பாடல் #1428

பாடல் #1428: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)

கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாதத்தி
னூடுறு ஞானோதைய னுண்மை முத்தியோன்
பாடுறு சுத்த சைவப்பத்த நித்தனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கெடறு ஞானி கிளரஞான பூபதி
பாடறு வெதாநத சிததாநத பாதததி
னூடுறு ஞானொதைய னுணமை முததியொன
பாடுறு சுதத சைவபபதத நிததனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி
பாடு அறு வேத அந்தம் சித்த அந்தம் பாதத்தின்
ஊடு உறு ஞான உதய நுண்மை முத்தியோன்
பாடு உறு சுத்த சைவ பத்த நித்தனே.

பதப்பொருள்:

கேடு (தீயவற்றை) அறு (அறுக்கின்ற) ஞானி (ஞானியாகிய சாதகர்) கிளர் (கிளர்ந்து எழுகின்ற) ஞான (ஞானத்திற்கு) பூபதி (அதிபதியாகவும்)
பாடு (பாசமாகிய துன்பங்களை) அறு (அறுக்கின்ற) வேத (வேதங்களுக்கு) அந்தம் (எல்லையாகவும்) சித்த (சித்தங்களுக்கு) அந்தம் (எல்லையாகவும்) பாதத்தின் (இருக்கின்ற இறைவனின் திருவடிகளை)
ஊடு (தம்மை நாடி வரும் அடியவர்களின் மனதிற்குள்) உறு (புகுத்தி) ஞான (ஞானத்தை) உதய (உருவாக்குகின்ற) நுண்மை (நுட்பமான) முத்தியோன் (முக்தி நிலையில் இருப்பவராகவும்)
பாடு (பாசமாகிய துன்பத்தை) உறு (அனுபவித்தாலும் அதனால் சிறிதும் பாதிக்கப் படாமல்) சுத்த (சுத்தமான) சைவ (சைவ நெறிமுறையைக் கடைபிடித்து) பத்த (பக்தியிலேயே) நித்தனே (எப்போதும் நிற்பவராகவும் இருப்பார்).

விளக்கம்:

பாடல் #1427 இல் உள்ளபடி கருவிகளின் மூலம் சாதகம் செய்து தீயவற்றை அறுக்கின்ற ஞானியாகிய சாதகர் கிளர்ந்து எழுகின்ற ஞானத்திற்கு அதிபதியாகவும், பாசமாகிய துன்பங்களை அறுக்கின்ற வேதங்களுக்கு எல்லையாகவும் சித்தங்களுக்கு எல்லையாகவும் இருக்கின்ற இறைவனின் திருவடிகளை தம்மை நாடி வரும் அடியவர்களின் மனதிற்குள் புகுத்தி ஞானத்தை உருவாக்குகின்ற நுட்பமான முக்தி நிலையில் இருப்பவராகவும், பாசமாகிய துன்பத்தை அனுபவித்தாலும் அதனால் சிறிதும் பாதிக்கப் படாமல் சுத்தமான சைவ நெறிமுறையைக் கடைபிடித்து எப்போதும் பக்தியிலேயே நிலைத்து நிற்பவராகவும் இருப்பார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.