பாடல் #1742

பாடல் #1742: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

நாணுநல் லீசானம் நடுவுச்சி தானாகுந்
தாணுவின் றன்முகந் தற்புருட மாகுங்
காணு மகோர மிருதையங் குய்யமாம்
வாணுறு வாமமாஞ் சத்திநற் பாதமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாணுநல லீசானம நடுவுசசி தானாகுந
தாணுவின றனமுகந தறபுருட மாகுங
காணு மகொர மிருதையங குயயமாம
வாணுறு வாமமாஞ சததிநற பாதமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாணு நல் ஈசானம் நடு உச்சி தான் ஆகும்
தாணுவின் தன் முகம் தற்புருடம் ஆகும்
காணும் அகோரம் இருதையம் குய்யம் ஆம்
வாண் உறு வாமம் ஆம் சத்தி நல் பாதமே.

பதப்பொருள்:

நாணு (அறிவு வடிவமாக) நல் (நன்மையைக் கொடுக்கின்ற) ஈசானம் (இறைவனின் ஈசான முகமானது) நடு (நடுவில்) உச்சி (உச்சியாக இருக்கின்ற) தான் (இறைவியின் தலை உச்சி) ஆகும் (ஆகும்)
தாணுவின் (முக்தியாகிய நிலை பேற்றை கொடுக்கின்ற) தன் (இறைவியின்) முகம் (திருமுகமே) தற்புருடம் (இறைவனது தற்புருடமாகிய திருமுகம்) ஆகும் (ஆகும்)
காணும் (கண்களால் அருளைக் கொடுக்கின்ற) அகோரம் (இறைவனின் அகோர முகமானது) இருதையம் (இறைவியின் இருதயமாகும்) குய்யம் (இறைவியின் கீழ்) ஆம் (பகுதியாக இருப்பது)
வாண் (அமிழ்தம் பெற்று) உறு (மேல் நிலையைக் கொடுக்கின்ற) வாமம் (இறைவனின் வாமதேவ முகம்) ஆம் (ஆகும்) சத்தி (இறைவனின் சத்தியோசாத முகமானது) நல் (நன்மையைக் கொடுக்கின்ற) பாதமே (இறைவியின் திருவடிகளாகும்).

விளக்கம்:

இறைவனின் ஐந்து திருமுகங்களோடு பாடல் #1741 இல் உள்ளபடி இறைவி சென்று சேரும்போது அறிவு வடிவமாக இருக்கின்ற இறைவனின் ஈசான முகம் இறைவியின் தலை உச்சியாகவும், முக்தியாகிய நிலை பேற்றைக் கொடுக்கின்ற இறைவனது தற்புருட முகம் இறைவியின் திருமுகமாகவும், கண்களால் அருளைக் கொடுக்கின்ற இறைவனின் அகோர முகம் இறைவியின் இருதயமாகவும், அமிழ்தம் பெற்று மேல் நிலையைக் கொடுக்கின்ற இறைவனின் வாமதேவ முகம் இறைவியின் கீழ் பகுதியாகவும், நன்மையைக் கொடுக்கின்ற இறைவனின் சத்தியோசாத முகம் இறைவியின் திருவடிகளாகவும் விளங்கும்.

பாடல் #1744

பாடல் #1744: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

எண்ணி லிதைய மிறைஞான சத்தியாம்
விண்ணிற் பரசிர மிக்க சிகையாகி
வண்ணக் கவசம் வனப்புடை யிச்சையாம்
பண்ணுங் கிரிகை பரநேத்திரத் திலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எணணி லிதைய மிறைஞான சததியாம
விணணிற பரசிர மிகக சிகையாகி
வணணக கவசம வனபபுடை யிசசையாம
பணணுங கிரிகை பரநெததிரத திலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எண்ணில் இதையம் இறை ஞான சத்தி ஆம்
விண்ணில் பரம் சிரம் மிக்க சிகை ஆகி
வண்ண கவசம் வனப்பு உடை இச்சை ஆம்
பண்ணும் கிரிகை பர நேத்திரத்திலே.

