பாடல் #767

பாடல் #767: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

அவனிவ னாகும் பரிசறி வார்இல்
அவனிவ னாகும் பரிசது கேள்நீ
அவனிவ னோசை ஒளியினுள் ஒன்றி
அவனிவன் வட்டம தாகிநின் றானே.

விளக்கம்:

தாமும் இறைவனாகவே ஆகிவிடும் பெரும் பயனை அறிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. தாமும் இறைவனாகவே ஆகிவிடும் பெரும் பயனைப் பற்றிக் கேட்டுக்கொள்ளுங்கள். பாடல் #765 இல் உள்ளபடி ஓங்கார மந்திரத்தில் அகாரம் எனும் ஒலியாக இருப்பவன் சிவம். உகாரம் எனும் ஒளியாக இருப்பவள் சக்தி. மகாரம் எனும் குண்டலினியாக இருப்பது உயிர்கள். உயிர்களின் உடலுக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களில் சக்திமயமாகவும் ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் ஒளியாகவும் எட்டாவது இடமான துவாதசாந்த வெளியில் ஒலியாகவும் இருக்கின்ற இறைவனே பிரணவ மந்திரத்திலுள்ள மூன்று எழுத்துக்களின் தத்துவம் என்பதை உணர்ந்து அந்த இடங்களோடு தமது உயிர்சக்தியைக் கலந்து நிற்கின்றவனே இறைவனாக ஆகிவிடுகின்றான்.

கருத்து: பிரணவ மந்திரத்தின் தத்துவம் ஒலியாகிய சிவமும், ஒளியாகிய சக்தியும், உயிராகிய ஆன்மாக்களும் ஒன்றாகக் கலந்து ஒன்றோடு ஒன்று வேறுபடாமல் இருப்பதே ஆகும். இதை உணர்ந்து அறிந்து கொண்டவர்கள் இறைவனாக ஆகிவிடுகிறார்கள்.

பாடல் #768

பாடல் #768: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி யிருப்பிடங் காணலு மாகுமே.

விளக்கம்:

உயிர்களின் உடலுக்குள்ளேயே தாமரை மலர்கள் போல மலர்ந்து இருக்கின்ற ஏழு சக்கரங்களிலும் தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியிலும் இருக்கின்ற சக்திமயங்களே இறைவன் என்பதை அறிந்துகொண்டு அந்த இடங்களோடு தம் உயிர்சக்தியை ஒன்றாகச் சேர்த்து வைத்து இருக்கும் வழிமுறையை உயிர்கள் அறிந்து கொள்வதில்லை. அப்படி இருக்கும் வழிமுறையை பாடல் #765 ல் உள்ளபடி குருவானவர் மூலம் அறிந்து தமக்குள் இருக்கும் இறைசக்தியோடு ஒன்றாகக் கூடியிருந்து உணர்ந்துவிட்டால் கருப்பங்கட்டி போல இனிக்கின்ற அமிர்தமான இறைவனை கண்டுகொள்ளலாம்.

கருத்து: பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவன் இருக்குமிடத்தை அடையும் வழிமுறையை உயிர்கள் குருவானவர் மூலம் அறிந்து தமக்குள் உணர்ந்துவிட்டால் இறைவனை கண்டுவிடலாம்.

பாடல் #769

பாடல் #769: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே.

விளக்கம்:

பாடல் #768 ல் உள்ளபடி தமக்குள் இறைவனை உணர்ந்து கண்டுகொண்ட யோகியர்கள் அந்த இறைவனே படைக்கின்ற பிரம்மனாகவும், காக்கின்ற திருமாலாகவும், கருநீலக் கறையுடைய தொண்டையைக் கொண்டு மாயையை அழிக்கின்ற உருத்திரனாகவும், மாயையால் மறைக்கின்ற மகேசுவரனாகவும், அருளுகின்ற சதாசிவனாகவும் உயிர்களின் உடலோடு கலந்து நிற்கின்ற சக்திமயங்களாகவும் இருப்பதை கண்டுகொள்வார்கள்.

கருத்து: யோகியர்கள் தமக்குள் உணர்ந்த இறைவனே அனைத்து சக்தியாகவும் இருப்பதை கண்டுகொள்வார்கள்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #83

23-9-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சிறியவன் சிறியவனாக இருக்க பெரும் அருள் உண்டு. சிறியது பின்பு பெரியதாகும் திறன் உண்டு. நாம் சின்னவன் (நாம் கீழான இடத்தில் இருக்கின்றோம் மற்றவர்கள் மேலான இடத்தில் இருக்கின்றார்கள்) என்ற எண்ணத்தை தவிர்ப்பீர்களாக. இன்று சின்னது என்பது நாளை பெரிதாகும். குறுகிய மனப்பான்மை இங்கு பலருக்கும் உண்டு. பயத்தை மனதிலிருந்து நீக்கி விடுங்கள். பின்பு அனைத்தும் சீராகும். பூஜைகளில் இறைவனிடம் மனம் விட்டு கூறியும் மனம் விட்டு கேட்கவும் வேண்டும் இவ்விதம் செய்திட நல்முடிவுகள் உண்டு.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #82

26-8-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆனமீக நிலையை வைத்து இன்றைய இளைஞர்களிடம் குழப்பங்கள் அதிகமாக உள்ளது ஏன்?

