பாடல் #1657

பாடல் #1657: ஆறாம் தந்திரம் – 8. அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

இன்பமுந் துன்பமு நாட்டா ரிடத்துள்ள
நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்கா
மென்ப விறைநாடி நாடோறு நாட்டினில்
மன்பதை செப்பஞ் செயில்வையம் வாழுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இனபமுந துனபமு நாடடா ரிடததுளள
நனசெயல புனசெய லாலநத நாடடிறகா
மெனப விறைநாடி நாடொறு நாடடினில
மனபதை செபபஞ செயிலவையம வாழுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள
நன் செயல் புன் செயல் ஆல் அந்த நாட்டிற்கு ஆம்
என்ப இறை நாடி நாள் தோறும் நாட்டினில்
மன் பதை செப்பம் செயில் வையம் வாழுமே.

பதப்பொருள்:

இன்பமும் (இன்பம் வருவதும்) துன்பமும் (துன்பம் வருவதும்) நாட்டார் (ஒரு நாட்டில் உள்ளவர்கள்) இடத்து (அவர்கள் இருக்கின்ற இடத்தில்) உள்ள (உள்ள)
நன் (நன்மையான) செயல் (செயல்களாலும்) புன் (தீமையான) செயல் (செயல்களாலும்) ஆல் (தான்) அந்த (அவர்கள் இருக்கின்ற) நாட்டிற்கு (நாட்டிற்கு) ஆம் (நிகழ்கின்றது)
என்ப (என்பதால்) இறை (அதை தவிர்த்து இறைவனை) நாடி (தேடி) நாள் (தினம்) தோறும் (தோறும்) நாட்டினில் (நாட்டில் உள்ள மக்கள் அனைவரும்)
மன் (தங்களின் மனதை) பதை (கெடுக்கின்ற விஷயங்களை நீக்கி) செப்பம் (செம்மையாக்குவதை) செயில் (செய்தால்) வையம் (உலகம்) வாழுமே (இன்பமோடு வாழும்).

விளக்கம்:

ஒரு நாட்டில் உள்ளவர்கள் அவர்கள் இருக்கின்ற இடத்தில் செய்கின்ற நன்மையான செயல்களாலும் தீமையான செயல்களாலும் தான் அவர்கள் இருக்கின்ற நாட்டிற்கு இன்பம் வருவதும் துன்பம் வருவதும் நிகழ்கின்றது. ஆதலால் அதை தவிர்த்து இறைவனை தேடி தினம் தோறும் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தங்களின் மனதை கெடுக்கின்ற விஷயங்களை நீக்கி செம்மையாக்குவதை செய்தால் உலகம் இன்பமோடு வாழும்.

கருத்து:

செம்மையான மனதோடு எதை செய்தாலும் அது தர்மமாகும் இதுவே உலகத்திற்கு நன்மையை கொடுக்கும். அவ்வாறு இல்லாமல் தீமையான மனதோடு செய்கின்ற செயல்களே அவ வேடமாகும் இதுவே நாட்டிற்கு துன்பத்தை கொடுக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.