பதப்பொருள்:

எண்ணில் (ஆராய்ந்து பார்த்தால்) இதையம் (இதயமானது) இறை (இறைவனின்) ஞான (ஞான) சத்தி (சக்தி) ஆம் (ஆகும்)
விண்ணில் (ஆகாயத்தில் இருக்கின்ற) பரம் (பரம்பொருளின் உறுப்புகளான) சிரம் (தலையும்) மிக்க (அதன் மேலுள்ள) சிகை (திருமுடியும்) ஆகி (ஆகி)
வண்ண (பல வண்ணமுள்ள) கவசம் (கவசம்) வனப்பு (செழுமையான) உடை (உடை) இச்சை (இச்சா சக்தி) ஆம் (ஆகும்)
பண்ணும் (செய்கின்ற) கிரிகை (அனைத்து தொழில்களும் கிரியா சக்தியாக) பர (பரம்பொருளின்) நேத்திரத்திலே (திருவருள் கண்ணால் செயல் படுவதாகும்).

விளக்கம்:

இறைவனின் மூன்று விதமான சக்திகளானது எப்படி இருக்கின்றது என்று ஆராய்ந்து பார்த்தால் இதயமானது இறைவனின் ஞான சக்தியாக இருக்கின்றது. இறைவனின் தலையும் அதன் மேலுள்ள திருமுடியும் பல வண்ணங்களுள்ள கவசமும் செழுமையான உடையும் இச்சா சக்தியாக இருக்கின்றது. இறைவனின் திருவருள் கண்களே கிரியா சக்தியாக இருக்கின்றது.

பாடல் #1745

பாடல் #1745: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

சத்திநாற் கோணஞ் சலமுற்று நின்றிடுஞ்
சத்தியறு கோணஞ் சயனத்தை யுற்றிடுஞ்
சத்திநால் வட்டஞ் சலமுற் றிருந்திடுஞ்
சத்தியுரு வாஞ் சதாசிவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததிநாற கொணஞ சலமுறறு நினறிடுஞ
சததியறு கொணஞ சயனததை யுறறிடுஞ
சததிநால வடடஞ சலமுற றிருநதிடுஞ
சததியுரு வாஞ சதாசிவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி நால் கோணம் சலம் உற்று நின்றிடும்
சத்தி அறு கோணம் சயனத்தை உற்றிடும்
சத்தி நால் வட்டம் சலம் உற்று இருந்திடும்
சத்தி உரு ஆம் சதா சிவம் தானே.

பதப்பொருள்:

சத்தி (சக்தி வடிவானது) நால் (நான்கு) கோணம் (கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில்) சலம் (தண்ணீர் போல) உற்று (தன்மைக்கு ஏற்ப நிறைந்து இருக்கும்) நின்றிடும் (ஞான சக்தியாக நின்றிடும்)
சத்தி (சக்தி வடிவானது) அறு (ஆறு) கோணம் (கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில்) சயனத்தை (சயன நிலையில் படுத்து கிடக்கும்) உற்றிடும் (இச்சா சக்தியாக வீற்றிருக்கும்)
சத்தி (சக்தி வடிவானது) நால் (நான்கு) வட்டம் (வட்டங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில்) சலம் (மேக நீரைப் போல சுழன்று கொண்டே இருக்கின்ற) உற்று (கிரியா சக்தியாக) இருந்திடும் (இருந்திடும்)
சத்தி (இப்படி மூன்று வகையாக இருக்கின்ற சக்தியின்) உரு (இலிங்க வடிவங்கள்) ஆம் (ஆக இருப்பது) சதா (சதா) சிவம் (சிவமூர்த்தி) தானே (ஆகும்).

