பாடல் #1507

பாடல் #1507: ஐந்தாம் தந்திரம் – 13. சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருப்பது)

சாலோக மாதி சரிதாதியிற் பெறுஞ்
சாலோக சாமீபந் தங்குஞ் சரிதையா
மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்
பாலோக மில்லாப் பரனுரு வாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாலொக மாதி சரிதாதியிற பெறுஞ
சாலொக சாமீபந தஙகுஞ சரிதையா
மாலொகஞ செரில வழியாகுஞ சாரூபம
பாலொக மிலலாப பரனுரு வாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாலோகம் ஆதி சரிதை ஆதியில் பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் சரிதை ஆம்
மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம்
பாலோகம் இல்லா பரன் உரு ஆகுமே.

பதப்பொருள்:

சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை) ஆதி (முதலாகிய சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நான்கு விதமான முக்திக்கான நிலைகளும்) சரிதை (இறைவனை அடைவதற்கான சரியை) ஆதியில் (முதலாகிய சரியை, கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான முறைகளால்) பெறும் (பெறப்படும்)
சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை பெற்று அதன் மூலம்) சாமீபம் (இறைவனுக்கு அருகில் இருக்கின்ற நிலை) தங்கும் (நமக்கு கிடைப்பது) சரிதை (சரியையை தொடர்ந்து முறைப்படி) ஆம் (செய்து கொண்டு இருப்பதால் ஆகும்)
மாலோகம் (இறைவன் இருக்கின்ற மாபெரும் உலகத்தையே) சேரில் (சேர்ந்து இருந்தால்) வழி (அதுவே வழியாக) ஆகும் (இருக்கும்) சாரூபம் (அதற்கு அடுத்த நிலையாகிய இறைவனுடைய உருவத்தையே பெறுகின்ற நிலையை அடைவதற்கு)
பாலோகம் (அப்போது இந்த பரந்த விரிந்த உலகங்கள் அனைத்திலும்) இல்லா (இருக்கின்ற வடிவங்களில் இல்லாத) பரன் (பரம்பொருளின்) உரு (ஒளி உருவத்தோடு) ஆகுமே (அவருடனே எப்போதும் இருக்கின்ற சாயுச்சிய நிலையும் கிடைக்கும்).

விளக்கம்:

இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை முதலாகிய சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்சியம் ஆகிய நான்கு விதமான முக்திக்கான நிலைகளும் இறைவனை அடைவதற்கான சரியை முதலாகிய சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான முறைகளால் பெறப்படும். இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருக்கின்ற நிலை பெற்று அதன் மூலம் இறைவனுக்கு அருகில் இருக்கின்ற நிலையானது சரியையை தொடர்ந்து முறைப்படி செய்து கொண்டு இருப்பதால் நமக்கு கிடைக்கும். இறைவன் இருக்கின்ற மாபெரும் உலகத்தையே சேர்ந்து இருந்தால் அதற்கு அடுத்த நிலையாகிய இறைவனுடைய உருவத்தையே பெறுகின்ற நிலையை அடைவதற்கு அதுவே வழியாக இருக்கும். அப்போது இந்த பரந்த விரிந்த உலகங்கள் அனைத்திலும் இருக்கின்ற வடிவங்களில் இல்லாத பரம்பொருளின் ஒளி உருவத்தோடு அவருடனே எப்போதும் இருக்கின்ற சாயுச்சிய நிலையும் கிடைக்கும்.

இறைவனை அடைந்த முக்திக்கான நிலைகள்:

  1. சாலோகம் – இறைவன் இருக்கும் இடத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வது.
  2. சாமீபம் – இறைவனுக்கு பக்கத்தில் அமர்ந்து நெருக்கமாக வாழ்வது.
  3. சாரூபம் – இறைவனுக்கு பிரதிநிதியாக அவருக்கு செய்வதை ஏற்றுக்கொள்வது.
  4. சாயுச்சியம் – இறைவனோடு எப்போதும் சேர்ந்து இருப்பது.

