பாடல் #1659

பாடல் #1659: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

பொய்த்தவஞ் செய்வார் புகுவார் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்
பொய்த்தவ மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்
சத்திய ஞானத்தாற் றாங்குந் தவங்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொயததவஞ செயவார புகுவார நரகததுப
பொயததவஞ செயதவர புணணிய ராகாரெற
பொயததவ மெயததவம பொகததுட பொககியஞ
சததிய ஞானததாற றாஙகுந தவஙகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொய் தவம் செய்வார் புகுவார் நரகத்து
பொய் தவம் செய்தவர் புண்ணியர் ஆகார் ஏல்
பொய் தவம் மெய் தவம் போகத்து உள் போக்கி அம்
சத்திய ஞானத்தால் தாங்கும் தவங்களே.

பதப்பொருள்:

பொய் (உண்மையான தவசிகளைப் போல நடிக்கின்ற பொய்யான) தவம் (தவத்தை) செய்வார் (செய்பவர்கள்) புகுவார் (இறந்த பிறகு சென்று அடைவார்கள்) நரகத்து (நரகத்தில்)
பொய் (பொய்யான) தவம் (தவத்தை) செய்தவர் (செய்தவர்கள்) புண்ணியர் (பாவத்தை மட்டுமே சேர்த்துக் கொள்வதால் புண்ணியம் பெற்றவர்) ஆகார் (ஆக மாட்டார்கள்) ஏல் (ஆனால்)
பொய் (பொய்யான) தவம் (தவமாக இருந்தாலும்) மெய் (உண்மையான) தவம் (தவமாக இருந்தாலும்) போகத்து (உலகத்தில் வினைகளை கொடுக்கின்ற ஆசைகளை) உள் (தமக்குள்ளிருந்து) போக்கி (நீக்கி விட்டு) அம் (அதன் பயனால் கிடைக்கின்ற)
சத்திய (உண்மையான) ஞானத்தால் (ஞானத்தால்) தாங்கும் (உறுதியாக தாங்கப்பட்டு இருப்பதே) தவங்களே (உண்மையான தவங்கள் ஆகும்).

விளக்கம்:

உண்மையான தவசிகளைப் போல நடிக்கின்ற பொய்யான தவத்தை செய்பவர்கள் இறந்த பிறகு நரகத்திற்கே சென்று அடைவார்கள். பொய்யான தவத்தை செய்தவர்கள் பாவத்தை மட்டுமே சேர்த்துக் கொள்வதால் புண்ணியம் பெற்றவர் ஆக மாட்டார்கள். ஆனால், பொய்யான தவமாக இருந்தாலும் உண்மையான தவமாக இருந்தாலும் உலகத்தில் வினைகளை கொடுக்கின்ற ஆசைகளை தமக்குள்ளிருந்து நீக்கி விட்டு அதன் பயனால் கிடைக்கின்ற உண்மையான ஞானத்தால் உறுதியாக தாங்கப்பட்டு இருப்பதே உண்மையான தவங்கள் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.