விளக்கம்:

பாடல் #1744 இல் உள்ளபடி மூன்று சக்திகளின் வடிவானது இலிங்க வடிவத்தில் அமையும் போது நான்கு கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில் தண்ணீர் போல தன்மைக்கு ஏற்ப நிறைந்து இருக்கும் ஞான சக்தியாக நின்றிடும். ஆறு கோணங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில் சயன நிலையில் படுத்து கிடக்கும் இச்சா சக்தியாக வீற்றிருக்கும். நான்கு வட்டங்கள் அமைந்த இலிங்க வடிவத்தில் மேக நீரைப் போல சுழன்று கொண்டே இருக்கின்ற கிரியா சக்தியாக இருந்திடும். இப்படி மூன்று வகையாக இருக்கின்ற சக்தியின் இலிங்க வடிவங்களாக இருப்பது சதா சிவமூர்த்தி ஆகும்.

கருத்து:

ஞான சக்தியானது அடியவரின் மனப் பக்குவத்துக்கு ஏற்றபடி இலிங்க வடிவத்தில் வெளிபட்டு அருளுவார். இச்சா சக்தியானது மனதின் ஆசைகளுக்கு ஏற்றபடி இலிங்க வடிவத்தில் வெளிபட்டு அருளுவார். கிரியா சக்தியானது மேகத்திலிருந்து மழையாகப் பொழிகின்ற நீர் மீண்டும் ஆவியாகி மேகத்தில் சென்று அடைவது போல அடியவரின் பிறவி சுழற்சியில் வினைகளின் படி அனுபவிக்கின்ற நன்மை தீமைகளை செயல் படுத்தி அருளுவார்.

பாடல் #1746

பாடல் #1746: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

மாநந்தி யெத்தனை கால மழைக்கினுந்
தானந்தி யஞ்சின் றனிச்சுடராய் நிற்குங்
கானந்தி யுந்திக் கடந்து கமலத்தின்
மேனந்தி யொன்பதின் மேவிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மாநநதி யெததனை கால மழைககினுந
தானநதி யஞசின றனிசசுடராய நிறகுங
கானநதி யுநதிக கடநது கமலததின
மெனநதி யொனபதின மெவிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மா நந்தி எத்தனை காலம் அழைக்கினும்
தான் நந்தி அஞ்சின் தனி சுடர் ஆய் நிற்கும்
கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின்
மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே.

பதப்பொருள்:

மா (மாபெரும்) நந்தி (குருநாதராகிய இறைவனை) எத்தனை (எத்தனை) காலம் (காலங்காலமாக) அழைக்கினும் (வேண்டி தொழுதாலும்)
தான் (தமக்குள்ளே இருக்கின்ற) நந்தி (குருநாதராகிய இறைவன்) அஞ்சின் (ஒளிமயமாகிய வடிவத்தில்) தனி (தனி) சுடர் (சுடர்) ஆய் (ஆகவே) நிற்கும் (நின்று வெளிப்படுவார்)
கால் (மூச்சுக்காற்றை) நந்தி (குருநாதர் காட்டிய வழியில்) உந்தி (வயிற்றைக்) கடந்து (கடந்து மூலாதாரத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள மூலாக்கினியை எழுப்பி சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி கொண்டு சென்று) கமலத்தின் (ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் கொண்டு சேர்த்து)
மேல் (அதற்கு மேல் ஜோதியாக வீற்றிருக்கும்) நந்தி (குருநாதராகிய இறைவனுடன்) ஒன்பதின் (சகஸ்ரதளத்தை தாண்டி எட்டாவது துவாத சாந்த வெளியும் அதையும் தாண்டிய ஒன்பதாவது பர வெளியாகிய சந்திர மண்டம் வரை சென்று) மேவி (இந்த ஒன்பது சக்கரங்களிலும் முழுவதுமாக அவர் நிறைந்து) நின்றானே (நிற்பதுவே சதாசிவ இலிங்கமாகும்).

