பாடல் #1048

பாடல் #1048: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரைஅபி ராமி அகோசரி
புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே.

விளக்கம்:

பாடல் #1047 இல் உள்ளபடி அருளுகின்ற திரிபுரை சக்தியானது ஒலியாகவும் அந்த ஒலியின் எல்லையாகவும் இருக்கின்றது. திரிபுரையே உணரமுடியாத பேரொளியாகவும் இருந்து உலகங்கள் அண்டசராசரங்கள் அனைத்திற்கும் பரவிப் பெருகுகின்றது. இந்த ஒலி ஒளியாக இருக்கும் திரிபுரையே அனைத்தையும் அருளுபவளாகவும் பேரழகு மிகுந்தவளாகவும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவளாகவும் இருந்து அன்போடு ஞானத்தை அருளி ஆட்கொள்கின்றாள்.

கருத்து: பரை எனும் அசையும் சக்தியும், பேரழகு மிகுந்த அபிராமியும், ஐந்து கோசங்களுக்கும் அப்பாற்பட்ட அகோசரியும் ஆகிய இந்த மூன்று சக்தி வடிவங்களும் திரிபுரையாகும்.

பாடல் #1047

பாடல் #1047: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

தானா யமைந்தவ முப்புரம் தன்னிடைத்
தானான மூவுரு வோருருத் தன்மையள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

விளக்கம்:

திரிபுரை சக்தியானது மூன்று புரங்களில் இருக்கும் தேவர்களுக்கும் அவரவர்களின் தன்மைக்கேற்ற உருவங்களைக் கொண்ட தேவியர்களாக தாமாகவே அமைந்திருக்கும். திரிபுரையாக இருக்கும் இந்த சக்தியே பொன் நிறம் கொண்ட லட்சுமியாக இருந்து போகத்தையும், வெண்மை நிறம் கொண்ட சரஸ்வதியாக இருந்து ஞானத்தையும், செம்மையான கருமை நிறம் கொண்ட பார்வதியாக இருந்து மாயையை அழித்து முக்தியையும் அருளும் சக்தியாக இருக்கின்றார்கள்.

பாடல் #1046

பாடல் #1046: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்
திருள்புரை யீசி மனோன்மனி யென்ன
வருபல வாய்நிற்கு மாமாது தானே.

விளக்கம்:

பாடல் #1045 இல் உள்ளபடி உருவமாகவும் உருவம் இல்லாததாகவும் இருக்கின்ற திரிபுரை சக்தி சுந்தரி, அந்தரி, சிந்து, நாரணி, மனோன்மனி ஆகிய ஐந்து பெயர்களைக் கொண்ட தேவியர்களாக இருந்து சக்தியளிக்கும் மாபெரும் சக்தியாக இருக்கின்றாள்.

ஐந்து தேவியர்கள்:

சுந்தரி – பேரழகு உடைய வெள்ளை நிறத்தைக் கொண்டவள் (சரஸ்வதி)
அந்தரி – வானம் போன்ற செம்மையான கருமை நிறத்தைக் கொண்டவள் (பார்வதி)
சிந்துப் பரிபுரை – செந்தூரம் போன்ற சிவப்பு நிறத்தைக் கொண்டவள் (மகேஸ்வரி)
நாரணி – நாராயணனுக்கு தேவியாகிய நீல நிறத்தைக் கொண்டவள் (லட்சுமி)
இருள்புரை ஈசி மனோன்மனி – அண்டத்து இருளைப் போன்ற கருமை நிறத்தைக் கொண்டவள் (மனோன்மனி)

குறிப்பு: பிரம்மாவின் படைப்புத் தொழிலுக்கு சக்தியாக சரஸ்வதியும், திருமாலின் காக்கும் தொழிலுக்கு சக்தியாக லட்சுமியும், உருத்திரனின் அழிக்கும் தொழிலுக்கு சக்தியாக பார்வதியும், மகேஸ்வரனின் மறைத்தல் தொழிலுக்கு சக்தியாக மகேஸ்வரியும், சதாசிவனின் அருளல் தொழிலுக்கு சக்தியாக மனோன்மனியும் இருக்கிறார்கள்.

பாடல் #1045

பாடல் #1045: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை யுள்ளொளி யோராறு கோடியில்
தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள்
ஆமா யலவாந் திரிபுரை யாங்கே.

விளக்கம்:

மாமாயை, மாயை, வயிந்தவம், வைகரி, ஓமாயை, உள்ளொளி ஆகிய ஆறுவிதமான மாயையின் உச்ச நிலையில் உருவாகும் மந்திரங்கள் அனைத்தும் திரிபுரை சக்தியின் வடிவமாக இருக்கின்றது. இந்த வடிவங்களும் வடிவங்கள் இல்லாமலும் திருபுரை இருக்கின்றது.

