பாடல் #1743

பாடல் #1743: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

நெஞ்சு சிரஞ்சிகை நீள்கவசங் கண்ணாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாஞ்
செஞ்சுறு செஞ்சுடர்கே சரி மின்னாகுஞ்
செஞ்சுடர் போலுந் தேசாயுதந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெஞசு சிரஞசிகை நீளகவசங கணணாம
வஞசமில விநது வளரநிறம பசசையாஞ
செஞசுறு செஞசுடரகெ சரி மினனாகுஞ
செஞசுடர பொலுந தெசாயுதந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண் ஆம்
வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சை ஆம்
செம் உறு செம் சுடர்கே சரி மின் ஆகும்
செம் சுடர் போலும் தெசு ஆயுதம் தானே.

பதப்பொருள்:

நெஞ்சு (மார்பு) சிரம் (தலை) சிகை (தலைமுடி) நீள் (நீண்ட) கவசம் (கவசம்) கண் (கண்கள்) ஆம் (ஆகிய இறைவனின் ஐந்து உறுப்புகளாகும்)
வஞ்சம் (இவை ஒரு தீமையும்) இல் (இல்லாத) விந்து (ஒளி உருவமாக) வளர் (எப்போதும் வளர்ந்து கொண்டே) நிறம் (இருக்கின்ற நிறம்) பச்சை (பசுமையாக நன்மையை அருளுவதை) ஆம் (குறிப்பது ஆகும்)
செம் (இறைவனின் செழுமை) உறு (உற்று இருக்கும்) செம் (சிகப்பான திருமேனியாகிய) சுடர்கே (சுடர் ஒளிக்கு) சரி (சரிசமமாக இருப்பது) மின் (இறைவியின் ஒளி உருவம்) ஆகும் (ஆகும்)
செம் (சிகப்பான) சுடர் (சுடர்) போலும் (போல) தெசு (பிரகாசமான ஒளி பொருந்தி இருக்கின்ற உறுப்புகள்) ஆயுதம் (தீமையை அழிக்கும் ஆயுதங்கள்) தானே (ஆக இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனின் ஐந்து உறுப்புகளாகிய மார்பு, தலை, தலைமுடி, நீண்ட கவசம், கண்கள் ஆகியவை ஒரு தீமையும் இல்லாத ஒளி உருவமாக எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. அவற்றின் பச்சை நிறம் பசுமையாக நன்மையை அருளுவதை குறிப்பது ஆகும். இறைவனின் செழுமை உற்று இருக்கும் சிகப்பான திருமேனியாகிய சுடர் ஒளிக்கு சரிசமமாக இருப்பது இறைவியின் ஒளி உருவம் ஆகும். சிகப்பான சுடர் போல பிரகாசமான ஒளி பொருந்தி இருக்கின்ற உறுப்புகள் தீமையை அழிக்கும் ஆயுதங்களாக இருக்கின்றது.

One thought on “பாடல் #1743

Leave a Reply to Eloornayagam AnandavelCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.