விளக்கம்:

மாபெரும் குருநாதராகிய இறைவனை எத்தனை காலங்காலமாக வேண்டி தொழுதாலும் தமக்குள்ளே இருக்கின்ற குருநாதராகிய இறைவன் ஒளிமயமாகிய வடிவத்தில் தனி சுடராகவே நின்று வெளிப்படுவார். மூச்சுக்காற்றை குருநாதர் காட்டிய வழியில் வயிற்றைக் கடந்து மூலாதாரத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள மூலாக்கினியை எழுப்பி, சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி கொண்டு சென்று, ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் கொண்டு சேர்த்து, அதற்கு மேல் ஜோதியாக வீற்றிருக்கும் குருநாதராகிய இறைவனுடன் சகஸ்ரதளத்தை தாண்டி எட்டாவது துவாத சாந்த வெளியும், அதையும் தாண்டிய ஒன்பதாவது பர வெளியாகிய சந்திர மண்டலம் வரை சென்று, இந்த ஒன்பது சக்கரங்களிலும் முழுவதுமாக அவர் நிறைந்து நிற்பதுவே சதாசிவ இலிங்கமாகும்.

பாடல் #1747

பாடல் #1747: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஒன்றிய வாறு முடலினுடன் கிடந்
தென்று மெம்மீச னடக்கு மியல்வது
தென்ற லைத்தேறத் திருந்துஞ் சிவனடி
நின்று தொழுதேனென் னெஞ்சத்தி னுள்ளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒனறிய வாறு முடலினுடன கிடந
தெனறு மெமமீச னடககு மியலவது
தெனற லைததெறத திருநதுஞ சிவனடி
நினறு தொழுதெனென னெஞசததி னுளளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒன்றிய ஆறும் உடலின் உடன் கிடந்து
என்றும் எம் ஈசன் அடக்கும் இயல்பு அது
தென் தலை தேற திருந்தும் சிவன் அடி
நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே.

பதப்பொருள்:

ஒன்றிய (இறையருளால் ஒன்றாக செயல்படுகின்ற) ஆறும் (ஆறு சக்கரங்களும்) உடலின் (உடல்) உடன் (உடன்) கிடந்து (சேர்ந்து கிடந்து)
என்றும் (எப்போதும்) எம் (எம்பெருமான்) ஈசன் (இறைவன்) அடக்கும் (தமக்குள் அடங்கி இருக்கின்ற) இயல்பு (இயல்பான) அது (தன்மையாகிவிடும்)
தென் (அழகிய) தலை (தலையில் உடையவனாகிய இறைவனை) தேற (தமக்குள் முழுவதும் உணர்ந்து தெளிவு பெற) திருந்தும் (தீய மலங்களை திருத்தி நன்மையை அருளுகின்ற) சிவன் (இறைவனின்) அடி (திருவடியை)
நின்று (நின்று) தொழுதேன் (வணங்கித் தொழுதேன்) என் (எமது) நெஞ்சத்தின் (நெஞ்சத்தின்) உள்ளே (உள்ளே).

விளக்கம்:

இறையருளால் ஒன்றாக செயல்படுகின்ற ஆறு சக்கரங்களும் உடலோடு சேர்ந்து கிடந்து எப்போதும் எம்பெருமான் இறைவன் தமக்குள் அடங்கி இருக்கின்ற இயல்பான தன்மையாகிவிடும். அதன் பிறகு அழகிய தலையில் உடையவனாகிய இறைவனை தமக்குள் முழுவதும் உணர்ந்து தெளிவு பெற தீய மலங்களை திருத்தி நன்மையை அருளுகின்ற இறைவனின் திருவடியை நின்று வணங்கித் தொழுதேன் எமது நெஞ்சத்தின் உள்ளே.

குறிப்பு:

தென் தலையை அழகிய தலை என்று சொல்லப்படுவதன் காரணம் ஆறு சக்கரங்களும் ஒன்றாக சேர்ந்த பிறகு சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர் விரிவடைந்து அதிலிருந்து வெளிப்படுகின்ற ஜோதி வடிவான இறை சக்தியானது கொன்றை மலரின் வாசனையை வெளிப்படுத்துவதால் ஆகும்.

