பாடல் #144

பாடல் #144: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.

விளக்கம்:

தென்னங்கீற்றுகளால் பின்னப்பட்ட கூரையும் அதைத் தாங்கியிருக்கும் கழியும் நீண்ட காலம் உபயோகிக்கப்பட்டபின் ஒரு நாள் விழுந்துவிடும். அதுபோலவே நல்ல வினை தீய வினை ஆகிய இரண்டுவித வினைகளால் பின்னப்பட்ட இந்த உடலென்னும் கூரையும் அதைத் தாங்கியிருக்கும் மூச்செனும் கழியும் அந்த இருவினைகளின் பயன்களை முழுவதும் அனுபவித்தபின் முதுமை பெற்று ஒரு நாள் மூச்சு வெளியேறி இறந்துவிடும். கூரை இருந்த வரையில் அதனடியில் வசித்து வந்த மக்கள் கூரை விழுந்தபின் அதனோடே இறந்து விழுவதில்லை. அதுபோலவே மனிதன் வாழும்வரை அவனோடு கூடவே இருந்து அவனால் பயன்பெற்ற மனைவியும் குழந்தைகளும் அவன் இறந்து போனபின் அவனோடு கூடவே இறந்து போவதில்லை. உயிர் இறந்து மேலுலகத்திற்குத் தனியாகச் செல்லுகின்ற போது அதனுடனே பாதுகாவலர்கள் போல துணைக்கு வருவது அந்த உயிர் வாழும் போது செய்த விரதங்களின் பலன்களும் இறையருளால் பெற்ற ஞானங்களும் மட்டுமே. மற்ற எதுவும் அந்த உயிரோடு வருவதில்லை. எனவே வாழும்வரை இறைவனை நினைத்து காரியங்களைச் செய்து குருவின் அருள்பெற்று ஞானத்தை வளர்ப்பதே நல்லது.

பாடல் #145

பாடல் #145: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

விளக்கம்:

உயிர் உடலில் இருக்கும் வரை அவனுடன் வாழ்ந்த மனைவி குழந்தைகள் உறவினர் சுற்றத்தார் ஊரார்கள் என்று அனைவருமே அவன் இறந்துபோன பின் ஒன்றாகக் கூடி சத்தம்போட்டு அழுது புலம்பிவிட்டு அவனுக்கு அதுவரை வைத்திருந்த பேரைச் சொல்லிக் கூப்பிடாமல் பிணம் என்று ஒரு பேரை வைத்துவிட்டு அனைவரும் சேர்ந்து அவனுடைய உடலை எடுத்துச்சென்று ஊருக்கு வெளியில் இருக்கும் சூரைப்புற்கள் நிறைந்த சுடுகாட்டில் வைத்து அதை எரித்துவிட்டு அந்த உடலைத் தொட்டதை தீட்டு என்று சொல்லி அதைப் போக்க ஆற்றினில் மூழ்கி எழுந்தபின் மெல்ல மெல்ல அவனைப் பற்றிய நினைவுகளையும் மறந்து போவார்கள்.

பாடல் #146

பாடல் #146: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

காலும் இரண்டு முகட்டல கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளவும் புகஅறி யாதே.

விளக்கம்:

மனிதர்களின் இரண்டு கால்களே சுவர்களாகவும் முதுகுத் தண்டே அந்தச் சுவற்றிற்கு நடுவில் கூரையைத் தாங்கியிருக்கும் உத்திரமாகவும் உடலைச் சுற்றியிருக்கும் முப்பத்தி இரண்டு விலா எலும்புகளே சுவற்றைச் சுற்றி அது விழுந்துவிடாமல் இருக்கவேண்டி வைக்கப்பட்ட சட்டங்களாகவும் தலையே உத்திரத்தின் உச்சியிலிருக்கும் கூரையாகவும் இருக்கும் இந்த உடலாகிய வீடு எப்படி வீட்டின் மேலே இருக்கும் கூரை பிரிந்து விட்டால் வெறும் சுவர்களும் அதைத் தாங்கியிருக்கும் சட்டங்களும் மட்டுமே நிற்க உபயோகிக்க முடியாததாக ஒரு வீடு இருக்குமோ அதுபோலவே தலைவழியே மூச்சுக்காற்று வெளியேறி விட்டால் உடலும் இறந்துபோய் வெறும் சதையும் எலும்புகளும் மட்டுமே நிற்க வெளியில் சென்ற உயிர் மீண்டும் அந்த உடலுக்கும் புகுந்துகொள்ளும் வழி என்னவென்று தெரியாமல் நிற்கும். உயிராகிய ஆன்மா உடம்பிலிருந்து பிரிந்தால் உடல் மீண்டும் உயிர்பெறுவது இல்லை.

