பாடல் #1706: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)
மேலென்று கீழென் றிரண்டறக் காணுங்கால்
தானென்று நானென்றுந் தன்மைக ளோராறு
பாரெங்கு மாகிப் பரந்த பராபரங்
காரொன்று கற்பக மாகிநின் றானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மெலெனறு கீழென றிரணடறக காணுஙகால
தானெனறு நானெனறுந தனமைக ளொராறு
பாரெஙகு மாகிப பரநத பராபரங
காரொனறு கறபக மாகிநின றானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மேல் என்றும் கீழ் என்றும் இரண்டு அற காணுங்கால்
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்
பார் எங்கும் ஆகி பரந்த பரா பரம்
கார் ஒன்றும் கற்பகம் ஆகி நின்றானே.
பதப்பொருள்:
மேல் (மேன்மையானது) என்றும் (என்றும்) கீழ் (கீழ்மையானது) என்றும் (என்றும்) இரண்டு (இரண்டு விதமாக பிரித்து பார்ப்பது) அற (இல்லாமல்) காணுங்கால் (அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும் பொழுது)
தான் (தான்) என்றும் (என்று நினைக்கின்ற ஆத்மாவும்) நான் (நான்) என்றும் (என்று நினைக்கின்ற உடம்பும்) தன்மைகள் (தன்மைகளாக தமக்குள் இருக்கின்ற) ஓர் (ஒரு) ஆறும் (ஆறு ஆதார சக்கரங்களும்)
பார் (உலகங்கள்) எங்கும் (அனைத்தும்) ஆகி (ஆகி) பரந்த (அண்டசராசரங்கள் எங்கும் பரந்து விரிந்து இருக்கின்ற) பரா (அசையா சக்தியாகிய) பரம் (பரம்பொருளே என்பதை உணர்ந்தால்)
கார் (வேரால் பருகிய நீரை தங்களின் தலை உச்சியில் இருக்கும் பழங்களில்) ஒன்றும் (சேமித்து வைத்து இருக்கும்) கற்பகம் (தென்னை பனை ஆகிய மரங்களைப் போலவே) ஆகி (உயிர்களின் தலை உச்சிக்குள்ளும் ஜோதியாக) நின்றானே (நிற்கின்றவன் அந்த இறை சக்தியே என்பதை உணரலாம்).
விளக்கம்:
மேன்மையானது என்றும் கீழ்மையானது என்றும் இரண்டு விதமாக பிரித்து பார்ப்பது இல்லாமல் அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும் பொழுது, தான் என்று நினைக்கின்ற ஆத்மாவும், நான் என்று நினைக்கின்ற உடம்பும், தன்மைகளாக தமக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களும், உலகங்கள் அனைத்தும் ஆகி அண்டசராசரங்கள் எங்கும் பரந்து விரிந்து இருக்கின்ற அசையா சக்தியாகிய பரம்பொருளே என்பதை உணர்ந்தால், வேரால் பருகிய நீரை தங்களின் தலை உச்சியில் இருக்கும் பழங்களில் சேமித்து வைத்து இருக்கும் தென்னை பனை ஆகிய மரங்களைப் போலவே உயிர்களின் தலை உச்சிக்குள்ளும் ஜோதியாக நிற்கின்றவன் அந்த இறை சக்தியே என்பதை உணரலாம்.
