பாடல் #1420

பாடல் #1420: ஐந்தாம் தந்திரம் – 1. சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் முதலாவது)

சத்து மசத்துஞ் சதசத்துந் தான்கண்டுஞ்
சித்து மசித்தையுஞ் சேர்வுறாமே நீத்துஞ்
சுத்த மசுத்தமுந் தோய்வுறாமே நின்று
நித்தம் பரசுத்த சைவர்க்கு நேயமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சதது மசததுஞ சதசததுந தானகணடுஞ
சிதது மசிததையுஞ செரவுறாமெ நீததுஞ
சுதத மசுததமுந தொயவுறாமெ நினறு
நிததம பரசுதத சைவரககு நெயமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கண்டும்
சித்தும் அசித்தையும் சேர்வு உறாமே நீத்தும்
சுத்தம் அசுத்தமும் தோய்வு உறாமே நின்று
நித்தம் பர சுத்த சைவர்க்கு நேயமே.

பதப்பொருள்:

சத்தும் (நிலையானதாகிய சிவமும்) அசத்தும் (நிலையில்லாததாகிய உடலும்) சத (நிலையில்லாத உடலுக்குள்) சத்தும் (நிலையாக நிற்கின்ற ஆன்மாவும்) தான் (ஆகிய இவை மூன்றையும்) கண்டும் (கண்டு உணர்ந்தும்)
சித்தும் (உலக அறிவும்) அசித்தையும் (அறியாமையும்) சேர்வு (சேர்ந்து) உறாமே (கலந்து விடாமல்) நீத்தும் (அதிலிருந்து விலகி இருந்தும்)
சுத்தம் (சுத்த மாயை) அசுத்தமும் (அசுத்த மாயை) தோய்வு (ஆகிய இரண்டிலும் மயங்கி) உறாமே (இல்லாமல்) நின்று (உண்மை ஞானத்தில் நின்றும்)
நித்தம் (எப்பொழுதும்) பர (பரம்பொருளாகிய இறைவனின்) சுத்த (அதி சுத்த நிலையில் இருப்பதே) சைவர்க்கு (சைவர்களின்) நேயமே (பேரன்பு ஆகும்).

விளக்கம்:

நிலையானதாகிய சிவமும் நிலையில்லாததாகிய உடலும் நிலையில்லாத உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் ஆகிய இவை மூன்றையும் கண்டு உணர்ந்தும், உலக அறிவும் அறியாமையும் சேர்ந்து விடாமல் அதிலிருந்து விலகி இருந்தும், சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரண்டிலும் மயங்கி விடாமல் உண்மை ஞானத்தில் நின்றும், எப்பொழுதும் பரம்பொருளாகிய இறைவனின் அதி சுத்த நிலையில் இருப்பதே சைவர்களின் பேரன்பு ஆகும்.

குறிப்பு: சைவ நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி சடங்குகளில் சிக்கிக் கொள்ளாமல் சம்பிரதாயங்களைக் கடந்து இறைவனிடம் அன்பு செலுத்துபவர்களே சுத்த சைவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.