பாடல் #1739

பாடல் #1739: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

கூறுமி னூறு சதாசிவ னெம்மிறை
வேறோரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கு
மேறுகை செய்தொழில் வானவர் தம்மோடு
மாறுசெய் வானென் மனம்புகுந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூறுமி னூறு சதாசிவ னெமமிறை
வெறொரை செயது மிகைபபொரு ளாயநிறகு
மெறுகை செயதொழில வானவர தமமொடு
மாறுசெய வானென மனமபுகுந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூறுமின் ஊறு சதா சிவன் எம் இறை
வேறு ஓரை செய்து மிகை பொருள் ஆய் நிற்கும்
ஏறுகை செய் தொழில் வானவர் தம்மோடு
மாறு செய்வான் என் மனம் புகுந்தானே.

பதப்பொருள்:

கூறுமின் (எடுத்துக் கூறினால்) ஊறு (உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்கின்ற) சதா (சதா) சிவன் (சிவப் பரம்பொருளே) எம் (எமது) இறை (இறைவனாகும்)
வேறு (வேறு வேறு விதங்களில்) ஓரை (பல விதமாக திருவிளையாடல்கள்) செய்து (செய்து) மிகை (அனைத்திற்கும் மேலான) பொருள் (பொருள்) ஆய் (ஆகவும்) நிற்கும் (அதுவே நிற்கும்)
ஏறுகை (உலகத்தில் தவத்திலும் தானத்திலும் சிறந்து அதன் பயனால் மேலான நிலைக்கு ஏறுவதை) செய் (செய்து) தொழில் (உலக இயக்கத்திற்காக பல தொழில்களை புரிகின்ற) வானவர் (வானவர்கள்) தம்மோடு (அனைவரோடும் சேர்ந்து இருந்து)
மாறு (தீயவற்றை மாற்றி) செய்வான் (நன்மையை அருளுவதை செய்கின்றான்) என் (எமது) மனம் (மனதில்) புகுந்தானே (புகுந்தான் சதாசிவ இலிங்க வடிவமாக இருக்கின்ற இறைவன்).

விளக்கம்:

எடுத்துக் கூறினால் உணர்வுப் பூர்வமாக அறிந்து கொள்கின்ற சதா சிவப் பரம்பொருளே எமது இறைவனாகும். அவனே வேறு வேறு விதங்களில் பல விதமாக திருவிளையாடல்கள் செய்து அனைத்திற்கும் மேலான பொருளாகவும் நிற்கின்றான். உலகத்தில் தவத்திலும் தானத்திலும் சிறந்து அதன் பயனால் மேலான நிலைக்கு சென்று உலக இயக்கத்திற்காக பல தொழில்களை புரிகின்ற வானவர்கள் அனைவரோடும் சேர்ந்து இருந்து தீயவற்றை மாற்றி நன்மையை அருளுவதை செய்கின்றான் எமது மனதில் புகுந்தான் சதாசிவ இலிங்க வடிவமாக இருக்கின்ற இறைவன்.

One thought on “பாடல் #1739

Leave a Reply to AnandavelCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.