யும் பொருட்டு புரிந்த திருநடனத்தின் தத்துவங்களையும் இறைவனை அடைய வழிவகுக்கும் அரும்பெரும் ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய வேதத்தை மற்றவர்களுக்கு எடுத்து உரைக்கவே யான் வந்தேன்.

பாடல் #78

பாடல் #78: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத் தாண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

விளக்கம்:

இறைவனின் திருமேனியில் சரிபாகம் கொண்டவளும் என்றும் நீங்காத ஆனந்தத்தின் பெயரை உடையவளும் பிறப்பை நீக்கி என்னை முழுமையாக ஆட்கொண்டவளும் சீரும் சிறப்பும் உடையவளுமாகிய உமா தேவி தம் தலைவன் சிவபெருமானின் அருள் வேண்டி பசு மாடாக இருந்து தவம்புரிந்த திரு ஆவடுதுறைத் திருத்தலத்தில் அவளை அனைத்து எழுந்த நாதராக இருவரும் சேர்ந்து வீற்றிருக்கும் சிவசக்தியின் திருவடிகளைத் தொழுதுகொண்டே நான் அத்திருத்தலத்தில் இருந்தேன்.

பாடல் #79

பாடல் #79: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

விளக்கம்:

திருமேனியில் சரிசமமான பங்கு சக்தி தேவியுடன் சிவபெருமான் வீற்றிருக்கும் திருஆவடுதுறை திருத்தலத்தில் இறைவன் ஞானம் போதித்த படர் அரசமரத்தின் நிழலில் இறைவனோடு சேர்ந்து அவன் திரு நாமங்களை ஓதிக்கொண்டே இருந்தோம்.