பாடல் #427

பாடல் #427: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரங் கருஇடர் நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
வைத்தசங் காரம் கேவலம் ஆன்மாவுக்கு
உய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.

விளக்கம்:

உலகத்தில் பிறவி எடுக்க தாய் வயிற்றில் கருவாகப் பிறந்த அனைத்து உயிர்களுமே தங்களின் வினைப் பயனாகிய துன்பங்களையும் சேர்த்துக் கொண்டுதான் பிறக்கின்றன. இறைவனது கருணையினால் அந்த துன்பங்கள் சிறிது நேரமாவது நீங்கித் தம்மை மறந்து உயிர்கள் இருக்கும் தூக்க நிலை தினமும் நிகழும் நித்த சங்காரமாகும். உடலை விட்டு உயிர் பிரிந்து ஆன்மா மட்டுமே இருக்கின்ற நிலை சுத்த சங்காரமாகும் ஸ்தூல உடலும் சூட்சும உடலும் பிரிந்து இருக்கும் கனவு நிலையில் ஆன்மா மாயையிலேயே மூழ்கி கேவலப்பட்டு இருக்கின்ற நிலை வைத்த சங்காரமாகும். வினைகளையெல்லாம் தீர்த்துவிட்ட உயிர் ஸ்தூல உடலை விட்டுப் பிரிந்து சூட்சும உடலும் அழிந்து தனித்தன்மையோடு இருந்த ஆன்மா உண்மைப் பொருளான இறைவனுடனே இரண்டறக் கலந்துவிடும் போது நான் எனும் தனித்தன்மை முற்றிலும் அழிந்து சிவமாக மாறும் நிலை உய்த்த சங்காரமாகும்.

பாடல் #428

பாடல் #428: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றுதல்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
சுத்தசங் காரமுந் தோயாப் பரனருள்
வைத்தசங் காரமும் நாலாம் மதிக்கிலே.

விளக்கம்:

உயிர்கள் தங்களது துன்பங்களை மறந்து நீண்ட நேரத்திற்கு இளைப்பாற வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் நித்த சங்காரம் நிகழ்கிறது. ஆரம்பம் இல்லாத கனவு நிலையில் உலக மாயைகளெல்லாம் மறைந்து எண்ணங்களும் இல்லாமல் உயிர்கள் சிறிது நேரமாவது இளைப்பாற வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் வைத்த சங்காரம் நிகழ்கிறது. இறைவனது திருவருளை மட்டுமே எண்ணிக் கொண்டு மற்ற அனைத்தையும் விட்டு விலகி ஆன்மா திரும்ப வர வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் சுத்த சங்காரம் நிகழ்கிறது. அனைத்து வினைகளையும் கழித்த ஆன்மா இனி தனித்தன்மை இல்லாமல் உண்மைப் பொருளான இறைவனுடனே கலந்துவிட வேண்டும் என்கிற இறைவனது கருணையினால் உய்த்த சங்காரம் நிகழ்கிறது. இறைவனது கருணையை மதித்துப் பார்த்தால் இந்த நான்கு சங்காரங்களும் உயிர்களின் நன்மைக்காகவே இறைவன் வைத்திருக்கின்றான்.

பாடல் #429

பாடல் #429: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

பாழே முதலா எழும்பயிர் அவ்விடம்
பாழே அடங்கினும் பண்டைப்பாழ் ஆகாவாம்
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.

விளக்கம்:

சேற்றுச் சகதியில் விதைத்த விதை அந்தச் சகதியையே ஆதாரமாகக் கொண்டு அதனிடமிருந்து வெளிப்பட்டு பயிராக மேலெழும்பி வருவதைப் போல அனைத்திற்கும் பழைமையான இறைவனிடமிருந்து அவனையே முதலாகக் கொண்டு அவனிடமிருந்து வெளிப்பட்டு உலகத்தில் கருவாக வந்து பிறக்கின்றது ஆன்மா. விளைந்த பயிர் பயன்படுத்தப்பட்ட பிறகு அழிந்து திரும்பவும் மண்ணோடு மண்ணாகவே ஆகிவிட்டாலும் அது எப்படி முன்பு விதைத்த விதைக்குள் மீண்டும் போய் சேர முடியாதோ அதுபோலவே உலகத்தில் கருவாக வந்து பிறந்த ஆன்மா உலகத்தில் வாழ்ந்து இறந்த பிறகும் திரும்பவும் இறைவனிடமே சென்று சேர்ந்துவிட முடியாது. இதனாலேயே ஆன்மாவுக்குத் தனித்த வாழ்வு என்பது இல்லாத சங்காரச் சுழற்சியில் தள்ளப்பட்டு மீண்டும் பிரம்மனால் கருவாக பிறந்து திருமாலால் காக்கப்பட்டு வளர்ந்து மறுபடியும் சங்காரத்தில் இறந்து கொண்டே இருக்கும். எப்போது மண்ணில் பிறந்த பயிர் மண்ணிலே கலந்து அந்த மண்ணும் ஒரு நாள் மறைந்து போகின்றபோது அந்தப் பயிரின் தடயமே அழிந்து போய்விடுவது போல உலகத்தில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இறக்கும் ஆன்மா எப்போது வினைகளை முடித்துத் தான் என்கிற தடயத்தை (ஆணவ மலம்) முற்றிலும் துறந்து மாயைகளை நீக்கி உண்மையை உணருகின்றதோ அப்போது அது தோன்றிய இறைவனிடமே சென்று அடங்கிவிடும்.