இறைவனை அடைவதற்கான வழிகள்:

  1. சரியை – கோயில்கள் செல்வது, பூஜைகள் செய்வது.
  2. கிரியை – மந்திரம் சொல்லி சக்கரங்கள் வைத்து வழிபடுவது.
  3. யோகம் – தியானம் தவம் செய்வது.
  4. ஞானம் – அனைத்திற்கும் மேலான நிலையில் சலனங்கள் இன்றி இருப்பது.

பாடல் #1508

பாடல் #1508: ஐந்தாம் தந்திரம் – 13. சாலோகம் (இறைவன் இருக்கின்ற உலகத்தை சார்ந்தே இருப்பது)

சமயங் கிரிதையிற் றன்மனங் கோயில்
சமய மனுமுறை தானே விசேடஞ்
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சமயங கிரிதையிற றனமனங கொயில
சமய மனுமுறை தானெ விசெடஞ
சமயதது மூலந தனைததெறன மூனறாஞ
சமயாபி டெகந தானாஞ சமாதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சமயம் கிரிதையில் தன் மனம் கோயில்
சமய மனு முறை தானே விசேடம்
சமயத்து மூலம் தனை தேறல் மூன்று ஆம்
சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே.

பதப்பொருள்:

சமயம் (சமயம் எனப்படுவது) கிரிதையில் (கிரியையில்) தன் (தன்) மனம் (மனதையே) கோயில் (இறைவன் இருக்கின்ற கோயிலாக மாற்றுவதன் மூலம் இறைவன் இருக்கின்ற இடத்தை சார்ந்தே இருக்கின்ற சாலோக நிலையை அடைவது ஆகும்)
சமய (சமயத்தில்) மனு (மனித உயிர்களுக்கு என்று வகுக்கப்பட்ட) முறை (வழி முறைகளாக இருப்பது) தானே (தானே கோயிலாக வைத்து உள்ளே இருக்கின்ற இறைவனுக்கு செய்கின்ற கிரியைகளின்) விசேடம் (விஷேசத்தினால் இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற சாமீப நிலையை அடைவது ஆகும்)
சமயத்து (அந்த சமயத்தின்) மூலம் (மூலமே) தனை (தாம் யாராக இருக்கின்றோம்) தேறல் (என்று அறிந்து அதில் தெளிவை பெறுவது) மூன்று (சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று விதமான முறைகளாலும் சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று முக்திக்கான) ஆம் (நிலைகளை அடைவது ஆகும்)
சமய (சமயத்தில்) அபிடேகம் (அபிஷேகம்) தான் (என்பது தானே) ஆம் (இறைவனாக இருக்கின்றதை உணர்ந்த) சமாதியே (ஞான முறையில் அவருடனேயே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற சாயுச்சிய நிலையை அடைவது ஆகும்).

விளக்கம்:

சமயம் எனப்படுவது கிரியையில் தன் மனதையே இறைவன் இருக்கின்ற கோயிலாக மாற்றுவதன் மூலம் இறைவன் இருக்கின்ற இடத்தை சார்ந்தே இருக்கின்ற சாலோக நிலையை அடைவது ஆகும். சமயத்தில் மனித உயிர்களுக்கு என்று வகுக்கப்பட்ட வழி முறைகளாக இருப்பது தானே கோயிலாக வைத்து உள்ளே இருக்கின்ற இறைவனுக்கு செய்கின்ற கிரியைகளின் விஷேசத்தினால் இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற சாமீப நிலையை அடைவது ஆகும். அந்த சமயத்தின் மூலமே தாம் யாராக இருக்கின்றோம் என்று அறிந்து அதில் தெளிவை பெறுவது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று விதமான முறைகளாலும் சாலோகம், சாமீபம், சாரூபம் ஆகிய மூன்று முக்திக்கான நிலைகளை அடைவது ஆகும். சமயத்தில் அபிஷேகம் என்பது தானே இறைவனாக இருக்கின்றதை உணர்ந்த ஞான முறையில் அவருடனேயே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற சாயுச்சிய நிலையை அடைவது ஆகும்.