குழப்பத்திற்கு அடிப்படையே முதல் காரணமாகும் முதலில் இறைவன் வெளியே இல்லாதவன் என்று உணர வேண்டும். இரண்டாவதாக அவன் நமக்குள் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். மூன்றாவதாக அவன் நம்மை விட்டு பிரியாமல் இருக்கின்றான் என்பதை உணர வேண்டும். நான்காவதாக அவன் தேவையற்றவன் என்பதை உணர வேண்டும். அன்புடன் அவனை பார்த்தால் அன்பு அது பக்தியாய் மாறி பக்தியது பெரும் வெள்ளமாய் பெருகி அந்த பரவசத்தில் நாமும் அமர இறைவனை உறுதியாக காண முடியும். அடிப்படையில் இறைவனை வெளியில் பார்ப்பதை விட வேண்டும் என்பது விதியாகும். ஏனெனில் இறைவன் நம்மை விட்டு பிரிந்ததில்லை இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்பதை நாம் உணர்வதில்லை. இதனை அப்அப்பொழுது சிந்தனையில் வைக்க வேண்டும். ரூபம் இல்லாத இறைவன் நம்முடைய இயலாமையால் ரூபத்தை கொடுக்கின்றான். ரூபமாய் இருக்கும் இறைவனை சிறிது தூரத்தில் பார்த்து நாம் வேறு இறைவன் வேறு என தவறாகப் புரிந்து நமக்கும் இறைவனுக்கும் உள்ள தூரத்தை அதிகரித்ததால் இக்காலத்தில் வேதனை காண்கின்றோம் என்பதே உண்மையான நிலை இதை தவிர்க்க வேண்டும் என்றால் எமக்குள் இருக்கும் இறைவா என்கின்ற வாக்கியத்தை எப்பொழுதும் உங்கள் வழிபாட்டில் சேர்த்துக் கொண்டால் இது நாளடைவில் பெருகி உண்மையாக மாறி அந்த உண்மையை உணரச்செய்யும். இன்று முழுமையாக தவம் செய்தோம் இறைவனை காணவில்லை என எண்ண வேண்டாம். ஏனெனில் நீங்கள் தியானம் செய்தது வெளியில் இருக்கும் இறைவனை உள்ளிருக்கும் இறைவனை அல்ல. உள் சென்று ஹிருதய ஸ்தானத்தில் இறைவன் இருப்பதாக எண்ணி அந்த இடத்தை சுத்தமாக வைத்து இறைனுக்கு பாத நமஸ்காரங்கள் செய்வது ஒன்றே போதுமானது. இங்கு இறைவனுக்கு ரூபம் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஜோதி ஸ்வருபனை ஜோதி ஸ்வருபமாக காண்பீர்களாக இவ்விதம் செய்திட குறையின்றி இறையருள் கைகூடும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #81

30-7-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மன சக்தியால் எதையும் சாதிக்க இயலுமா? பின்பு ஏன் பல காரியங்கள் தோல்வி அடைகின்றது?

உறுதியாக மன சக்தியால் அனைத்தையும் சாதிக்க இயலும். பின்பு காரியங்கள் நடைபெறவில்லை என்றால் அதற்கு காரணம் மனஉறுதி குறைவாக உள்ளதை ஆகும். மனதில் ஒன்றை வைத்து ஒன்று என்றால் ஒன்றை மட்டும் வைத்து மாற்றாமல் அசைக்காமல் அது நடைபெறும் என எண்ணம் கொண்டால் உறுதியாக நடைபெறும் என அனுபவரீதியாகவும் யாம் கண்டதும் அனைவரும் கண்டதாகும். தவறு எங்கிருக்கிறது என்றால் என்ன வேண்டும் என்பதில் முதலில் உறுதியில்லை. இரண்டாவதாக அப்படம்தனை மனதில் வைத்து மாற்றி மாற்றி கலர் கலராகவும் பல விதங்களாகவும் மாற்றிக் காண ஓர் புதுமையான படம் மனதில் காணும் நிலை உண்டாகும். பின்பு வெற்றி எவ்வாறு உண்டாகும். இதன் அடைப்படை என்னவென்றால் முதலில் என்ன வேண்டும் என்பதை முழுமையாக அறிய வேண்டும். இரண்டு அது எவ்விதம் வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். இதற்கு பின்பே மனதில் வைக்க வேண்டும். உதாரணமாக நான்கு சக்கர வாகனம் ஒன்று வேண்டும் என்றால் அது எந்த வாகனம்? அதன் பெயர் என்ன? அதன் கலர் என்ன? அதை எங்கு வைக்க வேண்டும்? என்பதில் முதலில் தெளிவு வேண்டும். இது தான் விதி மாறாக இன்று ஓர் விதமான வாகனமும் நாளை வேறு வாகனம் கலர் வேறு நிறுத்தும் இடம் வேறு என மாற்றிக் கொண்டிருந்தால் உறுதியாக அக்காரியம் நடைபெறாது. ஆங்கிலத்தில் POWER OF THOUGHT (எண்ணகளின் சக்தி) என்பதை கடைபிடித்தால் வெற்றி உறுதியாக கிடைக்கும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #80