உட்கருத்து: ஆன்மாவைப் பயிராகவும் இறைவனை சகதியாகவும் உருவகிக்கும் திருமூலர் இந்த உவமையின் மூலம் சங்காரத்தின் தத்துவமும் அது ஏன் நிகழ்கிறது என்கிற விளக்கத்தையும் தந்து அருளுகிறார். இறைவனிடமிருந்து முதலில் தோன்றிய ஆன்மா உலகத்தில் பிறவி எடுத்து வினையினால் பிறவிச் சுழலில் சிக்கித் தன் வினைகளையெல்லாம் முடித்துவிட்டு பிறகு இறைவனிடமே வந்து அடங்கிவிடுவதே சங்காரத்தின் தத்துவமும் அதன் பயனுமாகும்.

பாடல் #430

பாடல் #430: இரண்டாம் தந்திரம் – 11. சங்காரம் (வினையின் படி நன்மைக்காக அழித்தல்)

தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயம்வைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாயுணர்வு ஆரவைத் தானே.

விளக்கம்:

இறைவனிடமிருந்து தோன்றிய ஆன்மா தனது ஆசைகளை அனுபவித்துத் தீர்த்துக் கொள்ள செய்யும் செயலினால் சேரும் வினைகளைத் தீர்க்க மாயையை வைத்து அந்த வினைகள் தீர உடலையும் ஆன்மாவிற்கு கொடுத்துப் பிறவி எடுக்க வைக்கின்றான். பிறவி எடுத்த ஆன்மா வினைச் சுழலில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது என்கிற கருணையினால் உலகத்திலுள்ள அனைத்திலும் கலந்து இருக்கும் இறைவன் தன்னை அடையும் வழிகள் அறிந்த கலந்து குருவாய் இருக்கும் அடியார்களோடு சேர வைத்து தன்னை எப்போதும் நினைக்கக் கூடிய எண்ணத்தை வைக்கின்றான். இறைவனின் சிந்தனையிலேயே இருப்பதால் மாயை அழிந்து நான் என்கின்ற அகங்காரம் அழிந்து ஆன்மா மீண்டும் தம்மை வந்து அடையும் மெய்யுணர்வு வரச் செய்கிறான் இறைவன்.

பாடல் #419

பாடல் #419: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

தாங்கருந் ..தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணியன் தானே.

விளக்கம்:

பல்வேறு விதமான உயிர்களுக்கும் அவற்றின் உடலுக்குள் இருந்து உயிரைத் தாங்கும் தன்மையாக இருக்கும் இறைவனே அவை அழியும் காலத்தில் உள்ளிருந்து வெளியே வரும் உயிரை வாங்குகின்றவனாகவும் இருக்கின்றான். அவனைத் தவிர உயிர்களைத் தாங்கவும் வாங்கவும் அருள் செய்யும் தெய்வம் வேறு ஒன்று இல்லை. இப்படி ஏழு உலகங்களையும் அதிலிருக்கும் அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கின்ற இறைவனே அதைத் தாண்டிய விண்ணுலகத்தையும் தாங்கி நிற்கின்றான். அவனே உயிர்கள் தமது பிறவிச் சூழலிலிருந்து விடுபட்டு விண்ணுலகம் அடைய வழியாக யோக முறைகளையும் அருளி அந்த முறைகளைப் பின்பற்றி வரும் உயிர்களின் வழிமுழுவதும் அவற்றைக் காத்தும் அருளுகின்றான்.

பாடல் #420

பாடல் #420: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணியினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணியினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.

விளக்கம்:

அனைத்து உயிர்களின் உள்ளுக்குள்ளும் இறைவன் இருந்தாலும் அவனை அறிந்து கொள்ள முடியாதபடி மாயையால் மறைக்கப்பட்டு இருக்கின்றான். அவனை மூச்சுக்காற்றின் மூலம் குண்டலினியை மேலெழுப்பி சகஸ்ரர தளத்தில் கொண்டு சேர்த்துவிட்டால் பேரறிவு ஞானத்தைத் தந்து அருளுவான். அதன் மூலம் பிறவிச் சுழற்சியை அறுத்து முக்தி பெறலாம். இறைவனை எவ்வளவு தான் பணிந்து தொழுதாலும் ஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உலக ஆசைகளோடு இருந்தால் உலகத்தில் பல்வேறு விதமான உயிர்களாக உடலெடுத்துப் பிறந்து அழிந்தாலும் மீண்டும் மீண்டும் மண்ணுலகத்தில் உடல் பெறவே செய்வான் உலகத்தின் தலைவனாகிய இறைவன்.