பாடல் #244

பாடல் #244: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேயாற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.

விளக்கம்:

பிறவி இல்லாத மேன்மை தரும் முக்தியையும் இந்தப் பிறவிக்கு தேவையான செல்வங்களும் வேண்டும் என்று ஒரு அரசன் விரும்பினால் அவன் மறந்த நிலையிலும் தர்மத்தின் வழி தவறாமல் நடக்க வேண்டும். ஏனெனில் சிறப்பு பெற்ற தண்ணீர் சூழ்ந்த இந்த உலகத்தில் அனைத்து உயிர்களும் செய்யும் காரியங்கள் அனைத்திலும் ஆறில் ஒரு பங்கு அரசனுக்கே வந்து சேரும். அந்த உயிர்கள் செய்யும் புண்ணியங்கள் பாவங்கள் அனைத்திலும் ஆறில் ஒரு பங்கு தமக்கு வரும் என்பதை உணர்ந்துகொண்டு அரசன் எப்போதும் மறக்காமல் அறத்தின் வழியிலேயே அவர்களையும் வழிநடத்திச் செல்ல வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.