5-6-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஒன்று செய் அதை நன்றாக செய் என்பது இக்கலியுகத்தில் குறையாக உள்ளது. பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்யும் முயற்சியில் அனைத்து காரியங்களும் முக்கால்வாசி பலனே தருகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஒரு காரியம் முடிந்தபின் மற்றொரு காரியத்திற்குச் செல்வதே சிறந்ததாகும். முயற்சித்தால் இதுவும் கைகூடும். ஒரு வேளை செய்யும் பணி இன்று முடியாமல் அதற்குள் வேறொரு முக்கியமான பணி வந்துவிட்டால் பயப்பட வேண்டாம். அப்பணியை மறுநாள் முழுமையாகத் தொடருதல் வேண்டும். அப்பணியை முடித்தப் பிறகே புதிதாக வரும் பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்தையும் தொடர்கதையாகச் செய்வது சரியாகாது. இதைக் கூறுவதற்குக் காரணமும் உண்டு. பலர் இங்கு இஷ்ட தெய்வத்தை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இது பலன் அளிக்காது. இஷ்ட தெய்வம் என்பது ஓர் ஆடையல்ல அடிக்கடி மாற்றிக்கொள்வதற்கு. முழுமையான பலன் வேண்டுமெனில் ஒன்றில் நிற்கக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அந்த ஒன்றிலிருந்து விலக விலக மன சஞ்சலங்களே மிஞ்சும். ஒன்றில் நின்று வெல்வாய் என்பதே எமது அறிவுரையாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #79

9-5-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நமக்கு பிற உயிர்களிடம் அன்பு இல்லாமல் இருந்தாலும் அன்பாக இருப்பது போல் நடித்தல் வேண்டும். ஏனென்றால் இந்த நடிப்பு செல்ல செல்ல நாளடைவில் நிஜமான அன்பாக மாறிவிடும். ஒருவர்க்கு தானம் செய்யும் எண்ணம் இல்லையென்றால் தானம் செய்தால் புகழ் கிடைக்கும் என்ற எண்ணம் கொண்டு தானம் செய்தல் வேண்டும். இத்தானம் செய்வது பழக்கமாகி விடும் பின்பு அதன் வழியாக அகங்காரம் தோணாது. நல் குணங்கள் ஒன்றும் இல்லா போதிலும் அது இருப்பது போல் பாவனை செய்து காரியங்கள் நடத்தி விட நாட்கள் செல்ல செல்ல அத்தகைய அன்பு பாசம் தானதர்ம சீலனாக மாறி பெருமளவிற்கு முன்னேற்றம் அடைய இயலும். தானம் என்பது வெறும் பணத்தால் அன்னத்தால் மட்டுமல்ல நல்வார்த்தைகளும் நம் அறிவை பங்கிடுவதும் தானமே ஆகும். இயன்றளவிற்கு நம் கையில் வசதிகள் இல்லா போதிலும் நம் அறிவை பகிர்ந்து கொள்வதும் ஓர் பெரும் தானமாகின்றது. இதனையும் மனதில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #78

12-4-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பலர் தமக்குள் இருக்கும் குறைகள் தெரியாத நிலையில் இருக்கின்றனர் இத்தகைய குறைகளை மூடி மறைப்பதற்க்காக பெருமளவில் கோபம் கொண்டு சீறி எழுகின்றனர் இது அவர்களுடைய கீழ் நிலையை மறைப்பதற்க்கான ஓர் முயற்சியாகும் இத்தகைய நபர்கள் எவ்வாறு இதிலிருந்து மீள்வது?