குறிப்பு: பாடல் #401 இல் உள்ளபடி அசையும் சக்தியின் மையத்திலிருந்து தோன்றிய திரிபுரை எந்தெந்த வடிவங்களாகவும் வடிவம் இல்லாமல் இருக்கின்றது என்பதை இந்தப் பாடலில் அறியலாம்.

திரிபுரையின் ஆறு மந்திர வடிவங்கள்:

மாமாயை – வினைகள் இல்லாத சுத்த மாயை
மாயை – வினைகளோடு இருக்கும் மாயை
வயிந்தவம் – மாயையால் குழம்பி இருக்கும் ஞானசக்தி
வைகரி – முறைப்படி சத்தமாக கேட்கும் ஒலிவடிவம்
ஓமாயை – மாயையால் மறைக்கப்பட்ட பிரணவம்
உள்ளொளி – மாயையால் உருவான வெளிச்சமும் சத்தமும்

பாடல் #1044

பாடல் #1044: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

சாதன நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதஞ்சு பொற்கயல் வாரண
நாதனை நாடு நவகோடி தானே.

விளக்கம்:

பாடல் #1043 இல் உள்ளபடி உலக நன்மைக்கு கருவியாக இருக்கும் யோகின் உடலுக்குள் 1. நான்கு கோணம் கொண்ட குண்டம் (சதுர வடிவம்), 2. யாக குண்டத்தில் எரியும் அக்னி போன்ற முக்கோண குண்டம் (முக்கோண வடிவம்), 3. வளைத்த வில்லைப் போன்ற பிறை வட்ட வடிவம் கொண்ட பிறை குண்டம் (பிறை வடிவம்), 4. ஆரம்பமும் முடிவும் இல்லாத வேதங்களைப் போன்ற வட்ட குண்டம் (வட்ட வடிவம்), 5. சக்தி விளையும் மயங்களான ஆறு சக்கரங்கள் கொண்ட குண்டம் (அறுகோண வடிவம்), 6. உலகத்தின் எட்டுத் திசைகள் கொண்ட குண்டம் (அட்டகோண வடிவம்), 7. இலை வடிவம் போன்ற குண்டம் (இலை வடிவம்), 8. ஐந்துவிதமான பொறிகள் கொண்ட குண்டம் (பஞ்சகோண வடிவம்), 9. பொன் போன்ற தாமரை மலர் வடிவம் கொண்ட குண்டம் (பதும வடிவம்) ஆகிய ஒன்பது வகையான குண்டங்கள் இருக்கின்றது. இந்த நவ குண்டங்களின் மூலமாக யோகியானவர் ஆதி மூலமாகிய இறைவனை ஒன்பது கோடி யுகங்களானாலும் நாடிக்கொண்டே இருப்பார்.

பாடல் #1043

பாடல் #1043: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டவிப் பாய்கரு வொப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

விளக்கம்:

பாடல் #1042 இல் உள்ளபடி கோடி யுகங்களாக நிலைத்திருக்கும் உடலைப் பெற்ற சாதகர் யோகியாகிறார். அந்த யோகி நவகுண்டமாகிய தமது உடலுக்குள் இருக்கும் ஒன்பது வகையான குண்டங்களிலும் தாமாகவே அக்னி எழுப்பிக்கொண்டே இருக்கின்றார். கரு உற்பத்திக்கு உயிர்சக்தி கருவியாகப் பயன்படுவதைப் போல இறையருளை தமக்குள் கண்டுகொண்ட யோகியின் நவகுண்ட உடலை உலகம் தனது நன்மைக்கு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

கருத்து: கோடி யுகங்கள் இருக்கும் யோகியின் மேன்மையான உடலை உலகம் தனது நன்மைக்கு பயன்படுத்திக் கொள்கிறது.

பாடல் #1042

பாடல் #1042: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே யாய்ந்தறி வாரில்லை
காத்துட லுள்ளே கருதி யிருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

விளக்கம்:

பாடல் #1041 இல் உள்ளபடி சாதகர் பார்க்கின்ற உலகங்கள் அனைத்திலும் பரவி எழுகின்ற ஜோதியான இறைவனது உண்மையான தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்கின்றவர்கள் யாரும் இல்லை. அந்த ஜோதியின் உண்மையான தன்மையை தமக்குள் உணரும் வரை காத்திருக்கும் சாதகர்கள் அதை முழுவதும் அறிந்து உணர்ந்த பிறகு அவர்களின் நவகுண்டமாகிய உடலானது மேன்மை நிலையை அடைந்து என்றும் அழியாமல் கோடி யுகங்கள் நிலைத்திருக்கும்.