கருத்து:

  1. மனதையே இறைவன் இருக்கின்ற கோயிலாக மானசீகமாக அமைத்து சரியை முறையை பின்பற்றுவது இறைவன் இருக்கின்ற உலகத்தையே சார்ந்து இருக்கின்ற நிலை ஆகும்.
  2. மனதுக்குள் இருக்கின்ற இறைவனுக்கு பூஜைகளும் மந்திர உச்சாடனங்களும் செய்து கிரியை முறையை பின்பற்றுவது இறைவனுக்கு அருகிலேயே இருக்கின்ற நிலை ஆகும்.
  3. தமக்குள் இருக்கின்ற ஆன்மாவே இறைவன் என்று அறிந்து கொண்டு அவனையே தியானம் செய்கின்ற யோக முறையை பின்பற்றுவது இறைவனுடைய உருவத்திலேயே இருக்கின்ற நிலை ஆகும்.
  4. தமக்குள் இருக்கின்ற ஆன்மாவாகிய இறைவனை உணர்கின்ற ஞான முறையை அடைவது இறைவனுடனே எப்போதும் சேர்ந்து இருக்கின்ற நிலை ஆகும்.

குறிப்பு:

இந்தப் பாடலில் வருகின்ற சமயம் என்பது என்னவென்றால் தாங்கள் எந்த மதத்தை சார்ந்து எந்த வழிமுறையை பின் பற்றினாலும் அதற்கு என்று வகுத்துக் கொடுக்கப் பட்ட விதிமுறைகளே சமயம் என்று அழைக்கப் படுகின்றது.

பாடல் #1502

பாடல் #1502: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

எளியன தீபமிட லலர் கொய்த
லளியின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்றாச மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எளியன தீபமிட லலர கொயத
லளியின மெழுக லதுதூரததல வாழததல
பளிபணி பறறல பனமஞ சனமாதி
தளிதொழில செயவது தானறாச மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எளியன தீபம் இடல் அலர் கொய்தல்
அளி இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
பளி பணி பற்றல் பன் மஞ்சனம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்கமே.

பதப்பொருள்:

எளியன (தங்களால் இயன்ற வரை) தீபம் (தீபங்களை) இடல் (ஏற்றி வைத்தல்) அலர் (நறுமணமிக்க மலர்ந்த மலர்களை) கொய்தல் (கொய்து அணிவித்தல்)
அளி (இறைவன் இருக்கின்ற) இன் (இடங்களை) மெழுகல் (சாணி பூசி மெழுகி) அது (அந்த இடத்தை) தூர்த்தல் (சுத்தமாக வைத்தல்) வாழ்த்தல் (இறைவனின் புகழ்களை பாடி வாழ்த்துதல்)
பளி (இறைவன் அமர்ந்து வருகின்ற பல்லக்கு) பணி (சேவை செய்வதற்கு) பற்றல் (பல்லக்கின் கழிகளை பற்றிக் கொண்டு வலம் வருதல்) பன் (பல விதமான) மஞ்சனம் (அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்தல்) ஆதி (முதல் கொண்டு)
தளி (கோயில்களுக்கு) தொழில் (தேவையான தொண்டுகளில் தங்களால் இயன்ற அளவு) செய்வது (செய்து பணி புரிவது) தான் (தான்) தாச (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற) மார்கமே (வழி முறையாகும்).

விளக்கம்:

தங்களால் இயன்ற வரை தீபங்களை ஏற்றி வைத்தல் நறுமணமிக்க மலர்ந்த மலர்களை கொய்து சாற்றுதல் இறைவன் இருக்கின்ற இடங்களை சாணி பூசி மெழுகி அந்த இடத்தை சுத்தமாக வைத்தல் இறைவனின் புகழ்களை பாடி வாழ்த்துதல் இறைவன் அமர்ந்து வருகின்ற பல்லக்கு சேவை செய்வதற்கு பல்லக்கின் கழிகளை பற்றிக் கொண்டு வலம் வருதல் பல விதமான அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்தல் முதல் கொண்டு கோயில்களுக்கு தேவையான தொண்டுகளில் தங்களால் இயன்ற அளவு செய்து பணி புரிவது தான் இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறையாகும்.