பாடல் #1748

பாடல் #1748: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

உணர்ந்தே னுலகினி லொண் பொருளானைக்
குணர்ந்தேன் குவலையங் கோயிலென் னெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டு மொலியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணரநதெ னுலகினி லொண பொருளானைக
குணரநதென குவலையங கொயிலென னெஞசம
புணரநதென புனிதனும பொயயலல மெயயெ
பணிநதென பகலவன பாடடு மொலியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உணர்ந்தேன் உலகினில் ஒண் பொருளானை
கொணர்ந்தேன் குவலையம் கோயில் என் நெஞ்சம்
புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே.

பதப்பொருள்:

உணர்ந்தேன் (எமக்குள்ளே உணர்ந்தேன்) உலகினில் (உலகமெங்கும் உள்ள) ஒண் (அனைத்து பொருளிலும் ஒன்றாக கலந்து இருக்கின்ற) பொருளானை (மாபெரும் பொருளாகிய இறைவனை)
கொணர்ந்தேன் (கொண்டு வந்தேன்) குவலையம் (உலகமெல்லாம் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவன்) கோயில் (வீற்றிருக்கின்ற கோயிலாகிய) என் (எமது) நெஞ்சம் (நெஞ்சத்துக்குள்ளே)
புணர்ந்தேன் (ஒன்றாக கலந்து விட்டேன்) புனிதனும் (எமக்குள் கோயில் கொண்ட புனிதனாகிய இறைவனை) பொய் (இது பொய்) அல்ல (இல்லை) மெய்யே (உண்மையே ஆகும்)
பணிந்தேன் (பணிந்து தொழுதேன்) பகலவன் (அனைத்து உலகத்திற்கும் வெளிச்சம் கொடுப்பவனாகிய இறைவனை) பாட்டும் (அப்போது எமக்குள்ளிருந்து பாடல்களாகவும்) ஒலியே (ஒலியாகவும் இருக்கின்ற தனது நாத வடிவமாகிய நடராஜ தத்துவமாக அவன் வெளிப்பட்டான்).

விளக்கம்:

உலகமெங்கும் உள்ள அனைத்து பொருளிலும் ஒன்றாக கலந்து இருக்கின்ற மாபெரும் பொருளாகிய இறைவனை பாடல் #1747 இல் உள்ளபடி எமக்குள்ளே உணர்ந்தேன். உலகமெல்லாம் பரந்து விரிந்து இருக்கின்ற இறைவன் வீற்றிருக்கும் கோயிலாக எமது நெஞ்சத்துக்குள்ளே அவனை கொண்டு வந்தேன். அவ்வாறு எமக்குள் கோயில் கொண்ட புனிதனாகிய இறைவனோடு ஒன்றாக கலந்து விட்டேன். இது பொய் இல்லை உண்மையே ஆகும். எமக்குள்ளிருந்தே அனைத்து உலகத்திற்கும் வெளிச்சம் கொடுப்பவனாகிய இறைவனை பணிந்து தொழுதேன். அப்போது எமக்குள்ளிருந்து பாடல்களாகவும் ஒலியாகவும் இருக்கின்ற தனது நாத வடிவமாகிய நடராஜ தத்துவமாக அவன் வெளிப்பட்டான்.

பாடல் #1749

பாடல் #1749: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஆங்கவை மூன்றினு மாரழல் வீசிடத்
தாங்கிடு மீரேழுந் தானடு வானதி
லோங்கிய வாதியு மந்தமு மாமென
வீங்கிவை தம்முட லிந்துவு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆஙகவை மூனறினு மாரழல வீசிடத
தாஙகிடு மீரெழுந தானடு வானதி
லொஙகிய வாதியு மநதமு மாமென
வீஙகிவை தமமுட லிநதுவு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட
தாங்கிடும் ஈர் ஏழும் தான் நடு வான் அதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம் என
ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே.