முதலில் தம் குறைகளை உணர வேண்டும். குறைகளை உணர்ந்த பின் அக்குறைகளை நீக்கி குறையின்றி வாழ கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திட கோபங்கள் குறைவதோடு உண்மையான நிலையை உணர்ந்து பெருமளவில் அமைதி கிடைக்கும். ஆன்மீக பாதையில் செல்கின்ற பலருக்கும் குறிப்பாக சக்தி உபாசனையில் (அம்மனை வழிபடுபவர்கள்) ஈடுபடுகின்றவர்க்கும் தன்னை விட சிறந்த பக்தர் இல்லை என்கின்ற ஆணவம் அதிகமாக வரும். இது அகங்காரத்தை வளர்க்கும் தன் குறைகளை மறைத்து கோபப்படுவார்கள். ஆத்திரம் கொண்டு அங்கும் இங்கும் ஓடுவார்கள். சம்பந்தப்படாத மற்றவர்களையும் வார்த்தையால் தாக்கி பேசுவார்கள் இதனை தவிர்த்திடவே முதலில் நாம் நமக்குள் இருக்கும் குறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இவ்விதம் செய்தால் மட்டுமே முன்னேற்றங்கள் கிடைக்கும். குறைகளை கண்டால் என்ன செய்வது? அதை வளர விடக்கூடாது. அதை நீக்கும் வழியை தேட வேண்டும். இது ஒரு நாளில் முடியாத செயல் பல காலங்கள் செல்ல வேண்டும் என்ற விதி இருந்த போதிலும் படிப்படியாக குறைகளை நீக்குதல் வேண்டும். இல்லை என்றால் ஓர் விஷக் கொடியாக இது வளர்ந்து பின்பு இறைவனை நெருங்கும் தகுதியற்றவனாக மாற்றி விடும். ஏனெனில் அகங்காரத்திற்கும் கோபத்திற்கும் அப்பாற்பட்டவனாக நிற்கின்றான் அத்தெய்வம். பாசம் அன்பு இரண்டும் இரண்டு கால்களாக வைத்து நடமாடும் அந்த இறைவனை நாம் வணங்க வேண்டுமென்றால் பாசம் அன்பு என்ற இரண்டு தன்மைகளை நாம் வளர்த்தல் வேண்டும். அத்தன்மைகளை வளக்க வேண்டுமென்றால் அகங்காரமும் கோபமும் ஆகாது என்பதை நன்கு உணர வேண்டும். இது எவரையும் சுட்டிக்காட்டாமல் பொதுவாக ஆன்மீக பாதையில் செல்வோர்க்கு நேரிடக்கூடிய ஓர் கடினம் ஆகும். இது ஆன்மீக பருவத்தில் ஏற்படக்கூடிய ஓர் நிலை.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #77

15-3-2012 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மகான்களின் சமாதிகளுக்கு செல்வதின் பயன் என்ன?

மகான்களின் சமாதிக்கும் சென்று அமர்ந்து வருவதில் எவ்வித லாபமும் இல்லை. லாபம் என கணக்கிட்டால் ஆத்ம ஞானம் பெருகுதல் வேண்டுமென்றால் அங்கு அமர்ந்து செய்ய வேண்டியதை செய்தல் வேண்டும். இதற்கு தேவையானது 1.விசுவாசம் (நம்பிக்கை) 2.ஆன்மீக விருப்பம் 3.பெரும் தெய்வ சிந்தனை 4.மனஉறுதி 5.மனஒருமைப்பாடு இவை இல்லையென்றால் அங்கு அமர்ந்து அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்து என்ன எதிர்பார்க்கிறிர்கள்? பொதுவாக இக்காலத்தில் பௌர்ணமி நேரங்களில் சமாதிகளுக்கு சென்று வட்டமிட்டு அங்கு தின்பண்டங்கள் உண்டு மகிழ்வதும் கொண்டாடுவதும் இப்போது உள்ளது. இதில் ஆன்மீக ரீதியாக எவ்வித வளர்ச்சியும் இல்லை. உடல் ஆரோக்யம் சிறிது காணலாம். இறை நாட்டத்தில் எவ்வித வளர்ச்சியும் இருக்காது. இதற்கு சமாதிக்கு ஏன் செல்ல வேண்டும். வீட்டிலேயை இருந்து செய்யலாமே? அங்கு அமர்ந்து அங்கு உள்ள மகான்களை நினைத்து தியானம் செய்தல் வேண்டும். அவரிடம் அருளைக் கேட்டு பெறுதல் வேண்டும், இக்காலத்தில் பலர் மகான்களின் சமாதிக்கு சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்ற ஓர் மூடநம்பிக்கை வைத்துள்ளனர், உங்களை காப்பது அந்த மகான்கள் அல்ல, உமது விசுவாசமே என மனதில் உணர வேண்டும், மகான்கள் அனைவரும் கூறுவது உன் விசுவாசம் உன்னை காக்கும் என்பது தான், நான் உன்னை காக்கின்றேன் என்று யாரும் கூறியதில்லை, இதனை முழுமையாக மனதில் வைத்து முறையாக செயல்பட்டால் நன்மைகள் உண்டாகும் இல்லையேல் வெறும் பொழுது போக்காகும்.