பாடல் #1503

பாடல் #1503: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

அதுவிது வாதிப் பரமென் றகல
மிதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடு
மதுவிதி நெஞ்சிற் றழிகின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அதுவிது வாதிப பரமென றகல
மிதுவழி யெனறங கிறைஞசின ரிலலை
விதிவழி யெசெனறு வெநதனை நாடு
மதுவிதி நெஞசிற றழிகினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அது இது ஆதி பரம் என்று அகலம்
இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை
விதி வழியே சென்று வேந்தனை நாடும்
அது விதி நெஞ்சில் அழிகின்ற ஆறே.

பதப்பொருள்:

அது (அதுவும்) இது (இதுவும்) ஆதி (ஆதியாக இருக்கின்ற) பரம் (பரம் பொருள்) என்று (என்று நினைத்துக் கொண்டு) அகலம் (பரந்து விரிந்து இருக்கின்ற உலகில்)
இது (இதுவே) வழி (இறைவனை அடையும் வழி) என்று (என்று எடுத்துக் கொண்டு) அங்கு (அதன் மூலம்) இறைஞ்சினர் (இறைவனை அடைய முயற்சி செய்கின்றவர்கள்) இல்லை (யாரும் இல்லை)
விதி (தங்களுக்கு விதிக்கப் பட்ட) வழியே (வழியில்) சென்று (சென்று) வேந்தனை (தமக்குள் மறைந்து இருந்து தம்மை ஆளுகின்ற இறைவனை அடியவராக) நாடும் (தேடி அடைகின்ற)
அது (வழி முறையே) விதி (விதி என்று கடைபிடிக்கின்றவர்களின்) நெஞ்சில் (மனதில் இருந்து) அழிகின்ற (ஆசைகளை அழித்து) ஆறே (இறைவனிடம் சேர்க்கின்ற வழி முறை இதுவே ஆகும்).

விளக்கம்:

அதுவும் இதுவும் ஆதியாக இருக்கின்ற பரம் பொருள் என்று நினைத்துக் கொண்டு பரந்து விரிந்து இருக்கின்ற உலகில் இதுவே இறைவனை அடையும் வழி என்று எடுத்துக் கொண்டு அதன் மூலம் இறைவனை அடைய முயற்சி செய்கின்றவர்கள் யாரும் இல்லை. அப்படி இல்லாமல் தங்களுக்கு விதிக்கப் பட்ட வழியில் சென்று தமக்குள் மறைந்து இருந்து தம்மை ஆளுகின்ற இறைவனை அடியவராக தேடி அடைகின்ற வழி முறையே விதி என்று கடைபிடிக்கின்றவர்களின் மனதில் இருந்து ஆசைகளை அழித்து இறைவனிடம் சேர்க்கின்ற வழி முறை இதுவே ஆகும்.

பாடல் #1504

பாடல் #1504: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு
சிந்திப்ப னென்று மொருவன் செழிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அநதிபபன திஙக ளதனபினபு ஞாயிறு
சிநதிபப னெனறு மொருவன செழிகழல
வநதிபபன வானவர தெவனை நாடொறும
வநதிபப தெலலாம வகையின முடிநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செழி கழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாள் தோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்தே.

பதப்பொருள்:

அந்திப்பன் (காலையிலும் மாலையிலும்) திங்கள் (மனதாலும்) அதன் (அதன்) பின்பு (பிறகு அதற்கு ஏற்றபடி) ஞாயிறு (உடலாலும் வழிபாடு செய்து)
சிந்திப்பன் (சிந்தித்துக் கொண்டே இருப்பேன்) என்றும் (எப்போதும் எமக்கு எஜமானராக இருக்கின்ற) ஒருவன் (ஒருவனையும்) செழி (நினைப்பதை அருளுபவனுமாகிய அவனின்) கழல் (திருவடிகளை)
வந்திப்பன் (போற்றி வணங்குவேன்) வானவர் (வானவர்களுக்கு எல்லாம்) தேவனை (அதிபதியாக இருக்கின்ற இறைவனை) நாள் (தினம்) தோறும் (தோறும்)
வந்திப்பது (இவ்வாறு நான் போற்றி வணங்குவது) எல்லாம் (எல்லாமே) வகையின் (இறைவனை எஜமானராகவும் எம்மை அடியவராகவும் பாவிக்கின்ற) முடிந்தே (வழி முறைப் படியே ஆகும்).