பாடல் #147

பாடல் #147: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக் குப்பலியாகக் காட்டிய வாறே.

விளக்கம்:

மனிதர்களின் இந்த உடலானது நோய்கள் செய்த வினைகள் எல்லாம் முடிந்து போனபின் ஒரு நாள் முதுமை பெற்று நாடி நரம்புகள் செயலிழந்து எலும்புகள் பழுத்துத் தளர்ந்துபோக இறந்து போய்விடும். இறந்து போனபின் மற்றவர்கள் வந்து அந்த உடலின் மூக்கின் மேல் கைவைத்து மூச்சிருக்கின்றதா என்று சோதித்துப் பார்த்துவிட்டு மூச்சில்லை என்பது உறுதியானவுடன் துணியால் உடலை மூடி அதைக் கொண்டு போய் சுடுகாட்டில் வைத்து சடங்குகளைச் செய்தபின் புதைத்துவிட்டு (அல்லது எரித்துவிட்டு) திவசம் செய்யும்போது காகங்களுக்குச் சாதம் வைத்து அது இறந்தவர்களுக்குச் சென்று சேரும் என்று எண்ணி செய்கிறார்கள் மூடர்கள். இறந்தவர்களின் உயிரும் அங்கேயே இருப்பதில்லை இவர்கள் காகத்திற்கு வைக்கும் சாதமும் அவர்களால் உட்கொள்ளப் படுவதில்லை. இறந்தபின் மதிப்பில்லாத இந்த உடலின் மேல் நாட்டம் கொள்ளாமல் என்றும் நிலைத்திருக்கும் இறைவன் மேல் நாட்டம் கொள்ளுவது நல்லது.

பாடல் #148

பாடல் #148: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

விளக்கம்:

புதியதாகத் திருமணம் செய்த மாப்பிள்ளைக்கு அறுசுவையோடு உணவு சமைத்து வைத்தார்கள். மாப்பிள்ளையும் அனைத்து உணவையும் நன்றாக சுவைத்து உண்டான். கொடிபோன்ற இடை கொண்ட இளம் மனைவியுடன் சுகமாக குலாவினான். இடது பக்கம் சிறிது வலிக்கின்றது என்றான். மனைவி அவனைத் தன் மடியில் கிடத்திப் படுக்க வைத்து என்ன ஆயிற்று என்று கேட்டுக்கொண்டு இருக்கும்போதே இதய வலியால் உயிர் பிரிந்து இறந்து போனான். உயிர் எந்த அளவு நிலைப்புத் தன்மை இல்லாதது என்பதை விளக்கும் ஒரு நிகழ்வு இது. இதை உணர்ந்து என்றும் நிலைத்திருக்கும் இறைவனையே போற்றுவோம்.

பாடல் #149

பாடல் #149: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

மன்றத்தே நம்பி தன்மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.

விளக்கம்:

ஊரில் ஆடவன் ஒருவன் தன் முயற்சியினால் பெரும் பொருள் சேர்த்து பலரும் வியக்கும் வண்ணம் பல அடுக்கு மாளிகையைக் கட்டினான். பின் ஊர் அறிய ஒரு பல்லக்கு செய்து அதில் ஏறி ஊரில் உள்ளோர்க்கு தானங்கள் பல வழங்கினான். அவனது உடலை விட்டு உயிர் பிரிந்த பின் பலர் நின்று தலைவனே என்று கூப்பிட்டுக் கதறியும் அவன் உயிர் திரும்பாமலே போய்விட்டான்.

கருத்து : ராஜபோகத்தில் வாழ்ந்தாலும் தான தர்மங்கள் எவ்வளவு செய்தாலும் உயிர் உடலில் நிற்காது.

