பாடல் #1705

பாடல் #1705: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஈராறு நாதத்தி லீரெட்டா மந்தத்தில்
மேதாதி நாதாந்த மீதாம் பாராசத்தி
போதா லயாந்த விகாரந் தனிற்போத
மேதாரி வாதார மீதானமுண் மையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஈராறு நாதததி லீரெடடா மநதததில
மெதாதி நாதாநத மீதாம பராசததி
பொதா லயாநத விகாரந தனிறபொத
மெதாரி வாதார மீதானமுண மையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஈர் ஆறு நாதத்தில் ஈர் எட்டாம் அந்தத்தில்
மேத ஆதி நாத அந்த மீது ஆம் பரா சத்தி
போத ஆலய அந்த விகாரம் தனில் போத
மேத ஆர் இவ் ஆதாரம் ஈது ஆனம் உண்மையே.

பதப்பொருள்:

ஈர் (இரண்டும்) ஆறு (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் பன்னிரண்டு சூரிய கலைகளாகிய) நாதத்தில் (ஓசை மயத்திலும்) ஈர் (இரண்டும்) எட்டாம் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் பதினாறு சந்திர கலைகளாகிய) அந்தத்தில் (அனைத்தும் ஓடுங்குகின்ற மயத்திலும்)
மேத (தலை உச்சியில்) ஆதி (அனைத்திற்கும் முதலாகவும்) நாத (ஓசையின்) அந்த (எல்லையாகவும் இருக்கின்ற சகஸ்ரதளத்தின்) மீது (மீது) ஆம் (வீற்றிருப்பது) பரா (அசையும்) சத்தி (சக்தியாகிய பரம்பொருள் ஆகும்)
போத (அங்கே அறிவு வடிவாக இருக்கின்ற இறை சக்தி) ஆலய (வீற்றிருக்கும் ஆலயமாகிய உடலுக்கு) அந்த (உள்ளே) விகாரம் (இறை சக்தியோடு வேறுபட்டு இருக்கின்ற உயிர்களின்) தனில் (ஆன்மாவிற்குள்) போத (ஞானமாகவும்)
மேத (அக்னியாகவும்) ஆர் (முழுவதும் நிறைந்து) இவ் (இந்த உடலுக்குள் இருக்கின்ற) ஆதாரம் (ஆறு ஆதாரங்களாகவும் இருப்பது) ஈது (அந்த இறை சக்தியே) ஆனம் (என்று யாம் உரைப்பது) உண்மையே (உண்மையே ஆகும்).

விளக்கம்:

பன்னிரண்டு சூரிய கலைகளாகிய ஓசை மயத்திலும், பதினாறு சந்திர கலைகளாகிய அனைத்தும் ஓடுங்குகின்ற மயத்திலும், தலை உச்சியில் அனைத்திற்கும் முதலாகவும், ஓசையின் எல்லையாகவும் இருக்கின்ற சகஸ்ரதளத்தின் மீது வீற்றிருப்பது அசையும் சக்தியாகிய பரம்பொருள் ஆகும். அங்கே அறிவு வடிவாக இருக்கின்ற இறை சக்தி வீற்றிருக்கும் ஆலயமாகிய உடலுக்கு உள்ளே இறை சக்தியோடு வேறுபட்டு இருக்கின்ற உயிர்களின் ஆன்மாவிற்குள் ஞானமாகவும், அக்னியாகவும் முழுவதும் நிறைந்து இந்த உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரங்களாகவும் இருப்பது அந்த இறை சக்தியே என்று யாம் உரைப்பது உண்மையே ஆகும்.

One thought on “பாடல் #1705

  1. சித்ரா Reply

    திருச்சிற்றம்பலம்
    ஓம் நமசிவாய
    ஐயா வணக்கம்
    உங்கள் திருமந்திர சேவை ஒரு உன்னதமான தொண்டு.
    இது வரை வந்துள்ள ஐந்து மந்திரங்களை ipad ல் ஏற்றி நித்திய பாராயணம் செய்ய ஏதுவாக செய்து இருக்கிறேன்.
    தயவு செய்து ஆறாம் மந்திரங்களையும் தொகுத்து தர வேண்டும்.
    மிகவும் நன்றி ஐயா.
    ஓம் நமசிவாய

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.