விளக்கம்:

காலையிலும் மாலையிலும் மனதாலும் அதன் பிறகு அதற்கு ஏற்றபடி உடலாலும் வழிபாடு செய்து சிந்தித்துக் கொண்டே இருப்பேன். எப்போதும் எமக்கு எஜமானராக இருக்கின்ற ஒருவனையும் நினைப்பதை அருளுபவனுமாகிய அவனின் திருவடிகளை போற்றி வணங்குவேன். வானவர்களுக்கு எல்லாம் அதிபதியாக இருக்கின்ற இறைவனை தினம் தோறும் இவ்வாறு நான் போற்றி வணங்குவது எல்லாமே இறைவனை எஜமானராகவும் எம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறைப் படியே ஆகும்.

பாடல் #1505

பாடல் #1505: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

அண்ணலை வானவ ராயிரம் பேர்சொல்லி
யுன்னுவ ருள்மகிழ்ந் துண்ணின் றடிதொழக்
கண்ணவ னென்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அணணலை வானவ ராயிரம பெரசொலலி
யுனனுவ ருளமகிழந துணணின றடிதொழக
கணணவ னெனறு கருது மவரகடகுப
பணணவன பெரனபு பறறிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடி தொழ
கண் அவன் என்று கருதும் அவர்கட்கு
பண் அவன் பேர் அன்பு பற்றி நின்றானே.

பதப்பொருள்:

அண்ணலை (அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை) வானவர் (அடியவர்களாகிய வானவர்கள்) ஆயிரம் (ஆயிரம் விதமான) பேர் (பெயர்களை) சொல்லி (சொல்லி போற்றி)
உன்னுவர் (தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து) உள் (உள்ளம்) மகிழ்ந்து (மகிழ்ந்து) உள் (தமக்குள்) நின்று (நிற்கின்ற) அடி (அவனது திருவடியை) தொழ (தொழுவார்கள்)
கண் (தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன்) அவன் (அவனே) என்று (என்று) கருதும் (எண்ணுகின்ற) அவர்கட்கு (அவர்களுக்கு உள்ளே இருந்து)
பண் (இலயிக்கின்ற இசையைப் போல) அவன் (அந்த இறைவன்) பேர் (மாபெரும்) அன்பு (அன்பு காட்டி) பற்றி (அவர்களை அரவணைத்து) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்:

அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை அடியவர்களாகிய வானவர்கள் ஆயிரம் விதமான பெயர்களை சொல்லி போற்றி தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து உள்ளம் மகிழ்ந்து தமக்குள் நிற்கின்ற அவனது திருவடியை தொழுவார்கள். தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன் அவனே என்று எண்ணுகின்ற அவர்களுக்கு உள்ளே இருந்து இலயிக்கின்ற இசையைப் போல அந்த இறைவன் மாபெரும் அன்பு காட்டி அவர்களை அரவணைத்து நிற்கின்றான்.

பாடல் #1506

பாடல் #1506: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

வாசித்தும் பூசித்து மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்கில்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசத் திருத்த நினைவறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வாசிததும பூசிதது மாமலர கொயதிடடும
பாசிக குளததிலவீழ கலலா மனமபாரகில
மாசறற சொதி மணிமிடற றணணலை
நெசித திருதத நினைவறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்து இட்டும்
பாசி குளத்தில் வீழ் கல் ஆய் மனம் பார்கில்
மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை
நேசத்து இருத்த நினைவு அறியாரே.

