பாடல் #1707

பாடல் #1707: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஆதார சோதனை யானாடி சுத்திகள்
வேதாதி யீரெண் கலந்தது விண்ணொளி
போதா லையத்துப் புலன்கரணப் புந்தி
சாதா ரணங்கெட்றான சகமார் கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆதார சொதனை யானாடி சுததிகள
வெதாதி யீரெண கலநதது விணணொளி
பொதா லையததுப புலனகரணப புநதி
சாதா ரணஙகெடறான சகமார கமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆதார சோதனை ஆல் நாடி சுத்திகள்
வேத ஆதி ஈர் எண் கலந்தது விண் ஒளி
போத ஆலயத்து புலன் கரண புந்தி
சாதாரணம் கெட்டது ஆன சக மார்கமே.

பதப்பொருள்:

ஆதார (ஆறு ஆதாரங்களையும்) சோதனை (தியானத்தின் வழியாக பயிற்சி செய்வதன்) ஆல் (மூலம்) நாடி (உடலில் உள்ள அனைத்து நாடிகளையும்) சுத்திகள் (சுத்தம் செய்த பிறகு)
வேத (வேதங்களுக்கு) ஆதி (மூலமாகிய இறைவன்) ஈர் (இரண்டும்) எண் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் பதினாறு கலைகளாக) கலந்தது (தமக்குள் கலந்து) விண் (வானத்தில் இருந்து) ஒளி (உலகத்தின் இருளை நீக்கும் பேரொளியைப் போலவே)
போத (தமக்குள் உண்மை ஞானத்தை விளக்கி அருளுகின்ற) ஆலயத்து (ஆலயமாகவே வீற்றிருப்பான். அதன் பிறகு) புலன் (ஐந்து புலன்களும்) கரண (நான்கு அந்தக் கரணங்களும்) புந்தி (அறிவும்)
சாதாரணம் (உலக பற்றுக்கள் சார்ந்த தங்களின் இயல்பான நிலையை) கெட்டது (மாற்றி ஒன்றாக சேர்ந்து இறைவனை நோக்கி) ஆன (செயல்படுவதே) சக (தோழமை) மார்கமே (வழி முறையாகும்).

விளக்கம்:

ஆறு ஆதாரங்களையும் தியானத்தின் வழியாக பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள அனைத்து நாடிகளையும் சுத்தம் செய்த பிறகு வேதங்களுக்கு மூலமாகிய இறைவன் பதினாறு கலைகளாக தமக்குள் கலந்து வானத்தில் இருந்து உலகத்தின் இருளை நீக்கும் பேரொளியைப் போலவே தமக்குள் உண்மை ஞானத்தை விளக்கி அருளுகின்ற ஆலயமாகவே வீற்றிருப்பான். அதன் பிறகு ஐந்து புலன்களும், நான்கு அந்தக் கரணங்களும், அறிவும், உலக பற்றுக்கள் சார்ந்த தங்களின் இயல்பான நிலையை மாற்றி ஒன்றாக சேர்ந்து இறைவனை நோக்கி செயல்படுவதே தோழமை வழி முறையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.