பாடல் #1041

பாடல் #1041: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதன மாகச் சமைந்த குருவென்றும்
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பரிந்தது பார்த்தே.

விளக்கம்:

பாடல் #1040 இல் உள்ளபடி சாதகர் பெற்ற இறைவனின் மாபெரும் அருளானது தமக்குள்ளே இருக்கும் மூலாக்கினியை பஞ்ச பூதங்களும் கருவியாகக் கொண்டு வளர்ந்து முழுமை அடைந்து குருவாக இருந்து தமக்குள்ளே வழிகாட்டுகிறது. அப்படி குரு காட்டிய வழிகாட்டுதலின் படி நவகுண்டமாகிய உடலானது ஏழு உலகங்களுக்கும் அதனதன் தன்மைகளுக்கு ஏற்றார் போல மாறிச் செல்கிறது. அங்கே குரு கூறிய செயலை செய்யும் பொழுது அந்த உலகம் அவர் முன்பு வணங்கி நிற்பதை பார்க்கலாம்.

கருத்து: பஞ்ச பூதங்களும் சாதகரின் உடலுக்குள்ளிருக்கும் மூலாக்கினியை வளர்ந்து கொண்டே இருக்கும். அது முழுமை அடையும் போது குருவாக நின்று ஏழு உலகங்களுக்கும் செல்ல வழிகாட்டுகிறது. அதன்படி நவகுண்டமாகிய உடலுடன் ஏழு உலகங்களுக்கும் அதனதன் தன்மைக்கேற்ப மாறி செல்லலாம். அங்கே சாதகர் செய்யும் செயலுக்கு அந்த உலகங்கள் சாதகரை வணங்கி நிற்கும்.

பாடல் #1040

பாடல் #1040: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

கொடிஆறு சென்று குலாவிய குண்டம்
அடியிரு கோணமா யந்தமு மொக்கும்
படியே ழுலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.

விளக்கம்:

பாடல் #1039 இல் உள்ளபடி ஆறு சக்திமயங்களிலும் உச்ச நிலையில் இருக்கும் சக்தியானது உடலாகிய நவகுண்டத்தோடு பேரின்பத்தில் இருக்கும். இந்த சக்தியானது மூலாதாரத்திலிருந்து சுடரொளியாக இரண்டு கோணங்களாகச் சென்று ஏழு உலகங்களுக்கும் பரவி அதையும் தாண்டிய உச்சியாக இருக்கும். மூலாதாரத்தில் இருக்கும் இந்த சுடரொளியை தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருப்பவர்கள் இறைவனின் மாபெரும் அருளைப் பெற்றவர்கள் ஆவார்கள்.

கருத்து: இறைவனை உத்தம ஜோதியாக உணர்ந்த சாதகரின் ஆறு சக்கரங்களிலுள்ள சக்தியானது உச்ச நிலையை அடைகிறது. இந்த உச்ச நிலையை அடைந்த சக்தியானது தந்து மூலாதாரத்திலிருந்து V போல இரண்டு கோணங்களாக சென்று ஏழு உலகங்களுக்கும் பரவி இருக்கும். இந்த நிலையை தொடர்ந்து செய்யும் சாதகர் இறைவனின் மாபெரும் அருளைப் பெற்றவர் ஆவார்.

குறிப்பு: சக்தி பரவும் விதத்தை படத்தில் காண்க.

ஏழு உலகங்கள்:

  1. சத்ய லோகம்
  2. தப லோகம்
  3. ஜன லோகம்
  4. மகர லோகம்
  5. சுவர் லோகம்
  6. புவர் லோகம்
  7. பூலோகம்

பாடல் #1039

பாடல் #1039: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

உத்தமன் சோதி யுளனொரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

விளக்கம்:

பாடல் #1038 இல் உள்ளபடி உத்தமாக உணர்ந்த இறைவனோடு சேர்ந்த சாதகர் ஆரம்ப நிலையில் பாலகனாய் இருக்கின்றார். அதன் பிறகு பாடல் #1036 இல் உள்ளபடி ஐந்து பூதங்களும் அவரது சாதகத்தைத் தொடர்ந்து செய்யும் பொழுது அந்த பாலகன் ஆறு சக்கரங்களுக்கும் சென்று இளைஞனாகி மலர்ந்து இருக்கின்றார். அதன் பிறகு ஆறு சக்கரங்களிலிருந்தும் வரும் சக்தி அனைத்து திசைகளுக்கும் பரந்து விரிந்து நிரம்பி இருக்கும். அதன் பிறகு ஆறு சக்திமயங்களிலும் உள்ள சக்தியானது தமது உச்ச நிலையை அடைந்து விளங்குகின்றது.