பதப்பொருள்:

வாசித்தும் (இறைவனை போற்றி பாடியும் மந்திரங்களை செபித்தாலும்) பூசித்தும் (பூஜை செய்தாலும்) மா (அதிக அளவில்) மலர் (மலர்களை) கொய்து (கொய்து வந்து) இட்டும் (சாற்றினாலும்)
பாசி (பாசி படிந்த) குளத்தில் (குளத்தில்) வீழ் (விழுந்த) கல் (கல்லை) ஆய் (போலவே) மனம் (மனம் மாயையில் மூழ்கி இருக்கின்ற நிலையை) பார்கில் (பார்த்தால்)
மாசு (மாசு மரு எதுவும்) அற்ற (இல்லாத தூய்மையான) சோதி (சோதியாக) மணி (நீல நிற) மிடற்று (கழுத்தைக் கொண்டு) அண்ணலை (அனைத்திற்கும் எஜமானராக இருக்கின்ற இறைவனை)
நேசத்து (தங்களின் தூய்மையான அன்பில்) இருத்த (வைத்து இருக்கும்) நினைவு (எண்ணத்தை அவர்கள்) அறியாரே (அறியாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை போற்றி பாடியும் மந்திரங்களை செபித்தாலும், பூஜை செய்தாலும், அதிக அளவில் மலர்களை கொய்து வந்து சாற்றினாலும், பாசி படிந்த குளத்தில் விழுந்த கல்லை போலவே மனம் மாயையில் மூழ்கி இருக்கின்ற நிலையை பார்த்தால் மாசு மரு எதுவும் இல்லாத தூய்மையான சோதியாக நீல நிற கழுத்தைக் கொண்டு அனைத்திற்கும் எஜமானராக இருக்கின்ற இறைவனை தங்களின் தூய்மையான அன்பில் வைத்து இருக்கும் எண்ணத்தை அவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

கருத்து:

பாசி நிறைந்த குளத்தில் கல் விழுகின்ற போது சிறிது நேரம் பாசியானது அகன்று பின்னர் மூடிக்கொள்ளும். அதுபோல மாயையில் மூழ்கி இருக்கின்ற மனமானது பூசை முதலியன செய்யும் போது சிறிது அளவு மனம் தெளியும், பின்னர் அதனை அன்போடு தொடர்ந்து செய்யாமல் போனால் மறுபடியும் மாயையில் மூழ்கிவிடும். எனவே மாயையில் மூழ்கி இருக்கின்ற மனதில் இறைவனைப் பற்றிய எண்ணம் வருவதில்லை.

பாடல் #1495

பாடல் #1495: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

மேவிய சற்புத்திர மார்க மெய்த்தொழில்
தாவிப் பதாஞ்சக மார்கஞ் சகத்தொழி
லாவ திரண்டு மகன்று சகமார்கத்
தேவியோ டொன்றல் சன்மார்கத் தெளிவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெவிய சறபுததிர மாரக மெயததொழில
தாவிப பதாஞசக மாரகஞ சகததொழி
லாவ திரணடு மகனறு சகமாரகத
தெவியொ டொனறல சனமாரகத தெளிவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேவிய சற் புத்திர மார்கம் மெய் தொழில்
தாவிப்பது ஆம் சக மார்கம் சக தொழில்
ஆவது இரண்டும் அகன்று சக மார்க
தேவியோடு ஒன்றல் சன் மார்க தெளிவே.

பதப்பொருள்:

