பாடல் #1662

பாடல் #1662: ஆறாம் தந்திரம் – 9. தவ வேடம் (அகத் தவத்தின் தன்மையை புற வேடத்தில் காட்டுவது)

பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிரங் குண்டலங் கண்டிகை
யோதி யவர்க்கு முருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பூதி யணிவது சாதன மாதியிற
காதணி தாமபிரங குணடலங கணடிகை
யொதி யவரககு முருததிர சாதனந
தீதில சிவயொகி சாதனந தெரிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பூதி அணிவது சாதனம் ஆதியில்
காது அணி தாம்பிரம் குண்டலம் கண்டிகை
ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்
தீது இல் சிவ யோகி சாதனம் தேரிலே.

பதப்பொருள்:

பூதி (விபூதியை) அணிவது (அணிந்து கொள்வது) சாதனம் (மிகவும் உன்னதமான கருவியாக) ஆதியில் (அனைத்திற்கும் முதலானது ஆகும்)
காது (அது மட்டுமின்றி காதுகளில்) அணி (அணிகின்ற) தாம்பிரம் (செப்பினால் செய்த) குண்டலம் (குண்டலங்களும்) கண்டிகை (கழுத்தில் அணிந்திருக்கும் மணியும் கருவியாகும்)
ஓதி (மந்திரங்களை ஓதுகின்ற) அவர்க்கும் (தவசிகளுக்கு உறுவேற்றுகின்ற) உருத்திர (கையில் இருக்கின்ற உருத்திராட்ச மாலையும்) சாதனம் (கருவியாக உள்ளது)
தீது (இவை தீமை) இல் (இல்லாத) சிவ (உண்மையான சிவ யோகத்தை புரிகின்ற) யோகி (யோகிகளுக்கு) சாதனம் (கருவிகளாகப் பயன்படுவது) தேரிலே (அந்தக் கருவிகளின் தத்துவங்களை முழுவதும் உணர்ந்து தெளிந்தால் மட்டுமே ஆகும்).

விளக்கம்:

உண்மையான தவசிகள் விபூதியை அணிந்து கொள்வது மிகவும் உன்னதமான கருவியாக அனைத்திற்கும் முதலானது ஆகும். அது மட்டுமின்றி காதுகளில் அணிகின்ற செப்பினால் செய்த குண்டலங்களும் கழுத்தில் அணிந்திருக்கும் மணியும் அவர்களுக்கு கருவியாகும். மந்திரங்களை ஓதுகின்ற தவசிகளுக்கு உறுவேற்றுகின்ற கையில் இருக்கின்ற உருத்திராட்ச மாலையும் கருவியாக உள்ளது. இந்தக் கருவிகளை பயன்படுத்துகின்ற முறையை முழுவதும் அறிந்து தெளிந்த தீமை இல்லாத உண்மையான சிவ யோகத்தை புரிகின்ற யோகிகளுக்கு மட்டுமே அவை பயனுள்ளதாகும்.

கருத்து:

சிவ யோகிகள் அணிந்து இருக்கின்ற விபூதி, குண்டலம், உருத்திராட்சம் போன்ற பொருள்களை தீமைகளை நீக்கி நன்மையை கொடுப்பதற்கு கருவியாக பயன்படுத்திக் கொள்ளுகின்ற முறை உண்மையான சிவ யோகிகளுக்கே தெரியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.