பாடல் #327: முதல் தந்திரம் – 24. கள்ளுண்ணாமை (போதையைத் தரக்கூடிய எதையும் சாப்பிடாமல் இருப்பது)
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே மயங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அண்ணலை நணுகுவர் தாமே.
விளக்கம்:
தீவினையைச் செய்பவர்கள் தமக்கும் தீயதாகிய மதுவைக் குடித்து குடித்து அழிந்து போவார்கள். காம எண்ணம் கொண்டவர்கள் அந்தக் காமத்தையே மதுவாகக் குடித்து அதிலேயே மயங்கிக் கிடப்பார்கள். அப்படி இல்லாமல் தவ வழியில் ஹோமம் வளர்த்து இறைவனை வழிபடுபவர்கள் தமக்குள்ளேயே பேரொளியாக இறைவனின் பேரானந்தத்தை உணர்வார்கள். இறைவனது திருநாமத்தை மட்டுமே எப்போதும் சிந்தித்து ஓதிக்கொண்டே இருப்பவர்கள் இறைவனோடு பேரானந்தத்தில் கலந்துவிடுவார்கள்.
