பாடல் #713

பாடல் #713: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்
காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்
காக்கலு மாகுங் கருத்துற நிற்றலே.

விளக்கம்:

உலக விஷயங்களை எண்ணாமல் ஒளி உருவமான இறைவனின் மேல் எப்போதும் எண்ணத்தை வைத்திருந்தால் இறைவனின் திருவருள் நமது நான்கு அந்தக்கரணங்களையும், பதினாறு கலைகளையும், மூச்சுக்காற்றோடு என்றும் கலந்து நின்று காத்தருளும்.

கருத்து: இறைவனின் மேல் எண்ணம் வைத்து தியானிப்பவர்களை இறையருள் அனைத்திலிருந்தும் காத்து அருளும்.

நான்கு அந்தக்கரணங்கள்:

  1. மனம்
  2. புத்தி
  3. சித்தம்
  4. அகங்காரம்

பதினாறு கலைகள் (நாடிகள்):

  1. மேதைக்கலை
  2. அருக்கீசக்கலை
  3. விடக்கலை
  4. விந்துக்கலை
  5. அர்த்தசந்திரன் கலை
  6. நிரோதினிக்கலை
  7. நாதக்கலை
  8. நாதாந்தக்கலை
  9. சக்திக்கலை
  10. வியாபினிக்கலை
  11. சமனைக்கலை
  12. உன்மனைக்கலை
  13. வியோமரூபினிக்கலை
  14. அனந்தைக்கலை
  15. அனாதைக்கலை
  16. அனாசிருதைக்கலை

1. மேதைக்கலை தொப்புள் முதல் மார்பு நடு இதயம் வரை இருக்கும்

2. அருக்கீசக்கலை இதயம் முதல் தொண்டைக்குழிவரை இருக்கும்.

3. விடக்கலை தொண்டை முதல் நாக்கின் அடிவரை இருக்கும்.

4. விந்துக்கலை நாக்கினடி முதல் புருவ நடுவரை இருக்கும்.

5. அர்த்தசந்திரக்கலை புருவநடு முதல் உச்சித்துளைவரை இருக்கும்.

6. நிரோதினிக்கலை,

7. நாதக்கலை,

8. நாதாந்தகலை ஆகிய மூன்றும் சம அளவில் பரவியிருக்கும்.

9. சக்திக்கலை,

10. வியாபினிக்கலை,

11. சமனைக்கலை,

12. உன்மனைக்கலை, ஆகிய  நான்கும் 12 விரல் அளவில் பரவியிருக்கும்.

13. வியோமரூபிணிக் கலை

14. அனந்தைக் கலை

15. அனாதைக் கலை,

16. அனாசிருதைக் கலை சமனைக்கும் வியாபினிக்கும் நடுவே இருக்கும்.

பாடல் #712

பாடல் #712: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
காதல் வழிசெய்து காக்குவது மாமே.

விளக்கம்:

தன்னை அடைவதற்கு உண்மையான அன்பை வழியாக வைத்த நெற்றிக்கண்ணையுடைய இறைவனை உண்மையான அன்போடு இருகண்களுக்கு நடுவே இருக்கும் சுழுமுணை நாடியின் உச்சியை நோக்கி தியானத்தில் இருந்தால் தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒளிப்பிரவாகமாக வீற்றிருக்கும் இறைவனைச் சென்றடையும் வழி கிடைக்கும். அந்த வழியை அன்போடு பின்பற்றி அடைந்து விட்டால் எப்போதும் பேரின்பத்தில் திளைத்து என்றும் அழியாமல் இறையருள் காத்து நிற்கும்.

கருத்து: நாடிகளின் வழியே இறைவனை அடைவதற்கு உண்மையான அன்பு ஒன்றே வழியாகும்.