பாடல் #1709

பாடல் #1709: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆறந்த முங்கூடி யாகுமுடம் பினிற்
கூறிய வாதார மாறுங்குறிக் கொண்மி
னாறிய வக்கரமா மைம்பதின் மேலே
யூறிய வாதாரத் தோரெழுத் தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆறநத முஙகூடி யாகுமுடம பினிற
கூறிய வாதார மாறுஙகுறிக கொணமி
னாறிய வககரமா மைமபதின மெலெ
யூறிய வாதாரத தொரெழுத தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் ஆறும் குறி கொண்மின்
ஆறிய அக்கரம் ஆம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே.

பதப்பொருள்:

ஆறு (ஆறு ஆதார சக்கரங்களின்) அந்தமும் (எல்லைகளும்) கூடி (ஒன்றாக கூடி) ஆகும் (ஆகுகின்ற) உடம்பினில் (உயிர்களின் உடம்பினுள்)
கூறிய (சொல்லிய) ஆதாரம் (ஆதாரங்களாகிய) ஆறும் (ஆறு சக்கரங்களையும்) குறி (குறிக்கோளாக) கொண்மின் (கொண்டு சாதகம் செய்யுங்கள்)
ஆறிய (அப்போது அந்த ஆறு சக்கரங்களிலும்) அக்கரம் (வீற்றிருக்கின்ற எழுத்துக்களும்) ஆம் (சக்தியூட்டம் பெற்று) ஐம்பதின் (ஆறு அத்துவாக்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஐம்பது எழுத்துக்களுக்கு) மேலே (மேலே வீற்றிருந்து)
ஊறிய (அந்த ஐம்பது எழுத்துக்களுக்குள் ஊறி இருந்து) ஆதாரத்து (நடுவில் ஆதாரமாக வீற்றிருக்கின்ற) ஓர் (ஒரு) எழுத்து (எழுத்தாகிய) ஆமே (ஓங்காரமாகவே மாறி இருக்கும்).

விளக்கம்:

ஆறு ஆதார சக்கரங்களின் எல்லைகளும் ஒன்றாக கூடி ஆகுகின்ற உயிர்களின் உடம்பினுள் சொல்லிய ஆதாரங்களாகிய ஆறு சக்கரங்களையும் குறிக்கோளாக கொண்டு சாதகம் செய்யுங்கள். அப்போது அந்த ஆறு சக்கரங்களிலும் வீற்றிருக்கின்ற எழுத்துக்களும் சக்தியூட்டம் பெற்று, ஆறு அத்துவாக்களுக்கு ஆதாரமாக இருக்கின்ற ஐம்பது எழுத்துக்களுக்கு மேலே வீற்றிருந்து, அந்த ஐம்பது எழுத்துக்களுக்குள் ஊறி இருந்து நடுவில் ஆதாரமாக வீற்றிருக்கின்ற ஒரு எழுத்தாகிய ஓங்காரமாகவே மாறி இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.