பதப்பொருள்:

ஆங்கு (அண்ட) அவை (சராசரங்களில்) மூன்றினும் (உள்ள அனைத்து உலகங்களாகவும் அதற்கு மேலாகவும் கீழாகவும் ஆகிய மூன்றிலும்) ஆர் (முழுவதுமாய் நிறைந்து இருக்கின்ற) அழல் (மாபெரும் தீயாக) வீசிட (வீசிக்கொண்டு இருக்க)
தாங்கிடும் (தாம் தாங்கிக் கொண்டு இருக்கின்ற) ஈர் (இரண்டும்) ஏழும் (ஏழும் பெருக்கி வரும் மொத்தம் பதினான்கு உலகங்களுக்கும்) தான் (தானே) நடு (நடுவனாக) வான் (ஆகாய தத்துவத்தில்) அதில் (அங்கே)
ஓங்கிய (ஓங்கி விளங்குகின்ற) ஆதியும் (அனைத்திற்கும் ஆதியும்) அந்தமும் (அனைத்திற்கும் முடிவும்) ஆம் (ஆக) என (இருப்பது தாமே எனவும்)
ஈங்கு (இங்கு) இவை (உள்ள அனைத்தையும்) தம் (தம்) உடல் (உடலுக்குள்ளே கொண்டு) இந்துவும் (சந்திரனைப் போல குளிர்ச்சியாகவும்) ஆமே (இருக்கின்றது).

விளக்கம்:

பாடல் #1748 இல் உள்ளபடி தமக்குள்ளிருந்து நாத வடிவாக வெளிப்படுகின்ற நடராஜ வடிவ தத்துவமானது, அண்ட சராசரங்கள் அதற்கும் மேல் அதற்கும் கீழ் என்று மூன்று இடங்களிலும் முழுவதுமாக நிறைந்து நிற்கின்ற மாபெரும் தீயாகவும், ஈரேழு பதினான்கு உலகங்களையும் தாங்கிக் கொண்டும், அனைத்திற்கும் நடுவாகிய ஆகாய தத்துவமாகவும், அனைத்தையும் தாண்டி ஓங்கி விளங்குவதாகவும், அனைத்திற்கும் ஆதியாகவும், அனைத்திற்கும் முடிவாகவும், இப்படி இங்கு உள்ள அனைத்தையும் தம் உடலுக்குள்ளே கொண்டு சந்திரனைப் போல குளிர்ச்சியாகவும் இருக்கின்றது.

பாடல் #1750

பாடல் #1750: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

தன்மேனி தான்சிவ லிங்கமாய் நின்றிடுந்
தன்மேனி தானுஞ் சதாசிவமாய் நிற்குந்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாந்
தன்மேனியில் தானாகுந் தற்பரந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தனமெனி தானசிவ லிஙகமாய நினறிடுந
தனமெனி தானுஞ சதாசிவமாய நிறகுந
தனமெனி தறசிவன தறசிவா னநதமாந
தனமெனியில தானாகுந தறபரந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தன் மேனி தான் சிவ இலிங்கம் ஆய் நின்றிடும்
தன் மேனி தானும் சதா சிவம் ஆய் நிற்கும்
தன் மேனி தன் சிவன் தன் சிவ ஆனந்தம் ஆம்
தன் மேனியில் தான் ஆகும் தற் பரம் தானே.

பதப்பொருள்:

தன் (அடியவரின்) மேனி (உடல்) தான் (தானே) சிவ (சிவ) இலிங்கம் (இலிங்கம்) ஆய் (ஆக) நின்றிடும் (நிற்கும்)
தன் (அடியவரின்) மேனி (உடல்) தானும் (தமக்குள் இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து தாமும்) சதா (சதா) சிவம் (சிவப் பரம் பொருள்) ஆய் (ஆக) நிற்கும் (நிற்கும்)
தன் (அடியவரின்) மேனி (உடல்) தன் (தனது) சிவன் (சிவனாகவும்) தன் (தன்னுடைய) சிவ (சிவ) ஆனந்தம் (பேரின்பமாகவும்) ஆம் (ஆகும்)
தன் (அடியவரின்) மேனியில் (உடலில்) தான் (தானே) ஆகும் (ஆகி நிற்பது) தற் (தானாகவே எப்போதும் இருக்கின்ற) பரம் (பரம்பொருள்) தானே (ஆகும்).

