பாடல் #1711

பாடல் #1711: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆயு மலரி னணிமலர் மேலது
மாய விதழும் பதினாறு மங்குள
தூய வறிவு சிவானந்த மாகிப்போய்
மேய வறிவாய் விளைந்தது தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயு மலரி னணிமலர மெலது
மாய விதழும பதினாறு மஙகுள
தூய வறிவு சிவானநத மாகிபபொய
மெய வறிவாய விளைநதது தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆயு மலரின் அணி மலர் மேல் அதும்
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவ ஆனந்தம் ஆகி போய்
மேய அறிவு ஆய் விளைந்தது தானே.

பதப்பொருள்:

ஆயு (உயிர்களின் உலக வாழ்க்கைக்கு ஆயுள் காலத்தை வரையறுப்பது) மலரின் (ஆறு ஆதார சக்கரங்களாகிய மலர்களாகும்) அணி (அவற்றை அணிகலனாக அணிந்து இயக்குகின்ற ஆறு எழுத்துக்கள்) மலர் (அந்த மலர்களின்) மேல் (மேல்) அதும் (இருக்கின்றது)
ஆய (இவ்வாறு எழுத்துக்களால் இயக்கப் படுகின்ற ஆதார சக்கரங்களின்) இதழும் (இதழ்களும்) பதினாறும் (பதினாறு கலைகளும்) அங்கு (அங்கேயே) உள (உள்ளது)
தூய (இவற்றை சாதகத்தின் மூலம் இயக்குவதால் தூய்மை பெற்ற) அறிவு (அறிவானது) சிவ (இறைவனது) ஆனந்தம் (பேரின்பத்தை தாங்குகின்ற) ஆகி (பாத்திரமாக ஆகி) போய் (விடுகின்றது)
மேய (அதன் பிறகு உலக அறிவானது மாறி இறைவனது) அறிவு (பேரறிவு) ஆய் (ஆக) விளைந்தது (விளைய வைப்பதற்கு) தானே (இந்த ஆறு ஆதார சக்கரங்களே காரணமாக இருக்கின்றன).

விளக்கம்:

உயிர்களின் உலக வாழ்க்கைக்கு ஆயுள் காலத்தை வரையறுப்பது ஆறு ஆதார சக்கரங்களாகிய மலர்களாகும். அவற்றை அணிகலனாக அணிந்து இயக்குகின்ற ஆறு எழுத்துக்கள் அந்த மலர்களின் மேல் இருக்கின்றது. இவ்வாறு எழுத்துக்களால் இயக்கப் படுகின்ற ஆதார சக்கரங்களின் இதழ்களும் பதினாறு கலைகளும் அங்கேயே உள்ளது. இவற்றை சாதகத்தின் மூலம் இயக்குவதால் தூய்மை பெற்ற அறிவானது இறைவனது பேரின்பத்தை தாங்குகின்ற பாத்திரமாக ஆகி விடுகின்றது. அதன் பிறகு உலக அறிவானது மாறி இறைவனது பேரறிவு ஆக விளைய வைப்பதற்கு இந்த ஆறு ஆதார சக்கரங்களே காரணமாக இருக்கின்றன.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.