பாடல் #1431

பாடல் #1431: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)

சத்த மசத்துந் தணந்தவன் றானாகிச்
சித்த மசித்துந் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ளானந்தச் சத்தியுள் மூழ்கினார்
சித்தியு மங்கே சிறந்தது தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சதத மசததுந தணநதவன றானாகிச
சிதத மசிததுந தெரியாச சிவொகமாய
முததியுள ளானநதச சததியுள மூழகினார
சிததியு மஙகெ சிறநதது தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தும் அசத்தும் தணந்து அவன் தான் ஆகி
சித்தும் அசித்தும் தெரியா சிவ யோகம் ஆய்
முத்தி உள் ஆனந்த சத்தி உள் மூழ்கினார்
சித்தியும் அங்கே சிறந்தது தானே.

பதப்பொருள்:

சத்தும் (நிலையான ஆன்மாவும்) அசத்தும் (நிலையில்லாத உடலையும்) தணந்து (கடந்து இருக்கின்ற) அவன் (சாதகரே) தான் (தானே இறைவனாக) ஆகி (ஆகி)
சித்தும் (உலக அறிவாலும்) அசித்தும் (அறியாமையாலும்) தெரியா (தெரிந்து கொள்ள முடியாத) சிவ (சிவ) யோகம் (யோகத்தின்) ஆய் (வடிவமாய்)
முத்தி (முக்தி நிலைக்கு) உள் (உள்ளே இருக்கின்ற) ஆனந்த (பேரின்பத்தின்) சத்தி (சக்திக்கு) உள் (உள்ளே) மூழ்கினார் (மூழ்கி இருந்து)
சித்தியும் (பேரறிவு ஞானத்தைப் பெற்று) அங்கே (அந்த முக்தி நிலைக்குள்) சிறந்தது (மேன்மையுடன் சிறந்து) தானே (விளங்குகின்றார்).

விளக்கம்:

நிலையான ஆன்மாவும் நிலையில்லாத உடலையும் கடந்து பாடல் #1430 இல் உள்ளபடி துரியாதீத நிலையில் இருக்கின்ற சாதகர் தானே இறைவனாகி உலக அறிவாலும் அறியாமையாலும் தெரிந்து கொள்ள முடியாத சிவ யோகத்தின் வடிவமாய் முக்தி நிலைக்கு உள்ளே இருக்கின்ற பேரின்பத்தின் சக்திக்கு உள்ளே மூழ்கி இருந்து பேரறிவு ஞானத்தைப் பெற்று அந்த முக்தி நிலைக்குள் மேன்மையுடன் சிறந்து விளங்குகின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.