பாடல் #1658

பாடல் #1658: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

இழிகுலத் தோர்வேடம் பூண்பர் மேலெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர் தேவாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இழிகுலத தொரவெடம பூணபர மெலெயத
வழிகுலத தொரவெடம பூணபர தெவாகப
பழிகுலத தாகிய பாழசணட ரானார
கழிகுலத தொரகள களையபபட டொரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இழி குலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த
வழி குலத்தோர் வேடம் பூண்பர் தே ஆகப்
பழி குலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார்
கழி குலத்தோர்கள் களைய பட்டோரே.

பதப்பொருள்:

இழி (இழிவான) குலத்தோர் (கூட்டத்தோடு சேர்ந்தவர்கள்) வேடம் (பொய்யாக வேடம்) பூண்பர் (அணிவது) மேல் (அனைவருக்கும் மேலானவன் என்ற பொய்யான பதவியை) எய்த (பெறுவதற்கு ஆகும்)
வழி (ஞான குருவின் வழியை பின்பற்றி வருகின்ற சீடர்கள்) குலத்தோர் (கூட்டத்தோடு சேர்ந்தவர்கள்) வேடம் (உண்மையான வேடம்) பூண்பர் (அணிவது) தே (தேவர்கள்) ஆகப் (ஆகுவதற்காக ஆகும்)
பழி (பொய்யான வேடத்தால் பழியை பெற்ற) குலத்து (கூட்டத்தவர்) ஆகிய (ஆகிய இவர்கள்) பாழ் (அடுத்தவர்களின் வாழ்க்கையை பாழாக்கிய) சண்டர் (கொடுமையான மனிதர்கள்) ஆனார் (ஆக இருக்கின்றார்கள்)
கழி (எனவே தங்களின் வாழ்க்கையை வீணாக கழித்த) குலத்தோர்கள் (கூட்டத்தவர்கள்) களைய (உண்மை வேடம் அணிந்த நல்லவர்கள் கூட்டத்திலிருந்து நீக்கி களையப்) பட்டோரே (பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்).

விளக்கம்:

ஞான குருவின் வழியை பின்பற்றி வருகின்ற சீடர்கள் கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் உண்மையான வேடம் அணிவது தேவர்கள் ஆகுவதற்காக ஆகும். ஆனால் இழிவான கூட்டத்தோடு சேர்ந்தவர்கள் பொய்யாக வேடம் அணிவது அனைவருக்கும் மேலானவன் என்ற பொய்யான பதவியை பெறுவதற்கு ஆகும். ஆகவே பொய்யான வேடத்தால் பழியை பெற்ற கூட்டத்தவர் ஆகிய இவர்கள் அடுத்தவர்களின் வாழ்க்கையை பாழாக்கிய கொடுமையான மனிதர்கள் ஆக இருக்கின்றார்கள். எனவே தங்களின் வாழ்க்கையை வீணாக கழித்த கூட்டத்தவர்கள் உண்மை வேடம் அணிந்த நல்லவர்கள் கூட்டத்திலிருந்து நீக்கி களையப் பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.