மேவிய (உறவினால்) சற் (உண்மையான தந்தையாக இறைவனையும்) புத்திர (அவருக்கு பிள்ளையாக தம்மையும் பாவிக்கின்ற) மார்கம் (வழி முறையானது) மெய் (உடலால் செய்கின்ற) தொழில் (அனைத்து விதமான செயல்கள் மற்றும்)
தாவிப்பது (சரியாக செய்ய வைக்க) ஆம் (இறை சக்தி உடனிருந்து) சக (தோழமை) மார்கம் (வழி முறையில்) சக (மனதுடன் எப்போதும் சேர்ந்து இருந்து செய்கின்ற) தொழில் (அனைத்து விதமான செயல்கள்)
ஆவது (ஆகிய இந்த) இரண்டும் (இரண்டு விதமான செயல்களையும் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணமும் நமது உடலும் மனமும் இவற்றை செய்கின்றன என்கின்ற எண்ணமும்) அகன்று (நீங்கும் படி செய்து) சக (தோழமை) மார்க (வழி முறையில்)
தேவியோடு (தம்மோடு எப்போதும் தொடர்ந்து வருகின்ற இறை சக்தியோடு) ஒன்றல் (ஒன்றாக சேர்ந்து அனைத்தையும் இறை சக்தியே செய்கிறது என்கின்ற எண்ணத்தில் இருப்பதே) சன் (உண்மை) மார்க (வழி முறையில் மேன்மையான நிலையில்) தெளிவே (கிடைக்கின்ற தெளிவு ஆகும்).

விளக்கம்:

உறவினால் உண்மையான தந்தையாக இறைவனையும் அவருக்கு பிள்ளையாக தம்மையும் பாவிக்கின்ற வழி முறையானது உடலால் செய்கின்ற அனைத்து விதமான செயல்கள் மற்றும் சரியாக செய்ய வைக்க இறை சக்தி உடனிருந்து தோழமை வழி முறையில் மனதுடன் எப்போதும் சேர்ந்து இருந்து செய்கின்ற அனைத்து விதமான செயல்கள் ஆகிய இந்த இரண்டு விதமான செயல்களையும் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணமும், நமது உடலும் மனமும் இவற்றை செய்கின்றன என்கின்ற எண்ணமும் நீங்கும் படி செய்து, தோழமை வழி முறையில் தம்மோடு எப்போதும் தொடர்ந்து வருகின்ற இறை சக்தியோடு ஒன்றாக சேர்ந்து அனைத்தையும் இறை சக்தியே செய்கிறது என்கின்ற எண்ணத்தில் இருப்பதே உண்மை வழி முறையில் மேன்மையான நிலையில் கிடைக்கின்ற தெளிவு ஆகும்.

பாடல் #1496

பாடல் #1496: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

பூசித்தல் வாசித்தல் போற்றல் சேவித்திட
லாசற்ற நற்றவம் வாய்மை யழுக்கின்மை
நேசித்திட் டன்னமு நீர்சுத்தி செய்தல்மற்
றாசற்றல் சற்புத்திர மார்க மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பூசிததல வாசிததல பொறறல செவிததிட
லாசறற நறறவம வாயமை யழுககினமை
நெசிததிட டனனமு நீரசுததி செயதலமற
றாசறறல சறபுததிர மாரக மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பூசித்தல் வாசித்தல் போற்றல் சேவித்திடல்
ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை
நேசித்து இட்ட அன்னமும் நீர் சுத்தி செய்தல் மற்று
ஆசு அற்றல் சற் புத்திர மார்கம் ஆமே.

பதப்பொருள்:

பூசித்தல் (பூஜை செய்தல்) வாசித்தல் (மந்திரங்களை பாடுதல்) போற்றல் (போற்றி வணங்குதல்) சேவித்திடல் (தரிசனம் செய்தல்)
ஆசு (குற்றம்) அற்ற (இல்லாத) நல் (நன்மையான) தவம் (தவத்தை மேற்கொள்ளுதல்) வாய்மை (உண்மையே பேசுதல்) அழுக்கு (அழுக்கு) இன்மை (இல்லாமல் சுற்றுப் புறத்தையும் தம்மையும் சுத்தமாக வைத்தல்)
நேசித்து (அன்போடு) இட்ட (சமைத்து வைத்த) அன்னமும் (உணவை நைவேத்யமாக படைத்தல்) நீர் (நீரினால்) சுத்தி (சுத்தம்) செய்தல் (செய்து சமர்ப்பணம் செய்தல்) மற்று (ஆகிய இவை அனைத்தையும்)
ஆசு (தாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம்) அற்றல் (இல்லாமல் இருந்து செய்வதே) சற் (உண்மையான தந்தையாக இறைவனையும்) புத்திர (அவரின் பிள்ளையாக தன்னையும் பாவித்து) மார்கம் (அவனை அடைகின்ற வழி முறை) ஆமே (ஆகும்).