பாடல் #150

பாடல் #150: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.

விளக்கம் :

இனிய உறுதி மொழிகளை கூறி ஆணும் பெண்ணும் இருமனங்களும் ஒன்று சேர திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கூடிக்கலந்து மகிழ்ந்திருந்த மணமக்கள் காலப்போக்கில் ஆரம்பத்தில் இருந்த காதல் பாச நினைவுகளை மறந்து ஒருவர் மேல் ஒருவர் திகட்டி சலிப்படைந்து விடுவர். பின் ஒரு நாள் இருவரில் ஒருவர் இறந்து விட அந்த உடலை பாடையின் மேல் வைத்து ஒப்பாரி வைத்து அழுது புலம்பி தங்களின் அன்பு பாசத்தையும் உடலுடன் சேர்த்து தீ வைத்து பலியிட்டார்களே.

கருத்து : மணந்தவர்களின் அன்பும் சுடுகாடு வரை மட்டுமே இருக்கும்.

பாடல் #151

பாடல் #151: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.

விளக்கம் :

மை பூசிய கண்களுடைய மனைவியும் தேடிய செல்வமும் அருகில் இருக்க மருத்துவர் கையில் நாடி பார்த்து இனி மருத்துவம் பயனளிக்காது என்று கைவிட்டு விட கொடுத்தது வாங்கியது செய்யவேண்டியது அனைத்தையும் மற்றவர்களிடம் சொல்ல எண்ணியும் நினைவுகள் இல்லாமல் தடுமாறி உடலில் ஒட்டிய உயிர் மூச்சு ஒடுங்கிவிடும். வாசம் மிகுந்த நெய்யால் செய்த உணவுகளை உண்டு மகிழ்ந்த மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்களும் செயலிலந்து உடலை விட்டு உயிர் பிரிந்து விடும்.

பாடல் #152

பாடல் #152: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலத் துரிசுவர மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.

விளக்கம் :

மரண வேதனையில் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் கடைசி காலத்தில் ஒரு நாள் மரணம் வந்துவிடும். அப்போது உயிராகிய பொக்கிஷத்தின் மேல் போர்வை போல் இருந்த உடம்பாகிய பந்தல் பிரிந்துவிட உடலோடு இருந்து இதுவரை வழிநடத்திவந்த உயிரும் வெளியேறிவிடும். அவ்வாறு உயிர் வெளியேறியபின் காற்றில்லாத உடலில் ஒன்பது வகை துவாரங்களும் (2 கண், 2 காது, 2 மூக்குத்துவாரங்கள், வாய், பால்குறி, ஆசனவாய்) அடைபட்டுவிடும். அவ்வாறு உயிர்காற்று வெளியேறியபின் அந்த உடலின்மேல் அன்பு கொண்டிருந்தவர்கள் எல்லோரும் வந்து அழுது ஒப்பாரி வைத்துவிட்டு பின்பு சென்றுவிடுவார்கள்.

பாடல் #153

பாடல் #153: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டைவிட்டு நம்பி நடக்கின்ற வாறே.

விளக்கம்:

தன் நாட்டிற்கு அரசனாகவும் குடிமக்களில் முதல்வனாகவும் இருப்பவன் பலவித பல்லக்கில் ஏறித் திரிந்தவன் கடைசியில் சுடுகாட்டிற்குச் செல்லும் பாடையில் உயிர் பிரிந்து கிடக்க அவனது நாட்டின் குடிமக்கள் அவனுக்குப் பின்னால் வர அவனுக்கு முன்னால் பறை அடிப்பவர்கள் மத்தளம் கொட்ட இதுவரை அவன் ஆட்சி செய்த நாட்டைவிட்டு சுடுகாட்டுக்கு அவன் செல்லும் முறை இதுவே ஆகும்.

உட்கருத்து: நாட்டின் தலைவன் என்றாலும் கடைசியில் ஒரு நாள் சுடுகாட்டுக்குப் போய்தான் ஆகவேண்டும். போகும்போது மக்கள் பின்வந்தாலும் அவர்கள் உடன் வர மாட்டார்கள். அவர்கள் திரும்பிச் சென்றுவிடுவார்கள்.