விளக்கம்:

பாடல் #1749 இல் உள்ளபடி அண்ட சராசரங்களாகவும் அனைத்துமாகவும் இருக்கின்ற நடராஜ தத்துவத்தை தமக்குள்ளே உணர்ந்து கொண்ட அடியவரின் உடலானது தானே சிவ இலிங்கமாக நிற்கும். அடியவர் தமக்குள் இருக்கின்ற இறைவனோடு சேர்ந்து தாமும் சதாசிவப் பரம் பொருளாகவே நிற்பார். அடியவர் தனது உடலே சிவனாகவும், தன்னுடைய உடலுக்குள்ளேயே சிவ பேரின்பமாகவும் ஆகி விடுவார். இவ்வாறு அடியவரின் உடல் தானே ஆகி நிற்பது தானாகவே எப்போதும் இருக்கின்ற பரம்பொருள் ஆகும்.

பாடல் #1743

பாடல் #1743: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

நெஞ்சு சிரஞ்சிகை நீள்கவசங் கண்ணாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாஞ்
செஞ்சுறு செஞ்சுடர்கே சரி மின்னாகுஞ்
செஞ்சுடர் போலுந் தேசாயுதந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெஞசு சிரஞசிகை நீளகவசங கணணாம
வஞசமில விநது வளரநிறம பசசையாஞ
செஞசுறு செஞசுடரகெ சரி மினனாகுஞ
செஞசுடர பொலுந தெசாயுதந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண் ஆம்
வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சை ஆம்
செம் உறு செம் சுடர்கே சரி மின் ஆகும்
செம் சுடர் போலும் தெசு ஆயுதம் தானே.

பதப்பொருள்:

நெஞ்சு (மார்பு) சிரம் (தலை) சிகை (தலைமுடி) நீள் (நீண்ட) கவசம் (கவசம்) கண் (கண்கள்) ஆம் (ஆகிய இறைவனின் ஐந்து உறுப்புகளாகும்)
வஞ்சம் (இவை ஒரு தீமையும்) இல் (இல்லாத) விந்து (ஒளி உருவமாக) வளர் (எப்போதும் வளர்ந்து கொண்டே) நிறம் (இருக்கின்ற நிறம்) பச்சை (பசுமையாக நன்மையை அருளுவதை) ஆம் (குறிப்பது ஆகும்)
செம் (இறைவனின் செழுமை) உறு (உற்று இருக்கும்) செம் (சிகப்பான திருமேனியாகிய) சுடர்கே (சுடர் ஒளிக்கு) சரி (சரிசமமாக இருப்பது) மின் (இறைவியின் ஒளி உருவம்) ஆகும் (ஆகும்)
செம் (சிகப்பான) சுடர் (சுடர்) போலும் (போல) தெசு (பிரகாசமான ஒளி பொருந்தி இருக்கின்ற உறுப்புகள்) ஆயுதம் (தீமையை அழிக்கும் ஆயுதங்கள்) தானே (ஆக இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனின் ஐந்து உறுப்புகளாகிய மார்பு, தலை, தலைமுடி, நீண்ட கவசம், கண்கள் ஆகியவை ஒரு தீமையும் இல்லாத ஒளி உருவமாக எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. அவற்றின் பச்சை நிறம் பசுமையாக நன்மையை அருளுவதை குறிப்பது ஆகும். இறைவனின் செழுமை உற்று இருக்கும் சிகப்பான திருமேனியாகிய சுடர் ஒளிக்கு சரிசமமாக இருப்பது இறைவியின் ஒளி உருவம் ஆகும். சிகப்பான சுடர் போல பிரகாசமான ஒளி பொருந்தி இருக்கின்ற உறுப்புகள் தீமையை அழிக்கும் ஆயுதங்களாக இருக்கின்றது.

