பாடல் #848

பாடல் #848: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனு மில்லையே.

விளக்கம் :

கடற்கரையின் அருகே சேரும் அலைகளின் நுரைகலந்த உப்புநீர் எதற்கும் உதவாது அதை ஒதுக்கிவிட வேண்டும் என்று அறிவில்லாத மனிதர்கள் கூறுவார்கள். ஆனால் அந்த அலைகளின் நுரைகலந்த உப்புநீரிலிந்து நுரையையும் அழுக்கையும் நீக்கிவிட்டு சுத்தமான உப்பாக்கி அதை உணவில் கலந்து சுவையோடு உண்ணத் தெரியும் அறிவுள்ள மனிதர்கள் வீணாக்க மாட்டார்கள். அதுபோலவே உயிர்களின் உடலின் கழிவு உப்புக்கள் நிறைந்த சிறுநீர் எதற்கும் பயன்படாது அதை வெளியேற்றிவிடு என்பவர்கள் அறிவில்லாத மனிதர்கள். அந்த உப்புக்கள் நிறைந்த சிறுநீர்ப் பைக்கு அருகிலேயே இருக்கும் சுக்கிலத்தை அடி வயிற்று நெருப்பால் சுத்தமாக்கி சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்க்கும் வழியறியந்த அறிவுள்ள யோகியர் அதை வீணாக்காமல் செய்தால் அவர்களின் நரை முடிகள் கருத்து சுருங்கிய தோல்கள் இளைமை பெற்று முதுமையை வென்று என்றும் இறப்பில்லாமல் பேரின்பத்தில் வாழ்வார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.