விளக்கம்:

இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவருக்கு பூஜை செய்தல், மந்திரங்களை பாடுதல், போற்றி வணங்குதல், தரிசனம் செய்தல், குற்றம் இல்லாத நன்மையான தவத்தை மேற்கொள்ளுதல், உண்மையே பேசுதல், அழுக்கு இல்லாமல் சுற்றுப் புறத்தையும் தம்மையும் சுத்தமாக வைத்தல், அன்போடு சமைத்து வைத்த உணவை நைவேத்யமாக படைத்தல், நீரினால் சுத்தம் செய்து சமர்ப்பணம் செய்தல் ஆகிய இவை அனைத்தையும் தாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம் இல்லாமல் இருந்து செய்வதே இறைவனின் பிள்ளையாக தன்னை பாவித்து அவனை அடைகின்ற வழி முறை ஆகும்.

பாடல் #1497

பாடல் #1497: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

அறுகாற் பறவை யலர்தேர்ந் துழலு
மறுகால் நரையன்னந் தாமரை நீலங்
குறுகார் நறுமலர் கொய்வன கண்டுஞ்
சிறுகா லரனெறி செல்லுகி லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறுகாற பறவை யலரதெரந துழலு
மறுகால நரையனனந தாமரை நீலங
குறுகார நறுமலர கொயவன கணடுஞ
சிறுகா லரனெறி செலலுகி லாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும்
மறு கால் நரை அன்னம் தாமரை நீலம்
குறுகார் நறு மலர் கொய்வன கண்டும்
சிறு கால் அரன் நெறி செல்லு கிலாரே.

பதப்பொருள்:

அறு (ஆறு) கால் (கால்களைக் கொண்ட) பறவை (தேனீக்கள்) அலர் (தேனுள்ள மகரந்த மலர்களை) தேர்ந்து (ஆராய்ந்து தேடி) உழலும் (அலைந்து தேனை சேகரிப்பதையும்)
மறு (இன்னொரு) கால் (வகையில்) நரை (வெள்ளை நிறத்தில் உள்ள) அன்னம் (அன்னப் பறவைகள்) தாமரை (தாமரை மலர்களையும்) நீலம் (நீலோற்பல மலர்களையும் தேடிச் சென்று அதன் தண்டுகளில் இருக்கும் பாலை சேகரிப்பதையும்)
குறுகார் (இறைவனின் அடியவர்கள்) நறு (நறுமணம் மிக்க) மலர் (மலர்களை) கொய்வன (கொய்து மாலையாக கோர்த்து இறைவனுக்கு சாற்றி வணங்கி அருளை சேகரிப்பதையும்) கண்டும் (பார்த்தும்)
சிறு (சிறுது) கால் (காலம் கூட) அரன் (தமக்கு தந்தை போல அரனாக இருக்கின்ற இறைவனின்) நெறி (அருளைப் பெறும் வழியில்) செல்லு (செல்லாமல்) கிலாரே (இருக்கின்றார்கள்).

விளக்கம்:

ஆறு கால்களைக் கொண்ட தேனீக்கள் தேனுள்ள மகரந்த மலர்களை ஆராய்ந்து தேடி அலைந்து தேனை சேகரிப்பதையும் இன்னொரு வகையில் வெள்ளை நிறத்தில் உள்ள அன்னப் பறவைகள் தாமரை மலர்களையும் நீலோற்பல மலர்களையும் தேடிச் சென்று அதன் தண்டுகளில் இருக்கும் பாலை சேகரிப்பதையும் இறைவனின் அடியவர்கள் நறுமணம் மிக்க மலர்களை கொய்து மாலையாக கோர்த்து இறைவனுக்கு சாற்றி வணங்கி அருளை சேகரிப்பதையும் பார்த்தும் சிறுது காலம் கூட தமக்கு தந்தை போல அரனாக இருக்கின்ற இறைவனின் அருளைப் பெறும் வழியில் செல்லாமல் இருக்கின்றார்கள்.