பாடல் #1751

பாடல் #1751: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஆரு மறியா ரகார மதாவது
பாரு முகாரம் பகுந்திட்ட நாடிலத்
தார மிரண்டுந் தரணி முழுதுமாய்
மாறி யெழுந்திடு மோசைய தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆரு மறியா ரகார மதாவது
பாரு முகாரம பகுநதிடட நாடிலத
தார மிரணடுந தரணி முழுதுமாய
மாறி யெழுநதிடு மொசைய தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆரும் அறியார் அகாரம் அது ஆவது
பாரும் உகாரம் பகுந்து இட்ட நாடில் அத்
தாரம் இரண்டும் தரணி முழுதும் ஆய்
மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே.

பதப்பொருள்:

ஆரும் (சாதகத்தின் மூலம் தமக்குள்ளிருக்கும் இறைவனை உணராத எவரும்) அறியார் (அறிந்து கொள்ள மாட்டார்கள்) அகாரம் (ஓங்காரத்தில் இருக்கின்ற ‘அ’காரம் எனும்) அது (அருளாக) ஆவது (இருப்பது எது என்று)
பாரும் (உலகத்திலும்) உகாரம் (ஓங்காரத்தில் இருக்கின்ற ‘உ’காரம் எனும் அருளை) பகுந்து (பிரித்து) இட்ட (வகுத்துக் கொடுத்த இறை சக்தியை) நாடில் (தமக்குள் தேடி உணர்ந்தால்) அத் (அது)
தாரம் (பிரணவமாக உள்ளுக்குள் இறை சக்தியாகவும் வெளியிலும் இறை சக்தியாகவும் என்று) இரண்டும் (இரண்டுமாக) தரணி (உலகம்) முழுதும் (முழுவதற்கும் நிறைந்து) ஆய் (நிற்பதாய்)
மாறி (தமக்குள்ளிருந்தே மாறி) எழுந்திடும் (எழுந்திடும்) ஓசை (நாதம்) அது (அதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

சாதகத்தின் மூலம் தமக்குள்ளிருக்கும் இறைவனை உணராத எவரும் ஓங்காரத்தில் இருக்கின்ற ‘அ’காரம் எனும் அருளாக இருப்பது எது என்று அறிந்து கொள்ள மாட்டார்கள். உலகத்திலும் ஓங்காரத்தில் இருக்கின்ற ‘உ’காரம் எனும் அருளை பிரித்து வகுத்துக் கொடுத்த இறை சக்தியை தமக்குள் தேடி உணர்ந்தால் அது பிரணவமாக உள்ளுக்குள் இறை சக்தியாகவும், வெளியிலும் இறை சக்தியாகவும், என்று இரண்டுமாக உலகம் முழுவதற்கும் நிறைந்து நிற்பதாய் தமக்குள்ளிருந்தே மாறி எழுந்திடும் நாதம் ஆகும்.

கருத்து:

ஓங்காரத்தில் ‘அ’காரமாக உள்ளுக்குள் இருந்து இயக்குகின்ற சக்தியும் ‘உ’காரமாக வெளி உலகத்தை இயக்குகின்ற சக்தியும் நாத வடிவமாக இருக்கின்ற நடராஜ தத்துவத்தை குறிப்பதாகும். நடராஜ தத்துவத்தை தமக்குள் உணர்ந்து கொண்ட சாதகர்களே இந்த ஓங்கார தத்துவத்தை அறிந்து சதாசிவ இலிங்கத்தின் நாத வடித்தை உணர்ந்து கொள்வார்கள். ஓங்காரத்தில் இருக்கின்ற இந்த இரண்டு சக்திகளே இறைவனுக்கு இரண்டு சக்திகளாக அனைத்து தெய்வ வடிவங்களிலும் காட்டப் படுகின்றது.